அடுத்த 12 மாதங்கள் ரொம்ப முக்கியம்.. தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்? ஸ்டாலின் டிக் அடித்த அதிகாரி?
சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி கோட்டை வட்டாரத்தில் தீவிரமாக உலவி வருகிறது. தற்போது தமிழ்நாட்டின் டிஜிபியாக இருப்பவர் சங்கர் ஜிவால். இவர் அடுத்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். இவர் தற்போது தேர்தல் நெருங்குவதால் தனக்கு பணி நீட்டிப்பு கிடைக்கும் என்று நினைக்கிறாராம். ஆனால் அரசு புதிய டிஜிபியை கொண்டு வருவதில் ஆர்வமாக தீர்க்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சங்கர் ஜிவால் 1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. முதுநிலை மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரி. தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்தரகாண்டின் குமாவுனி மொழியில் புலமை பெற்றவர். என்ஜினீயரிங் படித்து முடித்ததும் செய்ல், பெல் நிறுவனங்களில் சிறிது காலம் பொறியாளராக பணியாற்றினார். பின்னர் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். சேலம், மதுரை எஸ்.பி, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர், திருச்சி காவல் ஆணையர், உளவுப் பிரிவு டிஐஜி, ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி ஆகிய முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர்.
சங்கர் ஜிவால் பதவிக்காலம் முடிவதால் முதல்வர் ஸ்டாலின் இப்போதே அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான திட்டமிடல்களை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது உள்ள லிஸ்டில் சந்தீப்ராய் ரத்தோர், ராஜீவ் குமார், சீமா அகர்வால் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக தமிழக அரசு தேர்வு செய்து அனுப்பும் பெயர்களை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்யும். தமிழக உள்துறை அதிகாரிகள் மற்றும் தற்போதைய டிஜிபி உடன் ஆலோசனைகளை செய்வார்கள். இந்த ஆலோசனைகளை செய்த பின் லிஸ்ட் வடிகட்டப்பட்டு மீண்டும் தமிழக முதல்வருக்கு அனுப்பப்படும்.
பின்னர் அந்த லிஸ்டில் இருந்து மீண்டும் ஒருவரை டிக் அடித்து முதல்வர் தேர்வு செய்வார். இதற்காக சென்னை மற்றும் டெல்லியில் ஆலோசனைகள் கூட நடக்கும். அபய்குமார் சிங், வன்னி பெருமாள், சந்தீப்ராய் ரத்தோர், ராஜீவ் குமார், சீமா அகர்வால், வினித் தேவ் வான்கடே, மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன் என்று மொத்தமாக 8 பேரின் பெயர்கள் இந்த லிஸ்டில் உள்ளன. இதில் சந்தீப்ராய் ரத்தோர், ராஜீவ் குமார், சீமா அகர்வால் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
இதில் 3 பேர் பெயரை ஸ்டாலினுக்கு டெல்லி திருப்பி அனுப்பும். அதன்பின் அதில் ஸ்டாலின் ஒருவரை தேர்வு செய்வார். இதில் சங்கர் ஜிவால் சிலரின் பெயரை பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஸ்டாலினின் தேர்வாக அதிகம் இருப்பது சந்தீப் ராய் ரத்தோர் என்கிறார்கள். சந்தீப் ராய் ரத்தோர், சென்னை மாநகர காவல்துறையின் முன்னாள் ஆணையர். இவர் 1992-ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர். 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்வதில் முக்கியப் பங்கு வகித்தவர்.
சமீபத்தில், சந்தீப் ராய் ரத்தோர் சென்னை காவல் ஆணையர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, தமிழ்நாடு போலீஸ் பயிற்சிக் கழகத்திற்கு மாற்றப்பட்டார். இது, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். ஆனால் இவர் மிகவும் திறமையான அதிகாரி. அதோடு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வருகிறது. அடுத்த 1 வருடம் மிக முக்கியம். ஆளும் கட்சிக்கு நம்பகமான ஆள் இந்த பொறுப்பில் இருக்க வேண்டும்.
தேர்தல் பணிகளுக்கு இடையே சட்ட ஒழுங்கை கவனிப்பது மிக மிக சவாலான விஷயம். இப்படிப்பட்ட நிலையில்தான் இவரை கொண்டு வருவதற்கு முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக முயல்வதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications