கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறங்க ஆர்வம் காட்டாத பயணிகள்... என்ன காரணம்?
சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி பலர் மொத்தமாக கிளம்பி வந்தனர். கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் வசதிக்காக இலவச மினி பேருந்து இயக்கப்படுகிறது. இந்த சூழலில்
எதிர்பார்த்ததை விட பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கோயம்பேடு போல் நெரிசல் ஏற்படாத வகையில், பேருந்துகளை எளிதாக நிறுத்தி, வெளியில் எடுத்து செல்லும் வகையிலும், பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அதிநவீன வசதியுடன் அழகிய வடிவத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டத்துக்கும் மேற்கு மாவட்டத்திற்கும் செல்லும் அனைத்து அரசு விரைவு பஸ்களும் இயக்கப்படுகிறது.
பொங்கல் முடிந்து இன்று காலை பலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்தார்கள்.. முன்பதிவு செய்து பயணிகள் வந்த அரசு விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்பட்டது. இந்நிலையில் பயணிகள் பலர் பொத்தேரியில் இறங்கி புறநகர் ரயிலில் ஏறி சென்னைக்குள் சென்றனர். இதில் கோயம்பேடு, வடபழனி மார்க்கமாகவும், மயிலாப்பூர் மார்க்கமாகவும் செல்லும் பயணிகளே கிளாம்பக்கத்தில் வந்து இறங்கி , பஸ் பிடித்து மாறி ஏறி சென்றனர். கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் வசதிக்காக இலவச மினி பேருந்து இயக்கப்பட்டதால் அதில் எளிதாக ஏறி, கிளாம்பாக்கத்தில் உள்ள டவுன் பஸ்களை பிடிக்க சென்றனர்.
ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை தாம்பரம் பைப்பாஸ் வழியாக கோயம்பேடு சென்றதால் பலரும் பெருங்களத்தூரில் தான் இறங்கினார்கள்.. அங்கு இறங்கி அப்படியே ரயிலில் ஏறி சென்னைக்குள் சென்றனர். அதேபோல் பேருந்துகளில் ஏற விரும்பும் பலரும் வழக்கம் போல் பெருங்களத்தூரில் தான் இறங்கினார்கள். இதற்கு காரணம் கிளாம்பாக்கத்தில் இறங்கி உள்ளே சென்று டவுன் பேருந்து நிலையத்தில் போய் ஏற வேண்டும்.
ஆனால் பெருங்களத்தூரை பொறுத்தவரை அப்படி இல்லை.. அப்படியே ஆம்னி பேருந்தில் இறங்கிய உடன், அப்படியே வரும் டவுன் பஸ்களில் ஏறி, தங்கள் வீடுகளுக்கு போக முடிகிறது என்பதே காரணம் ஆகும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வளர்ச்சி அடைய வேண்டும் எனில் அங்கு உடனடியாக போர்க்கால அடிப்படையில் ரயில் நிலையமும், நடைமேம்பாலமும் அமைக்க வேண்டும். அதேபோல் ஏராளமான கடைகளும் அங்கு வர வேண்டும் . அதற்கு சிறிது காலம் ஆகும் என்பதால். போகபோக கிளாம்பாக்கம் மிக அவசியமான பேருந்து முனையமாக உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..












Click it and Unblock the Notifications