கசப்பு.. பழைய பாசத்தில் பேசும் "தம்பிக்கு" சொல்றேன்! ஆஹா.. டிடிவி தினகரன் யாரை சொல்கிறார்? குழப்பம்
சென்னை: அதிமுகவில் பல்வேறு மோதல்கள், குழப்பமான சூழ்நிலைகள் நிலவி வரும் நிலையில்.. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கியமான ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதிமுகவில் கடுமையான அதிகார மோதல் நிலவி வருகிறது. பொதுக்குழு வழக்கில் எப்படியாவது வென்று இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.
ஆனால் ஓ பன்னீர்செல்வமோ.. கட்சி எடப்பாடி கைக்கு செல்லவே கூடாது என்பதற்காக சட்ட போராட்டங்களையும், பல்வேறு வியூகங்களையும் வகுத்து வருகிறார். அதிமுகவில் மீண்டும் சசிகலா, டிடிவி தினகரனை கொண்டு வரும் முடிவிலும் கூட ஓ பன்னீர்செல்வம் இறங்கிவிட்டார்.
இதற்காக புரட்சி பயணத்தை மேற்கொள்ள போவதாகவும் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துவிட்டார்.

அதிமுக
அதிமுகவில் நிலவும் இந்த மோதலுக்கு இடையில் ஓ பன்னீர்செல்வம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவர்கள். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிற்காக பணிகளை செய்தவர்கள் யாராக இருந்தாலும் மீண்டும் அதிமுகவிற்குள் வர வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இதற்காக யாரையும் சந்தித்து பேச நான் தயார்.

இணைக்க முயற்சி
அதிமுகவில் எல்லோரையும் இணைக்க நான் புரட்சி பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதிமுக ஒன்றுபட்ட போது அதை வீழ்த்த இயலவில்லை என்பது நிரூபணம். சின்னம்மா, டிடிவி தினகரன் இருவரையும் சேர்த்துதான் சொல்கிறேன். எல்லோரும் அதிமுக கீழ் இருக்க வேண்டும், என்று ஓ பன்னீர்செல்வம் கூறினார். இதனால் ஓ பன்னீர்செல்வம் விரைவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை அதிமுகவில் மீண்டும் இணைய சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பே டிடிவி தினகரன் பதில் அளித்து இருந்தார்.

புரட்சி பயணம்
அதில், ஓ பன்னீர்செல்வத்துடன் எதிர்காலத்தில் சேர வாய்ப்பு உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமியுடன் நான் சேர வாய்ப்பே இல்லை என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டு இருந்தார். அதோடு தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.O.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே, என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.

டிடிவி தினகரன்
இந்த நிலையில்தான் தற்போது திடீரென குறிப்பாக யாருக்கோ அட்வைஸ் செய்து டிடிவி தினகரன் போஸ்ட் செய்துள்ளார். அதில், கடந்த கால கசப்புணர்வா?அல்லது புரட்சித்தலைவரும் நம் அம்மா அவர்களும் நமக்கு புகட்டிய லட்சிய உணர்வா? எதைப்பற்றி இப்போது சிந்திக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டும். மக்கள் விரோத தீய சக்தி கூட்டத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றும் பணியைத்தான் யோசிக்க வேண்டும்.

கசப்பு
இதனை உணர்ந்து செயல்பட்டால் நல்லது என்பதை,அண்ணன் TTV என்று பழைய பாசத்தோடு சொல்லும் தம்பிக்கு தெரிவித்து கொள்கிறேன், என்று டிடிவி தினகரன் கூறியுள்ளது. அதாவது கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பு உணர்வுகளை மறந்து செயல்பட வேண்டும் என்று "அண்ணன்" என்று அழைக்கும் நபருக்கு டிடிவி தினகரன் அறிவுரை வழங்கி உள்ளார். ஓ பன்னீர்செல்வத்திற்குத்தான் டிடிவி தினகரன் இந்த மறைமுக அறிவுரையை வழங்கி இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications