கனிமொழியை பழிவாங்கும்போது மட்டும் சிதம்பரத்திற்கு இனித்ததோ.. இடித்து கேட்கும் ராஜேந்திர பாலாஜி!
கனிமொழிக்கு ஆதரவாக அதிமுக அமைச்சர் பேசியுள்ளார்
Recommended Video
சென்னை: அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. திமுக எம்பி கனிமொழிக்காக ஏன் வரிந்துகட்டிக் கொண்டு கேள்வி கேட்டுள்ளார் என்று தெரியவில்லை.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் இருந்தே காங்கிரஸ் தரப்பில் ஒருவித பதற்ற நிலை நிலவுகிறது. சிதம்பரம் கைதானதில் இருந்து காங்கிரஸார் போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி முதல் பல தலைவர்கள் தினந்தோறும் பாஜக அரசுக்கு எதிரான பேட்டிகளையும், கருத்துக்களையும் ஆவேசத்துடன் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மவுனம்
ஆனால் கூட்டணியிலேயே உள்ள திமுக, ப.சிதம்பரம் கைதுக்கு போதுமான எதிர்ப்பினை பதிவு செய்யவில்லை என்ற பேச்சு எழுந்தது. குறிப்பாக, கைதான உடனேயே திமுகவின் மௌனம், காங்கிரஸ் தரப்பை சூடாக்கி விட்டது என்றுகூட சலசலக்கப்பட்டது.
கண்டனம்
" சுவர் ஏறி குதித்து, முன்னாள் அமைச்சர், சிதம்பரத்தை கைது செய்ததை, நாட்டிற்கு அவமானமாக கருதுகிறேன்.. அது, கண்டிக்கத்தக்கது" என்று திமுக தலைவர் அறிக்கை விட்டிருந்தாலும், என்னமோ அது காங்கிரசுக்கு திருப்திகரமாக இல்லை என்றே தெரிகிறது.
அமைச்சர்
இப்படி ஒரு சலசலப்பு கூட்டணிக்குள் ஏற்பட்டு வரும்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வேறு ட்ராக்கில் வந்து இந்த விஷயத்தை கொக்கி போட்டு பேசியுள்ளார். "திமுக தயவில், மத்திய அமைச்சராகி, கனிமொழி வீட்டில், சிபிஐ., 'ரெய்டு' நடத்தியவர் சிதம்பரம். சிறையை கண்டு பயப்படும் இவருக்கு, மற்றவர்களை பழிவாங்கும் போது மட்டும் இனித்ததா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதாவது எந்த விஷயத்தை சொன்னால், காங்கிரசுக்கு இன்னும் பற்றிக் கொண்டு எரியுமோ, அந்த விஷயத்தை அமைச்சர் கருத்தாக தெரிவித்துள்ளார்.
கனிமொழி
முதல் விஷயம்.. சிதம்பரம் கைதுக்கும், தமிழக அரசுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டாவது விஷயம், சிதம்பரத்தை திட்டுவதாக நினைத்து கொண்டு, கனிமொழிக்கு ஆதரவாக பேசியுள்ளது. மூன்றாவது விஷயம், இந்த விவகாரத்தில் கனிமொழி பழி வாங்கப்பட்டார் என்றால், அன்றைய தினமே எதிர்த்து ராஜேந்திர பாலாஜி ஏன் குரல் கொடுக்கவில்லை என்றும் நமக்கு கேட்க தோன்றுகிறது.
மகிழ்ச்சி
நான்காவதாக, ஒருவேளை கனிமொழி நேர்மையானவர் என்று ராஜேந்திர பாலாஜி சொல்ல வருகிறாரா என்றும் தெரியவில்லை. ஆக மொத்தம்.. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் அல்லாத அத்தனை கட்சிகளுக்கும் ப.சிதம்பரம் கைது ஏதோ ஒரு வகையில் மகிழ்ச்சி கொடுத்திருக்கிறதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.