புற்றுநோய் வந்த போதும் தளராத கவுதமி.. மிகுந்த வேதனையில் திடீரென பாஜகவில் இருந்து விலகல் ஏன்?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு செய்த வளர்ச்சித் திட்டங்களை மேடைக்கு மேடை பேசி வந்த நடிகை கவுதமி திடீரென பாஜகவிலிருந்து ஏன் விலகினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதன்முதலில் சந்தேகம் எழுப்பியவர் நடிகை கவுதமிதான். முதல்வராக ஓபிஎஸ் இருந்த போதே ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

முதலில் ஜெயலலிதாவின் அபிமானியாகவே கவுதமி இருந்தார். இதைத் தொடர்ந்து கவுதமி பாஜகவில் இணைந்தார். அவர் இணைந்து 23 ஆண்டுகள் ஆவதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். கட்சியின் எந்த பணியாக இருந்தாலும் முதல் ஆளாக கவுதமிதான் வந்து நிற்பார்.
பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை தான் கலந்து கொள்ளும் மேடைகளில் எல்லாம் கூறி வந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் திடீரென பாஜகவில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கான காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. தலைமைக்கு அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில் என் நம்பிக்கைக்கு துரோகம் செய்து, என் வாழ்நாள் சேமிப்பை ஏமாற்றி விட்டார்கள்.
எனக்கு கட்சி தலைவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் ஏன் பாஜகவில் இருந்து விலகினார் என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி பாஜகவை சேர்ந்த அழகப்பன் என்பவர் 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஏமாற்றிவிட்டதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கவுதமி புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து தனது புகாரில் கவுதமி கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் நானும் எனது தாய் வசுந்தராதேவியும் கடந்த 1990 ஆம் ஆண்டு 10 ஏக்கர் நிலத்தை வாங்கினோம். எனது தாய் 2000ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். இந்த 10 ஏக்கரில் 8.16 ஏக்கர் நிலம் எனது பெயரில் இருந்தது.
இந்த நிலையில் வேளச்சேரியை சேர்ந்த அழகப்பன் மூலம் அண்ணாநகர் 6ஆவது அவென்யூவை சேர்ந்த தொழிலதிபர் பலராமன், செங்கல்பட்டு மகிந்திரா சிட்டி பகுதியை சேர்ந்த ரகுநாதன் ஆகியோர் எனக்கு அறிமுகமாகினர். இருவரும் நம்பிக்கைக்குரிய வகையில் இருந்தனர். இதனால் எனது பெயரில் இருந்த 8.16 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்து தருவதாக உறுதி அளித்தனர்.
அதனால் அந்த நிலத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு பலராமன், ரகுநாதன் ஆகியோருக்கு பொது அதிகார ஆவணம் எழுதி கொடுத்தேன். பின்னர் அந்த இடத்தை தனியார் நிறுவனம் வாங்க விரும்புவதாக தெரிவித்தனர். மேலும் நிலத்தில் பிரச்சினை இருப்பதாக கூறி ரூ 4.10 கோடிக்கு விற்பனை செய்ததாக 2 தவணையில் பணத்தை கொடுத்துவிட்டு கையெழுத்து பெற்றனர்.
இந்த நிலையில்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் கோட்டையூரில் உள்ள சொத்துகள் ரூ. 11,17,38,907 க்கு விற்பனை செய்ததில் கேபிட்டல் கெய்ன்ஸ் டேக்ஸ் ரூ 2.61 கோடி செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து எனது அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதை கண்டு நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். இது குறித்து நான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, நிலம் விற்பனை தொகையில் 25 விழுக்காடு ரூ.2,61,25,637 கட்டவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நான் ரூ.65,31,500 கட்டியுள்ளேன். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது.
பின்னர் எனது சொத்தை விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களை சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் எடுத்து பார்த்த போதுதான் 8.16 ஏக்கர் நிலத்தை 2016ஆம் ஆண்டு பலராமனும் ரகுநாதனும் ரூ 11,17,38,907 க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதில் 4.10 கோடியை மட்டும் எனக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ 7,07,38,908 பணத்தை இருவரும் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளனர்.
எனவே என்னை மோசடி செய்த அவர்களிடம் இருந்து எனக்கு சேர வேண்டிய ரூ 7 கோடியை மீட்டு தருமாறும் சொத்துகளை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டு கொள்கிறேன் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கவுதமி புகார் அளித்திருந்தார். அது போல் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ரூ 2.5 கோடி மதிப்பிலான சொத்துகளை தொழிலதிபரும் பாஜக நிர்வாகியுமான அழகப்பன் ஏமாற்றியதாக கூறி அவர் மீதும் கவுதமி புகார் அளித்திருந்தார்.












Click it and Unblock the Notifications