ஜெயலலிதா என்ன செய்வார் தெரியுமா? தண்ணீர் தரமறுக்கும் காங்.க்கு ஆதரவு ஏன்? முதல்வருக்கு சீமான் கேள்வி
சென்னை: கர்நாடக விவகாரத்தில் இந்த மாதிரி நிலைமையில் ஜெயலலிதா இருந்து இருந்தால் கர்நாடகாவில் தண்ணீர் தரவில்லை என்றால் கூட்டணி கிடையாது வெளியே போங்கள் என சொல்லியிருப்பார் என்றும் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸூக்கு ஸ்டாலின் ஏன் வாக்கு கேட்கிறார் என்றும் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகா என வரும் போது, பாஜகவும் காங்கிரசும் மாநில கட்சியாக மாறிவிடுகிறது. இரண்டு கட்சிகளுமே நாங்கள் வந்தால் மேகதாதுவில் அணை கட்டுவோம் என 9 ஆயிரம் கோடிக்கு தேர்தல் அறிக்கை போட்டு இருக்கிறார்கள். நான் ஸ்டாலினிடம் கேட்பது என்னவென்றால் அவர்கள் அவரது மாநிலத்திற்கு உண்மையாக இருக்கிறார்கள் அல்லவா..

நீங்க ஒரு கட்சி தலைவர் என்றால் எனக்குக் இந்த கேள்வி கிடையாது. நீங்கள் இந்த மாநிலத்தின் முதல்வர். யாரைக்கேட்டு எனக்கு தண்ணீர் தர மறுக்கிறவர்களுக்கு ஓட்டு கேட்கிறீர்கள். இதற்கு பதில் இருக்கிறதா? இதையேதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மோடி சொன்னார். 50 நாளில் சொர்க்கத்தில் கொண்டு போய் வைப்பேன் என்றார். ஒரு தேசத்தின் மக்களிடம் ஒரு வருத்தம் கூறினாரா.. அந்த பெருந்தன்மை இல்லாத நீங்கள் ஏன் தலைவராக இருக்கிறீர்கள்.

இப்போது கூட முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. எனக்கு உரிய நதி நீரை பங்கிடவில்லை என்றால் பாராளுமன்ற தேர்தலில் உங்களுக்கு தொகுதி பங்கீடு இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம். எனக்கு தண்ணீர் தர மறுப்பார்கள்.. கச்சத்தீவை எடுத்து கொடுப்பார்கள். என் இனம் சாகும் போது அவனே கொன்று குவிப்பான்... நீங்கள் கூடவே வச்சிகிட்டு கூட்டணி கூட்டணி என்று சொன்னால் நாங்கள் மானம் கெட்டுப்போய் உங்களுக்கு ஓட்டுப்போட்டு உங்களை வெல்ல வைக்க வேண்டுமா?

இதெல்லாம் கேட்டால் கோபப்படுகிறார்... ஆவேசமாக பேசுகிறார்... என்று சொல்கிறார்கள். கண் முன்னாடி இதையெல்லாம் பார்த்துக்கிட்டு சகித்துக் கொண்டு போக முடியவில்லை. உண்மையிலேயே சொல்லுறேன்.. இந்த மாதிரி நிலைமையில் ஜெயலலிதா இருந்து இருந்தால் கர்நாடகாவில் தண்ணீர் தரவில்லை என்றால் கூட்டணி கிடையாது வெளியே போங்கள் என சொல்லியிருப்பார்.. இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications