யார் இந்த மொட்டை கிருஷ்ணன்.. ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையா.. வெளிநாடு தப்பியவரை பிடிக்க தீவிரம்
சென்னை: தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் யார் மூளையாக செயல்பட்டார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்காடு சுரேஷில் ஆரம்பித்து இதுவரை 24 பேர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் வெளிநாடு தப்பிவிட்ட வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், தனது குடும்பத்தினருடன் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வசித்து வந்தார். அங்கு புதிதாக வீடு கட்டி வந்தார். இதனால், அவர் தற்காலிகமாக சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் புது வீடு கட்டும் இடத்தில் கடந்த ஜூலை 5ம் தேதி கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார் . இந்த வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடியை சேர்ந்த 39 வயதாகும் பொன்னை பாலு , சந்தோஷ் (22), பெரம்பூர் பொன்னுசாமி நகர் 3-வது தெருவை சேர்ந்த 45 வயதாகும் திருமலை, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியை சேர்ந்த 26 வயதாகும் மணிவண்ணன், குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ராமு என்கிற வினோத் (38), அருள் (33), செல்வராஜ் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் குன்றத்துரைச் சேர்ந்த திருவேங்கடம் போலீசாரை தாக்க முயன்று தப்பிய ஓட முயன்றதாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதேநேரம் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்கில் பணம் கொடுத்த புகாரில் அதிமுக முன்னாள் நிர்வாகியான வழக்கறிஞர் மலர்கொடி, ஹரிகரன், சதீஷ் மற்றும் பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை, ஆற்காடு' சுரேஷின் மனைவி பொற்கொடி, ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமன் என பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் இந்த கொலையை செய்ய சொன்னது யார், இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டது யார், ஸ்கெட்ச் போட்டு கொடுத்து யார், கொலையை செய்தது ஏன் என்பது உள்ளிட்ட முழு விரவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. அதேநேரம் ஊகத்தின் அடிப்படையிலும், போலீசார்கள் சிலர் வெளியிட்ட தகவலின் அடிப்படையிலும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தலைமறைவாக இருக்கும் பிரபல ரவுடி சம்போ செந்திலைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். மேலும், அவர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ரவுடி சம்போ செந்தில் உடன் தொடர்பில் இருந்த பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களையும் காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் என்பவர் தான் செந்திலுடன் இணைந்து இந்த கொலைக்கான சதித்திட்டம் தீட்டி, அனைவரையும் ஒன்றிணைத்தது என போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். அதன் அடிப்படையில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனைப் பிடிக்க போலீஸ் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், மொட்டை கிருஷ்ணன் குடும்பத்துடன் சிங்கப்பூர் தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியது . அதன் பிறகு அவர் சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியா தப்பிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, மொட்டை கிருஷ்ணனைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதேபோல், இன்டர்போல் உதவியை நாடி, சவுதி அரேபியாவில் பதுங்கி இருக்கும் மொட்டை கிருஷ்ணனைக் கைது செய்து சென்னை அழைத்து வரும் முயற்சியிலும் போலீசார் இறங்கி உள்ளனர். வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை கைது செய்து விசாரித்தால், தலைமறைவாக இருக்கும் ரவுடி சம்போ செந்திலைப் பிடிக்க முடியும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications