"திமுக ஏன் இப்படி இருக்கு?".. முதல்வர் ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் எழுப்பிய 6 முக்கிய கேள்விகள்
முதல்வர் ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் 6 கேள்விகளை எழுப்பி உள்ளார்
சென்னை: தமிழகத்தின் 5 மாவட்ட மக்களுக்காக கட்டப்பட்ட அணையில் இருந்து அவர்களது பயன்பாட்டுக்கான தண்ணீரை கேரளாவுக்கு திறந்துவிட வேண்டிய அவசியம் என்ன? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்குவதற்கு திமுக அரசுக்கு தடையாக இருப்பது எது? என்பது உட்பட 6 கேள்விகளை டிடிவி தினகரன் எழுப்பிஉள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. முல்லைப்பெரியாறு அணை குறித்த தன்னுடைய 6 சந்தேகங்களையும் எழுப்பி, அதற்கு திமுகவை பதிலளிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த அறிக்கை இதுதான்: "முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கும் உரிமையை திமுக அரசு கேரளாவிடம் பறிகொடுத்துவிட்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

உரிமைகள்
திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழ்நாட்டின் உரிமைகளை சுயலாபத்திற்காகவோ, துணிவின்மையாலோ காவு கொடுத்துவிடுவார்கள் என்ற கடந்த கால வரலாற்றை முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்திற்கு சென்று போராடி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று தீர்ப்பை பெற்றுத் தந்து, அதன்படியே அணையில் தண்ணீரையும் தேக்கிக் காட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

கேரள அமைச்சர்கள்
ஆனால், தற்போது நீர்மட்டம் 138 அடியை தாண்டியவுடனேயே கேரள அமைச்சர்களும், அம்மாநில அதிகாரிகளும் தமிழக அரசுக்கு தெரியாமலேயே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீரை திறந்துவிட்டதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதன்மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் திரு.ஸ்டாலின் மவுனம் சாதிப்பது ஏன்?

அனுமதி
1.தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அதிகாரிகள் அவர்களுடைய மாநிலத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டது எப்படி? இதன் மூலம் அணை கட்டப்பட்டதில் இருந்து 126 ஆண்டுகளாக தமிழ்நாட்டிடம் இருந்த உரிமை பறிபோய்விட்டதா?
2. உச்சநீதிமன்றத்தீர்ப்பின் படி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்குவதற்கு தி.மு.க அரசுக்கு தடையாக இருப்பது எது?
3. முல்லைப்பெரியாறு அணை குறித்து ஏற்கனவே பல்வேறு பொய் பரப்புரைகளை கேரளா தொடர்ந்து மேற்கொண்டுவரும் நிலையில், அதற்கு வலு சேர்க்கும் வகையில் தி.மு.க அரசு நடந்துகொள்வது ஏன்?

முயற்சி
4. தமிழகத்தின் 5 மாவட்ட மக்களுக்காக கட்டப்பட்ட அணையில் இருந்து அவர்களது பயன்பாட்டுக்கான தண்ணீரை கேரளாவுக்கு திறந்துவிட வேண்டிய அவசியம் என்ன?
5. இதற்கு அனுமதித்த தவறை மூடிமறைக்க முயற்சிப்பதோடு, அதனை நியாயப்படுத்தும் வகையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் பேசுவது தென்மாவட்ட மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் துரோகமில்லையா?

அதிகாரிகள்
6.தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணைப்பகுதியில் கேரளாவின் நீர்வளம் மற்றும் வேளாண் துறைகளின் அமைச்சர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து முகாமிட்டு ஆய்வு செய்யும் நிலையில், தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சரும், வேளாண்துறை அமைச்சரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இதுவரை இவர்கள் அங்கே சென்று ஆய்வு செய்யாதது ஏன்? இந்த கேள்விகளுக்கெல்லாம் முதலமைச்சர் உரிய விளக்கமளிப்பாரா? முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமை காப்பாற்றப்படுமா? இல்லை தனது தந்தை கருணாநிதி காலத்தைப் போல தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுத்துவிடுவாரா?" என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications