யார் இந்த ‘ஜோக் ராஜ்’? டிரெண்டிங் ஆன மளிகைக் கடைக்காரர்?
சென்னை: சமூக ஊடகத்தில் ஜோக்ஸ் சொல்லும் வீடியோக்களை வெளியிட்டுவந்த மளிகை கடைக்காரர் ஒருவர் இரண்டு நாட்களாக டிரெண்டிங் ஆகி இருக்கிறார்.
கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக் முழுக்க டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார் முத்துராஜா. இவர் ஜோக்ஸ் எனப் பேசி பதிவிடும் ரீல்ஸ் இணைய உலகில் தீயாகப் பரவிவருகிறது. இவர் ராமு, சோமு என கேரக்டர்களை வைத்து ஜோக்ஸ் சொல்வதைப் பரிதாபங்கள் சுதாகர் மற்றும் கோபி எடுத்துக் கலாய்த்து வீடியோ போட ஒரே இரவில் புகழ் மழையில் நனைந்து வருகிறார் முத்துராஜா. இவர் யார்? இவருக்கு ஜோக் எழுதித் தருவது யார்?

இந்த முத்துராஜா என்பவர் திருவொற்றியூரில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். தினமும் மளிகைக் கடையில் வியாபாரம் செய்கிறாரோ இல்லையோ ஃபேஸ்புக்கில் நிறையக் குட்டிக்குட்டி ஜோக்ஸ் சொல்லி ரீல்ஸ் போட்டுவிடுவார். அடிப்படையில் சினிமா வெறியர் இந்த முத்துராஜா. அவருக்குள் புதைந்து கிடந்த சினிமா கனவை சமூக ஊடகங்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டுள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
தன் மனதில் உதிக்கும் ஜோக்குகளை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்கிறார் முத்துராஜா. அதை வீடியோவாக பதிவிட வேண்டும் என்பதற்காகத் தினம் 5 சட்டைகள் வீட்டிலிருந்து மளிகைக் கடைக்குக் கொண்டுவந்து விடுகிறார். அப்புறம் என்ன? வியாபாரத்தைக் கவனிக்கிறாரோ இல்லையோ? வீடியோ பேசி அதை ஃபேஸ்புக்கில் போட்டுவிடுகிறார்.
அத்தனையும் மொக்கை ஜோக்ஸ். ராமு, சோமு என இவரே கதாபாத்திரங்களுக்குப் பெயரை வைத்து அப்படியே ஆறாம் வகுப்பு பிள்ளையைப் போல முகத்தில் எந்த விதமான உணர்ச்சிகளையும் காட்டாமல் வெளிப்படுத்தி வீடியோ போடுவதால், இவரை இன்றைய இளைய தலைமுறை பூமர் அங்கிள் என்ற அளவில் கலாய்த்து வருகிறது. அதைப் பற்றி கவலை இல்லை என்கிறார் இவர்.

சோகமான இந்த உலகத்தில் நகைச்சுவைக்குத்தான் பஞ்சம் உள்ளது என்றும் யாரும் முழுமையாக வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்றும் குறிப்பிடும் இவர் மக்களை மகிழ்ச்சிப்படுத்தவே இப்படி வீடியோ வெளியிடுகிறேன் என்கிறார்.
"முன்பு திருவொற்றியூரில் 5 திரையரங்குகள் இருந்தன. அதில் தினம் ஒரு படத்தைப் பார்த்து பொழுதைக் கழிப்பேன். காமெடி, ஆக்ஷன் படங்களைத்தான் பார்ப்பேன். இப்போது இரண்டு தியேட்டர்கள் தான் உள்ளன. ஆகவே அதிக நேரம் கிடைக்கிறது. அதை வைத்து வீடியோ போட்டு மக்களைச் சந்தோஷப்படுத்தி வருகிறேன்" என்கிறார் இந்த கலக்கல் காமெடி மேன்.
பரிதாபங்கள் சுதாகரும், கோபியும் தன்னைப் பற்றிப் பேசி வீடியோ போட்ட பிறகு தினம் 500 பேர் வரை இவரை பின் தொடர ஆரம்பித்திருக்கிறார்களாம். அந்தளவுக்குத் தான் ரீச் ஆவதற்கு இந்த இருவரும்தான் காரணம் என்கிறார் முத்துராஜா. இவரை இணைய உலகம் 'ஜோக் ஸ்டார்' முத்துராஜா என்று பட்டப்பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். அது தனக்குப் பெருமையாக உள்ளது என்கிறார் இந்த மளிகைக் கடைக்காரர்.












Click it and Unblock the Notifications