யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..!
சென்னை: ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை.
மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ்.
ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர்.

விமர்சன அறிக்கைகள்
அரசியல் கட்சித் தலைவர்கள் விடுக்கும் அறிக்கைகளில் 'கோயபல்ஸ் பிரச்சாரம்' என்ற சொற்றொடர் அதிகமாக இடம்பெறுவதை அறிந்திருப்பீர்கள். அதாவது யாரை விமர்சித்து அறிக்கை விடப்பட்டுகிறதோ அந்த நபரை கோயபல்ஸுடன் ஒப்பிட்டு அவரை போல் பொய் பேசுவதாக குற்றஞ் சாட்டப்படுவதாகும். அதேபோல் ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியினரை பார்த்தோ அல்லது எதிர்க்கட்சியினர் ஆளுங்கட்சியினரை நோக்கியோ கோயபல்ஸ் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக பொதுக்கூட்டங்களில் பேசியிருப்பதை நீங்கள் கேட்டிருக்கலாம்.

பொய் மன்னன்
அதென்ன கோயபல்ஸ் பிரச்சாரம் என்றால், ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும் வரை அதைப்பற்றி திரும்ப திரும்ப உரத்த குரலில் பேச வேண்டும் என்பது தான் கோயபல்ஸின் தத்துவம். இதைத் தான் ஹிட்லருக்காக செய்து வந்தார் அவர். யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் நிகழ்த்திய கொடுமைகளை நியாயப்படுத்தி பேசி அவருக்காக வாழ்நாள் முழுவதும் வக்காலத்து வாங்கி வந்தார் கோயபல்ஸ். தனது தந்திரமான பேச்சால் மக்களை ஏமாற்றியவர்.

உணர்வுப்பூர்வமாக
இப்போது ஒருவர் ஒரு இடத்தில் பொய் கூறுகிறார் என்றால் மெலிதாக கூறிவிட்டு கடந்துவிடுவார். திரும்பவும் அதைப்பற்றி அந்த இடத்தில் பேச்சு வராதவாறு அவர் பார்த்துக்கொள்வார். ஆனால் கோயபல்ஸ் அப்படியில்லை, தாம் சொல்வது வடிகட்டிய பொய் தான் என்றாலும் அதை நயமாக எடுத்துரைத்து திரும்ப திரும்ப அதைப்பற்றி பேசி அதைக்கேட்டவர்கள் அனைவரையும் ''அட உண்மைதாம்பா'' என நினைக்க வைத்துவிடுவார். மக்களிடம் எந்த மாதிரி பேசினால் அவர்களுக்குள் தனது பொய்யை உண்மை என விதைக்க முடியும் என்ற வித்தையை கற்று வைத்திருந்தார் கோயபல்ஸ்.

கோயபல்ஸ் திறமை
அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகர்கள், தேர்தல் வியூக வகுப்பாளர்கள் என தற்போது இருந்தாலும், நூறாண்டுகளுக்கு முன்பே இதனை உலகிற்கு அறிமுகம் செய்தவர் ஹிட்லர். ஆம், தனது நாஜி கட்சிக்கு ஆலோசகராகவும், வியூக வகுப்பாளராகவும், கொள்கை பரப்புச் செயலாளராகவும் கோயபல்ஸை பணியமர்த்தி தனக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டார் ஹிட்லர். கொடூரனான ஹிட்லரையே தனது பேச்சால் மயக்கியவர் கோயபல்ஸ் என்றால் அவரின் திறமையை யூகித்துக்கொள்ளுங்கள்.

பிரச்சார தந்திரம்
கோயபல்ஸ் 3 வகை பிரச்சார தந்திரங்களை கையாண்டார். முனுமுனுப்பு பிரச்சாரம், ஹேஷ்யங்கள் பிரச்சாரம், பொதுக்கூட்டப் பிரச்சாரம் என்ற மூன்றிலும் கோயபல்ஸின் தந்திரங்கள் தாண்டவமாடின. சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இடம்பெறும் பிரபல வசனமான '' ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால், முதலில் அவனது ஆசையை தூண்ட வேண்டும் '' என்பதற்கேற்ப பொய் பேசுவதில் தன்னை மிஞ்சி ஒருவர் உலகில் இருக்கக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு விட்டுச்சென்றவர்.












Click it and Unblock the Notifications