ஆமா.. ஆளுநருக்கு எதிராக இவ்வளவு அமளி நடக்குது.. வானதி, நயினார் நாகேந்திரன் வரவேயில்லை கவனிச்சீங்களா?
சென்னை: பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் இன்று சட்டசபைக்கே வரவில்லை. காந்தி, சரஸ்வதி ஆகிய 2 பாஜக எம்எல்ஏக்கள்தான், ஆளுநருக்கு எதிராக தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து கருத்தை பதிவு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பினை குறைக்கும் வகையில் பேசிவரும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக, 10-ந்தேதி நடந்த பேரவைக் கூட்டத்தில் தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதேசமயம், ஆளுநரை பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்கிற விதியை தளர்த்துவதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார் அவைமுன்னவர் துரைமுருகன்.

அவையில் இருப்பவர்களில் 4-ல் 3 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. கவர்னருக்கு எதிரான தீர்மானத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காக, எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரத்தை கிளப்பி எடப்பாடி தலைமையில் அதிமுக வெளிநடப்பு செய்தது. இந்த தீர்மானம் வருவதை அறிந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரனும், வானதி சீனிவாசனும் பேரவைக்கு வரவில்லை. பாஜகவின் மற்ற 2 உறுப்பினர்களான காந்தி, சரஸ்வதி ஆகியோர் தீர்மானத்தை எதிர்த்தனர். வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் அவையில் இருந்த 146 பேரில் 144 பேரின் ஆதரவு இருந்ததால் தீர்மானம் நிறைவேறியது.
இதனையடுத்து, கவர்னருக்கு எதிரான தனித்தீர்மானத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இந்த கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராக 2-வது முறை தீர்மானம் கொண்டுவரவேண்டிய சூழல். இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும். அதை உணர்த்தும் நாள்தான் இது. அரசியல் சட்டத்துக்கு மட்டுமே ஆளுநர் விசுவாசமாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிக்கு அல்ல ! கட்சி சார்பின்றி அவர் செயல்பட வேண்டும். ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என அண்ணா கூறியதை கலைஞர் வழிமொழிந்தார்

தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் நண்பராக இருக்க ஆளுநர் விரும்பவில்லை. நிர்வாக நடைமுறைகளை பொதுவெளியில் விவாதிப்பது சரியில்லை. மக்கள் நலனுக்கான மசோதாக்களையும் மக்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தியுள்ளார். பேரவையையும் அவமதிக்கிறார். ராஜ்பனை அரசியல்பவனாக மாற்றிவருகிறார், அவருக்குரிய ஆளுநருக்கு ஒன்றிய அரசும் குடியரசு தலைவரும் அறிவுரை வழங்க வேண்டும்.

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குறிப்பிட்ட கால அவகாசம் நிர்ணயிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார் முதல்வர். தனித்தீர்மானத்தின் மீது ஆளுநரை கண்டித்தும் அவரை ஒன்றிய அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும் உறுப்பினர்கள் பலரும் பேசினர். ஆளுநருக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. இதனிடையே வானதி சீனிவாசன் ரிஷிகேஷில் புனித நீராடிய படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். நயினார் பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications