ஆள் பலம் + வியூக பலம் + பண பலம்.. எங்கிருந்தோ ஆட்டும் "அந்த" கை.. ஓபிஎஸ் பின்னால் இருப்பது அவராம்?
சென்னை: தெளிவு.. சரியான திட்டமிடல்.. இதுவரை இல்லாத வியூகம் என்று முறையாக காய் நகர்த்திக்கொண்டு இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம்! அதிமுகவில் ஒற்றை தலைமையை கைப்பற்ற தீவிரமாக முயற்சித்து வரும் எடப்பாடிக்கு அடுத்தடுத்து பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறார் ஓ பன்னீர்செல்வம்.. விட்டுக்கொடுத்தே பழகிய ஓ. பன்னீர்செல்வம் இப்படி முஷ்டி முறுக்குவதற்கு பின் வேறு சில காரணங்கள் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. அது என்ன காரணம்?
அதிமுகவில் பொதுவாகவே ஓபிஎஸ் கொஞ்சம் விட்டுக்கொடுத்தே பழகியவர். ஜெயலலிதா மரணத்திற்கு பின் சசிகலாவிற்காக முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க போய் பின் தர்மயுத்தம் செய்தார். பின்னர் எடப்பாடியிடம் முதல்வர் பதவியை இழந்து.. துணை முதல்வர் என்ற நிலைக்கு சென்றார்.
இந்த பதவியை கூட பிரதமர் மோடி சொன்னதால்தான் ஓபிஎஸ் வேண்டா வெறுப்பாகத்தான் ஏற்றுக்கொண்டார் (இதை நான் சொல்லவில்லை.. அவரே சொல்லி இருக்கிறார்). அதன்பின் கூட கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியை பெற்றுக்கொண்டு.. கூடவே அதே அதிகாரம் கொண்ட இணை ஒருங்கிணைப்பளார் பதவியை எடப்பாடிக்கு கொடுக்க ஒப்புக்கொண்டார்.

திமிறி எழுந்துள்ளார்
அதன்பின் முதல்வர் வேட்பாளர் வாய்ப்பையும் விட்டுக்கொடுத்தார்.. பின்னர் எதிர்கட்சித் தலைவர் பதவியையும் விட்டுக்கொடுத்தார். இப்படி ஒவ்வொரு முறையும் அதிமுகவில் தனக்கு பெரிய பதவி தேவைப்படும் போதெல்லாம் கொஞ்சம் முரண்டு பிடித்துவிட்டு.. பின்னர் "here we go again" என்று சொல்வது போல விட்டுக்கொடுத்து இரண்டாம் இடத்தில் இருக்க சம்மதிப்பார். இப்படி இரண்டாம் இடத்திலேயே இருந்து பழக்கப்பட்ட ஓபிஎஸ் இப்போது ஒற்றை தலைமைக்கு எதிராக முஷ்டி முறுக்கி இருக்கிறார். எப்போதும் பெரிதாக மோதாத ஓபிஎஸ்.. இப்போது "சண்டை செய்ய" தொடங்கி உள்ளார்.

போஸ்டர்
அதிலும் ஒற்றை தலைமை விவகாரம் தலையெடுத்ததில் இருந்தே முறையாக வியூகம் வகுத்து ஓபிஎஸ் சண்டை செய்கிறார். ஒற்றை தலைமை விவகாரம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தலையெடுத்து அன்று இரவே சென்னை முழுக்க ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தனது மகன் ஜெயபிரதீப்பை இறக்கி சென்னை மட்டுமின்றி சேலம், தென் மாவட்டங்கள் என்று எல்லா பக்கமும் போஸ்டர் ஒட்ட தொடங்கினார். அப்போதே எடப்பாடிக்கு எதிராக யுத்தத்திற்கு ஓபிஎஸ் தயாராகிவிட்டது தெரிந்தது.

மாவட்ட செயலாளர்களுடன் பேச்சு
இந்த போஸ்டர் அஸ்திரத்தை எடப்பாடியே எதிர்பார்க்காத நிலையில், உடனுக்குடன் மாவட்ட செயலாளர்களுக்கு போன் செய்து ஆதரவும் திரட்டி வருகிறார் ஓபிஎஸ். இதில் சிலர் ஓபிஎஸ்ஸுக்கு கிரீன் சிக்னலும் கொடுத்துள்ளனர். அவருக்கு ஆதரவாக 30 மாவட்ட செயலாளர்கள் இருப்பதாக இன்று வைத்தியலிங்கம் குறிப்பிட்டு இருந்தார். மாவட்ட செயலாளர்கள் ஆதரவு பெரும்பாலும் எடப்பாடிக்கு இருப்பதாக கருதப்படும் நிலையில்தான் வைத்தியலிங்கம் இப்படி தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த கூட்டம்
ஒரு பக்கம் மாவட்ட செயலாளர்களிடம் பேசி வரும் ஓபிஎஸ்.. இன்னொரு பக்கம் பொதுக்குழு உறுப்பினர்களிடமும் தன்னுடைய டீம் மூலம் பேசி வருகிறார். பொதுக்குழு உறுப்பினர்கள் மொத்தம் 2300 பேர் உள்ளனர். பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானத்தை முறியடிக்க இவர்கள் ஆதரவு தேவை. அதனால் இவர்களிடம் ஓபிஎஸ் தரப்பு பேசி வருகிறது. அதோடு இன்னொரு பக்கம் நாளிதழ்களில் முழு பக்கம் விளம்பரம் கொடுத்து.. ஜெயலலிதாவின் தேர்வு, சாய்ஸ் நான்தான் என்பதையும் அழுத்தம் திருத்தமாக ஓபிஎஸ் சொல்லி வருகிறார்.
Recommended Video

சட்ட ரீதியாக ஆலோசனை
இது போக சட்ட ரீதியாகவும் சென்னை ஹைகோர்ட் மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் அணியில் உள்ள தனது ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் பேசி வருகிறார். அதிமுக பைலா படி ஒற்றை தலைமை தீர்மானம் உள்ளிட்ட எந்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றாலும் அதற்கு ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து வேண்டும். அதாவது ஓபிஎஸ் கையெழுத்து தேவை. அது தனி தீர்மானமாக இருந்தாலும். இந்த ஒரு பாயிண்டை வைத்துதான் ஓபிஎஸ் எடப்பாடி தரப்பை ஆட வைத்துக்கொண்டு இருக்கிறார்.

கையெழுத்து போட மாட்டேன்
அதிமுக விதிப்படி.. பொதுக்குழு நினைத்தால் கூட ஒருங்கிணைப்பாளரை நீக்க முடியாது. தொண்டர்களே ஒருங்கிணைப்பாளரை 5 வருடத்திற்கு ஒருமுறை தேர்வு செய்ய முடியும் . இதன் காரணமாகவே ஓபிஎஸ் கொஞ்சம் முஷ்டியை முறுக்கி வருகிறார். ஆனால் இந்த சட்டம் இன்னும் அதிமுகவில் அமலுக்கு வராத காரணத்தால் சில சட்ட சிக்கல்கள் உள்ளன. எனவேதான் ஓபிஎஸ் சட்ட வல்லுனர்களை ஆலோசித்து வருகிறார்.

பின்னால் இருக்கும் அந்த கை
அதை முன்னிட்டே இன்று பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என்றும் எடப்பாடிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார். மேலும் எடப்பாடி இதற்கு பதில் அளிக்கவில்லை என்றால் கோர்ட் படியேறவும் அவர் தயாராக இருக்கிறார் என்கிறார்கள். ஓபிஎஸ் இப்படி அதிரடியாக அடுத்தடுத்து செயல்பட வேறு ஒருவரும் அவருக்கு உறுதுணையாக இருப்பதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் பின்னால் இருக்கும் வேறு ஒரு கைதான் அவருக்கு இந்த சிறப்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறதாம். அதாவது போஸ்டர் தொடங்கி சண்டை செய்வது வரை அனைத்திற்கும் பின் வேறு கை இருக்கிறதாம்.

ஆள் பலம் + வியூக பலம் + பண பலம்
இப்போ விட்டுக்கொடுத்தீங்கன்னா அவ்வளவுதான். கட்சியில் நீங்களும் ஓரங்கட்டப்படுவீர்கள்.. பிறகு உங்கள் மகன்களும் ஓரம் கட்டப்படுவார்கள் என்று ஓபிஎஸ்ஸுக்கு ஆலோசனை வழங்கி வழங்கி வருகிறதாம் அந்த கை. அதோடு சென்னையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தொண்டர்களை இறக்கியது, வியூக ரீதியாக ஆலோசனை வழங்குவது, கூட்டங்களை நடத்த பணம் கொடுத்தது.. போனில் அடிக்கடி "ரூட்" சொல்வது.. என்று பல்வேறு உதவிகளையும் அந்த கைதான் செய்து வருகிறதாம். அதிமுகவை எப்படியாவது கைப்பற்ற துடிக்கும் ஓபிஎஸ்ஸின் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் கைதான் அது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்!












Click it and Unblock the Notifications