கோடிகளை கொட்டி ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட மூளையாக செயல்பட்டது யார்? சிலந்தி வலை போல் சிக்கல்கள்
சென்னை: கோடிகளைக் கொட்டி ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட மூளையாக செயல்பட்டது யார் என்ற கேள்விகளை நோக்கி போலீசார் தீவிரமாக பயணிக்கிறார்கள். ஆனால் சிலந்தி வலை போல் சிக்கல்கள் விரிந்து கொண்டே செல்கின்றன. பொன்னை பாலு தொடங்கி மலர்கொடி,அழகு ராஜா, அஞ்சலை என்று போய்கொண்டே இருக்கிறது. இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவரை கண்டுபிடிக்க போலீசாரும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதாகும் இவர், தனது குடும்பத்தினருடன் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வசித்து வந்தார். அங்கு புதிதாக பெரிய அளவில் வீடு கட்டி வந்தார். இதனால், அவர் தற்காலிகமாக சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். தினமும் இரவு பெரம்பூரில் தான் கட்டும் புதிய வீடு அருகே நண்பர்கள், கட்சிக்காரர்களுடன் பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.

அதுபோல, கடந்த ஜூலை 5ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் அவர் அவரது சகோதரர் வீரமணி, நண்பர் பாலாஜி, டிரைவர் அப்துல்கனி ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அங்கு நடந்த கான்கிரீட் வேலைகளை பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் 6 பேர் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் அங்கு வந்தார்கள். அவர்கள் கையில் பட்டா கத்திகள் இருந்தன. வாகனத்தில் இருந்து இறங்கிய அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கி கொன்றனர்.
இந்த படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை அன்று இரவு முழுவதும் சல்லடை போட்டு போலீஸார் தேடினர். போலீசாரின் தீவிர வாகன சோதனையால், ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடியை சேர்ந்த 39 வயதாகும் பொன்னை பாலு , சந்தோஷ் (22), பெரம்பூர் பொன்னுசாமி நகர் 3-வது தெருவை சேர்ந்த 45 வயதாகும் திருமலை, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியை சேர்ந்த 26 வயதாகும் மணிவண்ணன், குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ராமு என்கிற வினோத் (38), அருள் (33), செல்வராஜ் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் குன்றத்துரைச் சேர்ந்த திருவேங்கடம் போலீசாரை தாக்க முயன்று தப்பிய ஓட முயன்றதாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் 11 குற்றவாளிகளிடம் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வந்தார்கள். அதில் பணப்பரிமாற்றம் ஏதும் நடந்துள்ளதா என்று வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, அவர்களில் ஒருவரது வங்கி கணக்கில் 50 லட்சம் ரூபாய் அண்மையில் டெபாசிட் செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த பணம் பிரபல வழக்கறிஞரிடம் ஜூனியர் வழக்கறிஞராக உள்ள மலர்கொடி என்பவர் மூலம் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த விஷயத்தில் அதிமுகவைச் சேர்ந்தவரான மலர்கொடிக்கு உதவிய ஜூனியர் வழக்கறிஞர் ஹரிஹரன் மற்றும் இவர்களுக்கு உதவியாக இருந்ததாக திமுக இலக்கிய அணி பிரமுகரான சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் வடசென்னை பாஜக முன்னாள் பிரமுகர் அஞ்சலையும் முக்கிய குற்றவாளியாக போலீசார் சேர்த்துள்ளனர். அவரையும் கைது செய்வதற்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை கைதான கொலையாளிகள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்துள்ளனர். தற்போது கைதாகியுள்ள வக்கீல் மலர்கொடியின் கணவர் தோட்டம் சேகர் அதிமுக அரசியல் கட்சியில் பிரசார பாடகராக இருந்துள்ளார். அவர் ரவுடிகளால் வெட்டி கொல்லப்பட்டார். அதற்கு பலிவாங்க மலர்கொடியின் மகன் அழகுராஜாவும் மிகப்பெரிய ரவுடியை கொன்ற கொலை வழக்கில் சிக்கி உள்ளார். மலர்கொடி சென்னை அண்ணாசாலை பகுதியில் ஆட்டோவில் வரும்போது அவர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்வதற்கு முயற்சி நடந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை பொறுத்தவரையில் அவருக்கு பல்வேறு குழுக்கள் எதிரிகளாக செயல்பட்டு வந்திருக்கிறார்கள். ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் பழி தீர்க்க ஒரு கும்பல் வெறியோடு செயல்பட்டிருக்கிறது. வடசென்னையில் பிரபல தாதாவாக வலம் வந்து தற்போது சிறையில் இருக்கும் ஒருவரும் இந்த கொலைக்கு பின்னணியில் இருந்ததாக ஒரு தகவல் உள்ளது.
அதேநேரம் வடசென்னையில் ஆம்ஸ்ட்ராங் செல்வாக்குமிக்க தலைவராக உருவாகி வந்தது வேறு ஒரு கும்பலுக்கு ஆத்திரத்தை தந்ததாம். வட சென்னை திரைப்படத்தை விட சிக்கலான கதை என்றால், அது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தான். ஏனெனில் பல்வேறு தரப்பட்ட எதிரிகள், ஒரே குழுவாக கைக்கோர்த்து, ஆம்ஸ்ட்ராங்கை வீழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை செய்தவர்களுக்கு ரூ,50 லட்சத்தில் இருந்து ரூ,1 கோடி வரை கூலிப்பணமாக கைமாறி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பண பரிமாற்றத்துக்கு அருள் முக்கிய நபராக செயல்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது வங்கி கணக்கை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வக்கீல் அருள், பொன்னை பாலு, திருமலை ஆகிய 3 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று போலீசார் நம்புகிறார்கள். இந்த வழக்கில் இவர் தான் கொலையாளி என்று சொல்ல முடியாது என்கிற அளவிற்கு பலகுழுக்கள் சேர்ந்து செய்திருப்பதாக நம்பப்படுகிறது.
எனினும் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட பல்வேறு எதிரிகளை ஒருங்கிணைத்து காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு மூளையாக இருந்தது யார்? என்பதை கண்டுபிடிப்பது தான் போலீசாருக்கு பெரிய சவாலாக இருக்கிறதாம். இதுவரையில் விசாரணை சரியான பாதையில் செல்வதாகவும், இந்த வழக்கில் யார்-யார்? பின்னணியில் இருந்தார்களோ, அவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக சிறைக்கு போவது உறுதி என்கிறார்கள் உயர் அதிகாரிகள்..












Click it and Unblock the Notifications