தமிழகத்திலேயே பெரியாரை ரொம்ப விரும்புவது யார் தெரியுமா.. எச். ராஜாதான்!
தந்தை பெரியாரையே எச்.ராஜா வம்புக்கு இழுப்பது ஏன் தெரியுமா?
சென்னை: தந்தை பெரியாரை எச். ராஜாவுக்கு ரொம்ப பிடிக்கும்போல! எப்பவுமே மறக்காம இருக்கார்.
படித்தவர்களுக்கு நல்ல வேலை இல்லை, சாப்பாடு இல்லை, ஆணவ படுகொலை அதிகமாயிடுச்சு.. வன்முறை தலையை விரிச்சு போட்டுட்டு ஆடுது.. தண்ணி இல்லை.. புயல் பாதித்த மக்களுக்கு நாதி இல்லை!
இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது மத்திய பாஜகதான். அவங்க இல்லைன்னா அவங்க சார்பாக இங்க இருக்கிற பாஜக தலைவர்கள்தான் சொல்லணும். ஆனா தேசிய பொறுப்பில் உள்ள ராஜா இதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. மாறாக எப்போதும் பெரியார் நினைவாகவே இருக்கிறார்.
மண்ணின் சொத்து
பெரியாருக்கு முன்னும் பின்னும் நிறைய தலைவர்கள் பிறந்து இறந்தார்கள். ஆனால் ராஜா ஏன் பெரியாரையே பிடித்துகொண்டு தொங்க வேண்டும்? ஏன் என்றால் ராஜாவுக்கு தெரியும் பெரியார்தான் இந்த மண்ணின் சொத்து. பெரியார் இல்லையென்றால் தமிழகத்தின் நிலை இன்று எப்படி இருந்திருக்குமோ!. இன்று ராஜாவுக்கு இந்த அளவுக்கு பேசவும் உரிமை தந்தது பெரியார்தான்!!
அதிர்ஷ்டக்காரர்
எப்படி பார்த்தாலும் பெரியார் ஒரு அதிர்ஷ்டக்காரர்தான். ஆத்திகர்களைவிட நாத்திகர்கள்தான் கடவுளை பற்றியே அதிகம் பேசுவார்கள், சிந்திப்பார்கள் என்று சொல்வார்கள். அது உண்மைதான். பெரியாரின் ஆதரவாளர்களைவிட எதிர்ப்பாளர்கள்தான் பெரியாரைப் பற்றி அதிகம் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
செருப்பால் அடிப்பேன்
மறந்து போன பெரியாரையும் நம் மக்களுக்கு நினைவு படுத்தி கொண்டே இருக்கும் ராஜாவுக்கு அந்த விதத்தில் தமிழக மக்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள். பெரியார் படத்தை செருப்பால் அடிப்பேன் என்பது, பெரியார் சிலையை உடைப்பேன் என்பது இப்படியெல்லாம் தடித்த வார்த்தைகள் வரும்போதெல்லாம் பாஜக தலைமை ராஜாவை கண்டிக்கவில்லையே ஏன்?
கொந்தளித்த வைகோ
"பெரியார் சிலை மீது கை வைத்தால், கை, கால்களை வெட்டுவேன்" என கொந்தளித்தார் வைகோ. மற்றவர்களின் உணர்வுகளை தூண்டி அவர்களின் கோபத்தை கிளறி, ஆத்திரத்தை மண்டைக்கேற்றி அதனை வார்த்தைகளாக பிடுங்கி அதில் குளிர்காயத்தான் ராஜா போன்றோர் நினைக்கிறார்கள்.
பிளவுபடுத்துவதா?
இப்படி பேசி பேசிதான் தமிழ்நாட்டில் பாஜக இன்னும் வளர முடியாமலேயே உள்ளது. தமிழிசை சகிப்புத்தன்மை, பக்குவத்துடனே அனைத்தையும் அணுகி, நல்ல முறையில் பேசி பேசி ஜான் ஏற்றிவிட்டால், எச்.ராஜா பெரியாரை பற்றி பேசியே முழம் சறுக்கி கொண்டு போக விட்டுவிடுகிறார். மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் நோக்கத்தையே எச்.ராஜா எப்போதும் கையாள்கிறார்.
விஷம் கக்குகிறார்
பெரியாரை பற்றி பேசினால், கோபம் கொப்பளிக்கும்.. ஆத்திரம், ஆக்ரோஷம் ஊற்றெடுக்கும்.. அமைதி குலைந்து வன்முறை தாண்டவமாடும்.. இதன் மூலம் மக்களைப் பாதிக்கிற வாழ்வாதார பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பிவிடலாம் என்றே நினைத்து, தொடர்ந்து விஷம் கக்கி வருகிறார். ஆனால் எவ்வளவுதான் பெரியார் குறித்த விஷயங்களை தினம் தினம் கக்கி மக்களை திசைதிருப்பி வன்முறை கலகத்தை தூண்டிவிட்டாலும், பெரியார் பிறந்த மண் பொறுமை காக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.