குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த.. தலைமை தளபதி பிபின் ராவத் மனைவி மதுலிகா ராவத்..யார் இவர்
சென்னை: குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் உயிரிழந்தனர். பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் , ராணுவ மனைவிகள் நலச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்,
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பயிற்சி மையம் அருகே காட்டுப் பகுதி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. வெலிங்டன் பயிற்சி மையத்திற்குச் செல்ல முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள் கோவைக்கு வந்தனர்.
சூலூரிலிருந்து அமைந்துள்ள ஏர்ஃபோர்ஸில் இருந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு எம்ஐ ரக ஹெலிகாப்டரில் அவர்கள் சென்றபோதுதான் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்து
இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. இன்று காலை தான் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்யும் போது தான், இந்த விபத்து குறித்துப் பல முக்கிய தகவல்கள் தெரிய வரும். இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தள்ளாடியபடி மரத்தில் மோதி விழுந்து எரிந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

13 பேர் பலி
இந்த மோசமான விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் கேப்டன் வருண் சிங் தவிர மற்ற 13 பேரும் உயிரிழந்தனர். வெலிங்கடன் பயிற்சி மையத்தில் உரையாற்றச் சென்று கொண்டிருந்த போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு வெறும் சில நிமிடங்களுக்கு முன்பு, அது விபத்துக்குள்ளானது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பிபின் ராவத் மனைவி
இந்த விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத், ராணுவ மனைவிகள் நலச் சங்கத்தின் தலைவராக இருந்து சமூக சேவைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோலைப் பூர்வீகமாகக் கொண்ட மதுலிகா ராவத் 1986ஆம் ஆண்டு பிபின் ராவத்தை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

தந்தை
குவாலியரின் சிந்தியா கன்யா வித்யாலயாவில் பள்ளிப்படிப்பை முடித்த மதுலிகா ராவத், டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பிரிவில் பட்டம் பெற்றார். பிபின் ராவத் இந்தியா ராணுவத்தில் கேப்டனாக இருந்த போது மதுலிகா அவரை திருமணம் செய்து கொண்டார். மதுலிகா ராவத்தின் குடும்பத்தினர் தற்போது ஷாஹ்டோல் மாவட்டத்தில் உள்ள 'ராஜாபாக்' என்ற பகுதியில் வசிக்கிறது. அவரது தந்தை மிருகேந்திர சிங் 1967 மற்றும் 1972ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் அமைச்சர்
மதுலிகா ராவத் குறித்து சத்தீஸ்கர் அமைச்சர் டிஎஸ் சிங்தியோ கூறுகையில், "மறைந்த ஜெனரல் பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா எங்கள் குடும்பத்தினருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பவர்கள். அவர் போபாலில் அடிக்கடி எங்களை வந்து சந்திப்பார். அவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த ஈடுகட்ட முடியாத இழப்பைச் சமாளிக்கும் வலிமை அவர்கள் குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும்" என்றார்.
Recommended Video

ராணுவ மனைவிகள் நல சங்கம்
ராணுவ மனைவிகள் நலச் சங்கத்தின் முக்கிய செயல்பாட்டாளராக இருநந்த மதுலிகா ராவத், கணவரை இழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்குப் பல நலத்திட்டங்களைப் பெற்றுத் தருவதில் முக்கிய பங்காற்றினார். மதுலிகா ராவத்தின் சகோதரர் யஷ்வர்தன் சிங் கூறுகையில், டெல்லியில் தசரா விழா நடந்த போது தான் பிபின் ராவத்தை கடைசியாக நான் சந்தித்தேன், அப்போது ராவத் மதுலிகாவின் சொந்த கிராமமான ஷாதிலில் பள்ளி அமைக்க உதவி செய்வதாக உறுதியளித்திருந்தார். இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை" என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications