சட்டம் ஒழுங்கில் நம்பர் 1 யார்? மத்திய அரசின் பட்டியல் இதோ! தமிழ்நாட்டுக்கு என்ன இடம்?
சென்னை: எதிர்க்கட்சிகள் சொல்வதைப்போலத் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லையா? சட்டம் ஒழுங்கை சரியாக நிலைநாட்டும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது? மத்திய அரசின் அறிக்கை சொல்லும் உண்மை என்ன?
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் பலியான விவகாரம் தொடர்பாக தமிழக மக்கள் மனதில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகக் காயவே இல்லை. அதற்குள் சென்னையில் பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் மட்டும் மூன்றுக்கும் மேற்பட்ட அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன.

தமிழ்நாட்டில் நடந்துவரும் இந்தச் சம்பவங்களை மனதில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டம் ஒழுங்கு சரியில்லை எனத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை காவல்துறை கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
அதற்கு இப்போது விக்கிரவாண்டி அருகே கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருவது தொடர்பாக எடப்பாடி அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது.
நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று விடியா திமுக முதல்வர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது. அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராயப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் திராணியற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரியச் சிகிச்சை அளிக்கவும், அண்டை மாநில சாராயங்கள் புழங்குவதைத் தடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு தொடர்பாக நேற்று ஒரு பதிவை வெளியிட்ட பழனிசாமி, கடந்த 24 மணிநேரத்திற்குள் வந்த செய்திகள் என்ற ஒரு பதிவில், "புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை, தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை, தேனியில் குண்டர் சட்டத்தில் சிறை சென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி. திமுக அரசு முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை" என்று ஆதங்கப்பட்டு எழுதி இருந்தார். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பிறகு தலித் அமைப்பைச் சேர்ந்த பலரும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக இயக்குநர் ரஞ்சித், இதுதான் சமூகநீதியா என்ற கோணத்தில் பல கேள்விகளை முன்வைத்துள்ளார். இதனால் திமுக மற்றும் தலித் இயக்கத்தினரிடையே ஒரு கருத்தியல் ரீதியான மோதல் நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய சாவு பற்றி நடிகர் விஜய் நேரடியாகக் களத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துப் பேசி ஆறுதல் சொல்லி இருந்தார். அதன்பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கும் விழாவில் பேசிய விஜய், "அரசாங்கம்தான் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்கவேண்டும் என்பது பற்றி நான் எதையும் சொல்லவில்லை.
ஆனால், அரசாங்கத்தைவிட நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பிரச்சினைகளுக்குத் தற்காலிகமான தீர்வுகளை நாடவேண்டாம். போதைப் பொருளைப் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எழுத்துக் கொள்ளுங்கள்" என்று பேசியிருந்தார். இந்தப் பேச்சில் அவர் திமுக ஆளும் கட்சியை விமர்சிக்கவில்லை. சட்டம் ஒழுங்கு குறித்த எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு ஆதரவும் அளிக்கவில்லை.
இந்நிலையில்தான் சபாநாயகர் அப்பாவு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற குற்றச்சாட்டு பற்றிப் பேச வந்தபோது, “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனைத்து சமூகத்தினர் வழிபாட்டுத் தலங்களும் அமைதியாக இருந்து வருகிறது. யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் விரும்பும் வழிபாட்டுத்தலத்திற்கு எந்தத் தடையும் இல்லாமல் போய் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.
ஆகவே இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான். நமது மாநிலம் அமைதியான மாநிலம் என்பதால்தான் செஸ் ஒலிம்பியாட் இங்கே நடத்தினோம். அதேபோல் கேலோ போட்டியும் சென்னையில்தான் நடத்தப்பட்டது. தொழில்துறையில் 14வது இடத்திலிருந்து நம் மாநிலம் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் தொழில்துறையில் 2வது இடத்திற்கு வந்துள்ளது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே தொழில் தொடங்க விருப்பத்தோடு வருகின்றன.
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு ஏறக்குறைய 6.64 லட்சம் கோடி நிதியை முதல்வர் ஸ்டாலின் மாநிலத்திற்கு கொண்டு வந்துள்ளார். சட்டம் ஒழுங்கு சரியாக இல்லாத மாநிலத்தில் யார் முதலீடு செய்ய முன்வருவார்கள் சொல்லுங்கள்? முதல்வரே சட்டப்பேரவையில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எவ்வளவு குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை விளக்கிப் பேசி இருக்கிறார். ஒரு குற்றம் நடந்தவுடன் காவல்துறை எந்தவித தலையீடுகளும் இல்லாமல் சுதந்தரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்தால், நீங்கள் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனச் சொல்லலாம்" என்று கூறியிருந்தார்.

எதிர்க்கட்சியினர் பலரும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்வது உண்மையா? மத்திய அரசின் அறிக்கை என்ன சொல்கிறது? தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு தரவரிசையில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? இப்படியான கேள்விகளுக்கு விடை தேட முயன்றோம்.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் சட்டம் ஒழுங்கு பற்றிய ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன் சார்பில் மாதம் தோறும் தரவரிசை செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி 10-07-2024 இன் அறிக்கை வெளியாகி உள்ளது. இந்தத் தரவு அடிப்படையில் இந்திய அளவில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளது. அதாவது 95.47 புள்ளிகளைப் பெற்று சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் முதல் மாநிலமாக முத்திரைப் பதித்துள்ளது. 2வது இடத்தை 93.96 புள்ளிகளைப் பெற்று மிசோரம் பிடித்துள்ளது. 3ஆவது இடத்தில் தெலங்கானா உள்ளது. அதாவது 91.86 புள்ளிகளைப் பெற்றுள்ளது இந்த மாநிலம்.
கடந்த 30 ஆண்டுகளாக பாஜக ஆண்டு வரும் குஜராத் மாநிலம் இந்தப் பட்டியலில் 80.46 புள்ளிகள் பெற்று 10ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல உத்தரப் பிரதேசம் 91.00 புள்ளிகள் பெற்றும் 4ஆவது இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதையே இந்த அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.












Click it and Unblock the Notifications