நெருங்கும் விநாயகர் சதுர்த்தி.. இந்து அமைப்பு வழக்கு! நன்கொடை வசூலிப்பது யார்? ஐகோர்ட் கேள்வி
சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலைகளை வைப்பதில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று இந்து அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் விநாயகர் ஊர்வலத்துக்காக நன்கொடைகள் வசூல் செய்வது யார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.
Recommended Video
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் ஆகஸ்ட் 31ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
குறிப்பாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகிய அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை முன்னெடுத்து செல்கின்றன. அப்போது ஒரு சில இடங்களில் மோதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால் மற்ற பண்டிகைகளைவிட விநாயகர் சதுர்த்திக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.
ஜெயிச்சது ஓபிஎஸ்சா, எடப்பாடியா.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. அதிமுக தீர்ப்பில் 6 குழப்பங்கள்!
இந்து முன்னேற்ற கழகம்
இதற்கிடையே திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழக தலைவரும், வழக்கறிஞருமான கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் அமைப்பதில் கட்டுப்பாடு விதிக்க அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
ஐகோர்டில் வழக்கு
அந்த மனுவில் தெரிவித்து இருப்பதாவது, "விநாயகர் சதுர்த்தி நாளில் பொது இடங்களிலும், சாலைகளிலும், பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் அனுமதியின்றி விநாயகர் சிலைகள் வைக்கப்படுகின்றன. இந்த சிலைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், சட்டம் - ஒழுங்கு பிரச்சனைக்கும் காரணமாகிவிடுகிறது.
விதிகள் இல்லை
விநாயகர் சிலைகள் வைப்பதையும், நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதையும் முறைப்படுத்த எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக இந்து அமைப்புகள் நன்கொடை வசூலிப்பதையும் கண்காணிக்க வேண்டும்." எனவும் அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
விசாரணை
"அனைத்து மாவட்டங்களிலும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என இந்து அமைப்புகளை அறிவுறுத்தும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்." எனவும் மனுவில் கோபிநாத் கோரிக்கை விடுத்து இருக்கிறார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
நன்கொடை வசூலிப்பது யார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விநாயகர் சதுர்த்தி ஊர்வலகத்துக்காக நன்கொடை வசூலிப்பவர்கள் யார் என கேள்வி எழுப்பினர். இந்து அமைப்புகளே நன்கொடைகளை வசூலிப்பதாக மனுதாரர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அமைப்புகளை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து புதிய மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தி இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்தனர்.