சென்னை மெட்ரோ ரயில்.. கைவிடப்படும் முக்கிய வழித்தடம்.. ஏன் தெரியுமா?
சென்னை: சென்னை மாநகரில் வழித்தடம் 3 மற்றும் வழித்தடம் 5 ஆகியவற்றை இணைத்து ஒரு வட்ட பாதையில் மெட்ரோ ரயில் இயக்கும் திட்டத்தை கைவிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை மாநகரில் விமான நிலையம் முதல் விக்கோ நகர் வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், கோயம்பேடு, தேனாம்பேட்டை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது.

இந்நிலையில் 2-வது கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் சுமார் ரூ.69 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இதில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 128 ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் எதிர்காலத்தில் ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்காக கட்டுமானங்களில் சில மாற்றங்களை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ரயில் வட்ட பாதை முதல் கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 வழிப்பாதையில் தற்போது ரயில்கள் இயக்கப்படுகிறது. இதையடுத்து மெட்ரோ ரயிலுக்கான 2-ம் கட்டத்தில் 3, 4 மற்றும் 5-வது வழித்தடம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடக்கிறது. இந்த 3 பாதைகளிலும் பயணிகள் பயன்பாட்டுக்கு வரும்போது, ஒரே ரெயிலில் சுமார் 2½ மணி நேரத்தில் சென்னை மாநகரின் வடக்கு மற்றும் தெற்கு புறநகர் பகுதிகள் வழியாக மாநகரத்தை வட்டமிடும் வகையில் ஒரு ரயில் வட்ட பாதை அமைக்க திட்டமிட்டிருந்தோம்.
3 மற்றும் 5-வது வழித்தடத்தை இணைக்கும் வகையில் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும், கிழக்கில் அடையாறு வழியாகவும், சென்னையின் மேற்கில் கோயம்பேடு வரையிலும் வட்ட பாதை 81 கிலோ மீட்டர் தூரம் கொண்ட வட்ட பாதை அமைக்க முடிவு செய்திருந்தோம்..ஆனால் அப்படி செய்தால் காலவிரயம் ஏற்படலாம் அதேபோல் எதிர்காலத்தில் சிக்கலும் ஏற்படலாம் என்பால் அதனை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகரில் 45.8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட வழித்தடம்-3, மாதவரம் பால்பண்ணை காலனியை சிறுசேரி சிப்காட்டுடன் இணைக்கிறது. அதேபோல், வழித்தடம்-5 மாதவரம் பால்பண்ணை காலனியை சோழிங்கநல்லூருடன் இணைக்கும் வகையில் 47 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகும். இதில், வழித்தடம்-5-ல் உள்ள மேடவாக்கம் செல்வதற்காக, 3-வது வழித்தடத்தில் செல்லும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் வட்ட பாதை திட்டம் கைவிடப்படுவதால் சோழிங்கநல்லூரில் இறங்கி பிளாட்பாரம் மாறி திரும்பி சென்றாக வேண்டியது வரும்.

ஏனெனில் முன்பு வட்ட பாதையில் ரயில் இயக்கத்தை தொடங்குவதற்காக, வழித்தடம் 3 மற்றும் 5-ல் தலா 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 நெடுவரிசையில் சாலையின் நடுவில் தூண்களுடன் உயர் மட்டப்பாதை அமைக்க திட்டமிட்டோம். மேலும் ஒக்கியம் துரைப்பாக்கத்தை வழித்தடம்-3-ல் எல்காட் மற்றும் சோழிங்கநல்லூர் மெட்ரோவைக் கடந்து தனித்தனி வழித்தடங்களை அமைக்க திட்டமிட்டிருந்தோம்.

இந்த பாதையில் 8.5 நிமிட இடைவெளியில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 7 ரயில்கள் இயக்கப்பட வேண்டும். 2-ம் கட்டத்தில் உள்ள 3 வழித்தடங்களில் தனித்தனியாக இயக்கப்படும் ரயில்களுக்கு கூடுதலாக இந்த வட்ட பாதை இருந்தது. ஆனால் சாலையின் நடுவில் தூண்களுடன் கட்டப்படும் உயர்மட்ட பாதைகளின் கட்டுமானமானது சாலைகளுக்கு இடையூறாக இருக்கும், அத்துடன், எதிர்காலத்தில் சாலை விரிவாக்கத்தின் போது இடையூறுகளை ஏற்படுத்தலாம் என்று கருதினோம்.அப்பகுதியில் ஒரு உயரமான கட்டிடத்தின் நுழைவாயில்கள் வழியில் உள்ளதால் அதையும் இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே தற்காலிகமாக வட்ட பாதை திட்டம் கைவிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் பயணிகளின் வரவேற்பு அதிகரிக்கும் போது, வட்ட பாதையில் ரயில்களை இயக்க முடியும். அதற்காக, இரண்டு வழித்தடங்களையும் இணைக்கும் வகையில் கூடுதல் பாதை அமைக்கப்படும் என அதிகாரிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications