அதிமுகவில் 2 ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு.. யார் இந்த இன்பதுரை - தனபால்? பின்னணி இதுதான்
சென்னை: அதிமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
அதிமுகவில் மாநிலங்களவை எம்பி (ராஜ்யசபா எம்பி) தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அதிமுகவின் மூத்த தலைவர் கேபி முனுசாமி இன்று வெளியிட்டார்.

இதில் இன்பதுரை திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். ராதாபுரம் சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு இன்பதுரை வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் அப்பாவுவை வெறும் 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார்.
அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை போட்டியிட்டார். இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக தற்போதைய சபாநாயகர் அப்பாவு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்பாவுவிடம் 5,925 ஓட்டுகள் வித்தியாசத்தில் இன்பதுரை தோற்றார். இன்பதுரை அடிப்படையில் வழக்கறிஞர். இவர் அதிமுகவின் வழக்கறிஞர் அணியின் செயலாளராக செயல்பட்டு வருகிறார். தற்போது எடப்பாடி பழனிச்சாமியுடன் நெருக்கமாக இருக்கிறார். அதிமுக விவகாரங்கள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்பதுரை வாதாடி வெற்றி பெற்றுள்ளார்.
குறிப்பாக ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையேயான அதிமுக பொதுக்குழு பிரச்சனை, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட வழக்குகளில் இன்பதுரை வாதாடி எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார். இதற்கு பரிசாக தான் அவருக்கு ராஜ்யசபா எம்பி சீட் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோல், அதிமுகவின் இன்னொரு வேட்பாளராக ம. தனபால் செங்கல்பட்டை சேர்ந்தவர். இவர் எம்ஏ, எம்எல், எம்பிஏ, பிஎச்டி படிப்பை படித்தவர். முன்னாள் எம்எல்ஏவான இவர் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவராக உள்ளார். மாவட்ட நிர்வாக குழு முன்னாள் தலைவராக செயல்பட்டு வந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications