வெயில் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் போடுவதில்லை.. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
சென்னை: கோடை வெயில் கொளுத்துவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை என்றும், சட்டவிரோத பைக் பந்தயங்களை தடுக்க வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாய ஹெல்மெட் அணிவதை உறுதிபடுத்தவும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை உறுதிபடுத்தவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது அப்போது தமிழகத்தில் ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும், விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தற்போது ஹெல்மெட் அணிவதில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று நடந்த பைக் ரேஸில் இருவர் உயிரிழந்ததாகவும், அதில் வாகனத்தை ஓட்டியவர் ஹெல்மெட் அணியவில்லை என்றும் கூறினார்கள். அப்போது சட்டவிரோத பைக் பந்தயங்களை தடுக்க வழக்கு பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது..
இதையடுத்து கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து காவல்துறை இணை மற்றும் துணை ஆணையர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications