கையில் ரிப்போர்ட்டோடு.. நேராக ஆளுநர் ரவியை சந்தித்த பாஜக அண்ணாமலை.. பேசியது என்ன? பின்னணி
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை பாஜக தலைவர் அண்ணாமலை சென்று நேரில் சந்தித்துள்ளார். இவர்கள் சந்திப்பில் என்ன பேசினார்கள், இதில் என்ன ஆலோசனைகள் செய்யப்பட்டன என்ற விவாதம் அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பாஜக கட்சிக்கு நெருக்கமானவர்கள், கட்சிக்கு ஆதரவாக பேசுபவர்கள் கைதாகி வருகிறார்கள். சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த காரணத்தால் பாஜக கல்யான் ராமன் கைது செய்யப்பட்டார்.
அதேபோல் பாஜக தலைவர்களுக்கு நெருக்கமான கிஷோர் கே சாமியும் கைதாகி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் பாஜகவிற்கு நெருக்கமான மாரிதாஸ் கைதாகி உள்ளார்.

வழக்கு
தமிழ்நாடு அரசு குறித்து அவதூறாக ட்வீட் செய்தது. தனியார் தொலைக்காட்சி போலி மெயில் அனுப்பியதாக கூறி மோசடி செய்தது என்று இரண்டு வெவ்வேறு வழக்குகளில் மாரிதாஸ் கைதாகி உள்ளார். இவருக்கு இரண்டு கேஸிலும் பெயில் கிடைப்பது கஷ்டம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் அரசு தரப்பு வட்டாரங்களில் வரும் தகவலின்படி மாரிதாஸ் மீது குண்டாஸ் சட்டம் பாயும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அண்ணாமலை எச்சரிக்கை
இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், திமுகவின் காவல்துறை, 124 ஏ சட்டப்பிரிவில் மாரிதாஸ் மேல் வழக்கு தொடுக்கின்றனர். டிஜிபியின் நடவடிக்கை ஒரு தலைப்பட்சமாக மாறிப் போய் உள்ளது.. திமுகவினர் ராணுவ அதிகாரி இறந்தபோது பிபின் ராவத்தை கொன்றவர் யார்? என்றும் ராணுவத்தைக் கேலி செய்தும், திமுகவின் ஊடகப்பிரிவினரும், திமுகவின் நிர்வாகிகளும் வெளியிட்ட, அந்த 300க்கும் மேற்பட்ட குறுஞ் செய்திகளின் பதிவு எங்களிடம் இருக்கிறது.

நடவடிக்கை இல்லை
ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாரிதாஸ் மீது மட்டும் நடவடிக்கை ஏன்? அவருக்கு எதிராக புகார் தந்தது யார்? திமுகவினர் போடும் போஸ்ட்கள் கண்ணில் படவில்லையா? மாரிதாஸ் மீது திமுக ஊடக பிரிவில் உள்ள சின்ன பசங்க கொடுக்கும் கேஸ்களுக்கு எல்லாம் நடவடிக்கை எடுப்பதா?எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. இது எல்லாம் பாரதிய ஜனதா கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது, என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

ரிப்போர்ட்
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக கூறி ஆளுநர் ஆர்.என் ரவியை அண்ணாமலை சந்தித்துள்ளார். இதில் சில முக்கியமான விஷயங்களை அண்ணாமலை ஆளுநரிடம் பேசியதாக கூறப்படுகிறது. அதன்படி பாஜகவினர் மீதும் பாஜக ஆதரவாளர்கள் மீதும் பொய்யான புகார்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போலீஸ் சுதந்திரமாக செயல்படவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

திமுக
இணையத்தில் திமுகவினர் போடும் போஸ்ட்கள் மீது நடவடிக்கை இல்லை. பிபின் ராவத் மரணம் குறித்து போஸ்ட் செய்த பலர் மீது நடவடிக்கை இல்லை என்றும் அண்ணாமலை புகார் அளித்ததாக தெரிகிறது. மேலும் பாஜகவினர் மீது இதுவரை போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்த லிஸ்டை அண்ணாமலை ஆளுநர் ஆர். என் ரவியிடம் அளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

என்ன இருக்கிறது
மாரிதாஸ் கைது, கல்யாண் ராமன் கைது மட்டுமின்றி கிஷோர் கே சாமி மீது போடப்பட்ட குண்டாஸ் குறித்தும் இதில் ஆலோசனை செய்துள்ளனர். மாரிதாஸ் மீது குண்டாஸ் போடாமல் தடுக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் அண்ணாமலை முறையிட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் குண்டாஸ் சட்டம் தவறாக பயன்படுத்துவதாக ஆளுநரிடம் அண்ணாமலை முறையிட்டார் என்று தகவல்கள் வருகின்றன.
Recommended Video

நீண்ட ரிப்போர்ட்
இதுவரை தமிழ்நாடு அரசு மேற்கொண்ட கைது நடவடிக்கைகள், குண்டாஸ் வழக்குகள், அதில் தற்போதைய நிலை, திமுகவினர் இணையத்தில் வெளியிட்ட சில போஸ்ட்கள் உள்ளிட்ட பல விஷயங்களை மொத்தமாக தொகுத்து ரிப்போர்ட்டாக அண்ணாமலை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications