சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கம்.. அடுத்து இரட்டை இலை தானா! அதிமுக தொண்டர்கள் இடையே கலக்கம்
சென்னை: சிவசேனாவின் கட்சி சின்னம் இப்போது முடக்கப்பட்டு உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், இது அதிமுக தொண்டர்களிடையே கலகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். அங்கு ஆட்சியில் இருந்த சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது.
அதன் பின்னர் தாக்கரே, ஷிண்டே என இரு தரப்பாக சிவசேனா கட்சி பிளவுபட்டு இருந்த நிலையில், இப்போது சின்னம் முடக்கப்பட்டு உள்ளது. இது அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.41 ஆயிரம் கோடி ரகசியம்..ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் குற்றச்சாட்டுக்கு ஈபிஎஸ் பரபர பதில்
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் சுமார் 2 ஆண்டுகளாக உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தன. பல மாதங்களாக அங்கு எந்தவொரு சிக்கலும் இல்லாமலேயே ஆட்சி சென்று கொண்டு இருந்தது. இதற்கிடையே ஷிண்டே தலைமையில் சில சிவசேனா எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து அவர்கள் பாஜக உடன் இணைந்து ஆட்சி அமைத்தனர். ஷிண்டே முதல்வராகப் பொறுப்பு ஏற்றார்.
சிவசேனா சின்னம் முடக்கம்
இது மட்டுமின்றி, தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று கூறி சின்னத்திற்கு உரிமை கோரியும் ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையம் சென்றனர். அடுத்த மாதம் மும்பை அந்தேரி கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த சின்னம் விவகாரம் முக்கியமானது ஆனது. இந்தச் சூழலில் சிவசேனா என்ற பெயரையும் சின்னத்தையும் முடக்குவதாகத் தேர்தல் ஆணையம் இப்போது அறிவித்து உள்ளது. எனவே, தேர்தலில் இரு தரப்பும் வேறு சின்னத்தைத் தான் பயன்படுத்த வேண்டி இருக்கும்.
அதிமுக
சரி இப்போது அப்படியே அதிமுக பக்கம் வருவோம். அதிமுக ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரட்டை தலைமை கீழ் இயங்கியது. இருப்பினும், அந்த காலகட்டத்தில் அதிமுகவால் பெரியளவில் வெல்ல முடியவில்லை. சட்டசபைத் தேர்தலிலும் தோற்று எதிர்க்கட்சியானது. இந்தச் சூழலில் தான் சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற முழக்கம் எழுந்தது.
எடப்பாடி பழனிசாமி
இதற்கு ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சிக்குக் கூட்டுத் தலைமையே தேவை என்று ஓபிஎஸ் கூறிய நிலையில், அதைத் திட்டவட்டமாக மறுத்த எடப்பாடி, ஒற்றை தலைமையே தீர்வு என்பதை வலியுறுத்தினார். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கட்சியில் இருந்தே நீக்குவதாக அறிவித்தார். பதிலுக்கு எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் ஓபிஎஸ்.
இரட்டை இலை
அதன் பின்னர் இரு அணிகளும் தனித்தனியாகவே இயங்கி வருகின்றனர். எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இருவருமே கட்சி தொண்டர்கள் தங்கள் பக்கம் தான் இருப்பதாகக் கூறி வருகின்றனர். இரு தரப்பும் எத்திரணியை விமர்சிப்பதையும் நிறுத்தவில்லை. தொடர்ந்து தனித்தனியாக இயங்கி வருவதால் எங்குத் தேர்தல் வரும் காலத்தில், இரு தரப்பினரும் சின்னம் கோரி முறையிட்டால் எங்கு இரட்டை இலை சின்னமே முடக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடிதம்
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக பொதுக்குழு நடந்த முடிந்த சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளதால், அவர் அதிமுக எம்.பி இல்லை என்றும் தன்னிச்சையான எம்பியாக அறிவிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.
ஓபிஆர்
இருப்பினும், அதிமுக இரு அணிகளாக உள்ளதாகச் சபாநாயகர் ஓம் பிர்லா கருதவில்லை என்றே தெரிகிறது. இதன் காரணமாகவே கடந்த முறை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஓ.பி.ரவீந்திரநாத் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. அவர் அதிமுக எம்பியாகவே செயல்பட்டார். இதன் காரணமாகக் கட்சியின் சின்னம் முடக்கப்பட வாய்ப்பில்லை என்றே அவர்கள் கருதுகின்றனர்.
கலக்கம்
அதேநேரம் தமிழ்நாட்டில் இப்போதைக்கு எந்தவொரு தேர்தலும் இல்லை. அடுத்து முக்கியமான தேர்தல் என்றால் அது 2024 மக்களவை தேர்தல் தான். அதற்கு இடையே இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுகவுக்குச் சிக்கல் தான். தேர்தல் நெருங்கும் போது, தலைமை தொடர்பாக வழக்குகள் முடிந்து இருக்க வேண்டும். இல்லையென்றால் சிவசேனா சின்னம் முடக்கப்பட்டது போல அதிமுக சின்னமும் முடக்கப்படலாம் என்று அக்கட்சியின் தொண்டர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அதிமுக வழக்கு
ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்குமாறு ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் சென்னை ஐகோர்ட் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு அளித்து உள்ளது. அதேபோல அதிமுக தலைமை அலுவலக சாவியும் எடப்பாடிக்கு ஆதரவாகவே வந்தது. அதேநேரம் பொதுக்குழு தொடர்பாகச் சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றம் சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.