கொங்கு டார்கெட்.. பாஜக கனவில் மண்ணை போட்டதால் செந்தில்பாலாஜியை இப்படி செய்கிறது பாஜக: மா.சு காட்டம்!
சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு திமுகவை களங்கப்படுத்தவே கைது நடவடிக்கையை பாஜக மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்ர். பாஜகவின் கிளை அமைப்புகள் போல விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன என அவர் சாடியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த ரெய்டு அடிப்படையில் அமலாக்கத்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கிடையே மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்திய நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையின்போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் சென்று அவரிடம் நேரில் விசாரித்தனர்.
இந்நிலையில், இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக ராஜ்யசபா எம்.பி வில்சன் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு திமுகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தவே கைது நடவடிக்கை பாஜக மேற்கொண்டுள்ளது. பாஜகவின் கிளை அமைப்புகள் போல விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன. மக்கள் மத்தியில் பொய் பரப்புரை மேற்கொள்ள புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
தேச நலனுக்காக உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறையை தனது அரசியல் லாபத்திற்காக பாஜக பயன்படுத்துவது மிக பெரிய ஜனநாயக படுகொலை. கைது நடவடிக்கையில் எந்த வித விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையின் உச்சம் தான் செந்தில் பாலாஜி கைது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் பாஜக பதற்றம் அடைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி வருவதால் திமுகவை மிரட்ட இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது பாஜக அரசு.
கொங்கு மண்டலத்தில் பாஜகவின் வாக்குகளை சிதறடித்தவர் செந்தில் பாலாஜி. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜி தீவிரமாகப் பணியாற்றினால் பாஜகவுக்கு நோட்டாவை விட மோசமான நிலை ஏற்படும் என்று அஞ்சி செந்தில் பாலாஜிக்கு எதிராக பாஜக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அண்ணாமலையின் அரசியல் தில்லுமுல்லுகளை செந்தில் பாலாஜி விமர்சித்து வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியில் தான் தோற்றதற்குக் காரணம் செந்தில் பாலாஜி தான் என அண்ணாமலை நினைக்கிறார்." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications