திமுக, அதிமுக கட்சியினர் தவெகவில் இணைவது ஏன்? அமைச்சர் CTR நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுரை: மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணைவது ஏன் என்பது குறித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். குறுக்கு வழியில் வர நினைத்தது பிடிக்காமல், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோரும் எங்களுடன் இணைகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த தி.மு.க - அ.தி.மு.க ஆகிய இரு துருவ அரசியலை உடைத்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும், எம்.எல்.ஏ-க்களும் த.வெ.க-வை நோக்கி அணிவகுத்து வருவது விவாதப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில், "அதிமுக முற்றிலும் சரிந்து கொண்டிருக்கிறது. திமுக மக்களை ஏமாற்றிவிட்டது. இதனால்தான் தூய்மையான அரசியலை விரும்பி மாற்றுக்கட்சியினர் த.வெ.க-வில் இணைகிறார்கள்" என்று த.வெ.க பொதுச்செயலாளரும், அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல்குமார் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக சாடி விளக்கியுள்ளார்.
அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், அ.தி.மு.க-வின் தற்போதைய உட்கட்சிப் பூசல்கள் மற்றும் வீழ்ச்சி குறித்துப் பேசுகையில், "அதிமுக என்ற கட்சி தற்போது நாளுக்கு நாள் பலவீனமடைந்து, முழுமையாக சரிந்து கொண்டிருக்கிறது. அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களே அங்கிருக்க விரும்பாமல் வெளியேறி வருகின்றனர். தங்களின் அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், மக்களுக்கு உண்மையாக உழைக்கவும் அ.தி.மு.க-வினர் அக்கட்சியை விட்டு வெளியேறி த.வெ.க-வில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். இனி அந்த கட்சி மீண்டெழுவது கடினம்." எனத் தெரிவித்துள்ளார்.
வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட திமுக
மேலும் பேசிய சிடிஆர் நிர்மல்குமார், "தி.மு.க-வை அரசியல் எதிரி என்று த.வெ.க மாநாட்டிலேயே பிரகடனப்படுத்தினார் முதல்வர் விஜய். கடந்த கால தி.மு.க அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. தேர்தல் அறிக்கையில் சொன்ன பல திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதோடு, நிர்வாக ரீதியாகவும் பல குளறுபடிகளைச் செய்தனர். மக்கள் மத்தியில் ஏற்பட்ட அந்த ஏமாற்றமும், அதிருப்தியும்தான் த.வெ.க-வை அரியணையில் ஏற்றியுள்ளது" என்றார்.
அதிமுக - திமுக இருவரும் எதிராக இருந்து தேர்தலை சந்தித்துவிட்டு தற்போது, இருவரும் ஒன்று சேர நினைக்கின்றனர். தைரியம் இருந்தால் இருவரும் வெளிப்படையாக அறிவிக்கட்டும். மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி சேர்ந்து திமுக குடும்பத்தை காப்பாற்ற ஆட்சிக்கு வர நினைத்தனர். இரு கட்சிகளும் தங்களது குடும்பத்தை காப்பாற்ற ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர்.
உள்ளாட்சி தேர்தலுக்காக வரவில்லை
குறுக்கு வழியில் வர நினைத்தது பிடிக்காமல், இரு கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோரும் எங்களுடன் இணைக்கின்றனர். புதிதாக வருபவர்கள் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து வரவில்லை.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' கொள்கை. அதாவது, சாதி, மத பேதமற்ற சமத்துவ அரசியலையும், மதச்சார்பற்ற சமூக நீதியையும் த.வெ.க தனது கொள்கையாகக் கொண்டிருப்பதால், கூட்டணிக் கட்சிகள் மற்றும் மாற்றுக்கட்சியினருக்கு இது பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது.
கடந்த காலங்களில் கூட்டணிக் கட்சிகளைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கட்சிகள், அவர்களுக்கு ஆட்சியில் பங்கு தர மறுத்தன. ஆனால், முதலமைச்சர் விஜய் தற்போதைய தவெக ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளித்து, உண்மையான கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டியுள்ளார்.
ஊழலற்ற தூய்மையான நிர்வாகம்
எந்தவொரு பண பலமும், பின்னணியும் இன்றி, லட்சக்கணக்கான தொண்டர்களைத் திரட்டி, மக்கள் செல்வாக்கோடு உருவான கட்சி தவெக. இதன் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகமே மாற்றுக்கட்சியினரைக் கவர்ந்துள்ளது.
"மக்கள் எங்களை நம்பி ஒரு பெரிய மாற்றத்தைத் தந்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், மாற்றுக்கட்சிகளில் இருந்து வரும் நல்லவர்களையும் அரவணைத்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே முதலமைச்சர் விஜய்யின் இலக்கு" என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications