சந்திக்க முடியாது.. அவரை போய் பாருங்க! கடுகடுத்த ஸ்டாலின்.. "தப்புதான்".. வெலவெலத்து போன மாஜி!
கன்னியாகுமரி: நேற்று கன்னியாகுமரிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு மிகவும் கண்டிப்புடன் செயல்பட்டதுடன், மிக முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்ததாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்றாலும், முதல்வர் ஸ்டாலின் அவ்வளவு ஹாப்பியாக இல்லை என்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தலின் போது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுகவினர் பிடித்ததுதான் இதற்கு காரணம்.
பல்வேறு இடங்களில் நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்ததாலும் திமுகவினர் போட்டியிட்டு வென்றனர். இது முதல்வர் ஸ்டாலினுக்கு அதிருப்தியை கொடுத்தது.

ஸ்டாலின் கோவம்
இதனால் நான் கூனிக்குறுகி நிற்கிறேன்.. கூட்டணி கட்சி தலைவர்களிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொண்டேன் என்று முதல்வர் ஸ்டாலினும் தெரிவித்தார். அதோடு கூட்டணி கட்சியின் இடத்தில் போட்டியிட்டு வென்றவர்களை ராஜினாமா செய்ய வேண்டும். என்னை வந்து நேரில் பார்க்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால் சிலர் இன்னும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யாமல் முரண்டு பிடித்து வருகின்றனர்.

ஸ்டாலின் பாய்ச்சல்
தேர்தலில் இப்படி கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட நிர்வாகிகள், நகர செயலர்கள் ஏன் கடலூர் எம்எல்ஏ அய்யப்பன் உட்பட பலர் கட்சியில் இருந்து "தற்காலிகமாக" நீக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பூந்தமல்லி நகர செயலாளர் ரவி குமார், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் அவரின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதுதான் திமுகவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக சுரேஷ் ராஜன் நீக்கம்
இந்த சுரேஷ் ராஜன் முன்னாள் அமைச்சர். ஸ்டாலினுக்கு மிக மிக நெருக்கம். மிக நெருக்கம் என்றால் அரசியல் கடந்து இவர்களிடம் நட்பும் உள்ளது. அதோடு இவர்கள் குடும்ப ரீதியாகவும் நட்பாக உள்ளவர்கள். 23 வருடமாக திமுகவில் இந்த பொறுப்பில் இருந்தவர்தான் தற்போது நீக்கப்பட்டு இருக்கிறார். நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் இவருக்கும் சிறிய மோதல்கள் நிலவுவதாக கூறப்படுகிறது. அதோடு அங்கு நாகர்கோவில் மாநகர மேயராக பதவியேற்ற மகேஷுக்கும் இவருக்கும் மோதல் உள்ளதாம்.

மேயர் தேர்தல் வாக்குகள்
இதன் காரணமாக மேயர் தேர்தலில் சில திமுக கவுன்சிலர்களின் வாக்குகளை எதிர் தரப்பிற்கு செல்ல சுரேஷ் ராஜன் உள்ளடி வேலை பார்த்ததாக புகார் சென்றுள்ளது. மனோ தங்கராஜ், பூச்சி முருகன் ஆகியோர் மேலிடத்திற்கு இதை பற்றி புகார் அளிக்கவே சுரேஷ் ராஜன் திமுகவில் அவர் வகித்த பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். முதல்வர் தனது நெருங்கிய நண்பரிடம் இவ்வளவு கண்டிப்பு காட்டுவார் என்று திமுகவினர் நினைக்கவில்லை.

என்ன நடந்தது
ஆனால் முதல்வரோ இதைத்தான்.. உத்தரவுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடியில் பேசும்போது குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை கன்னியாகுமரி வந்த முதல்வரை அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றார். அப்போது அங்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜனும் இருந்தார். முதல்வரை எப்படியாவது சந்தித்து சமாதானம் செய்யலாம் என்று நினைத்ததாக கூறப்படுகிறது .

சந்திக்க முடியாது
அங்கு இருந்த மற்ற அமைச்சர்கள், நிர்வாகிகள் மூலம் முதல்வரை சந்திக்கும் விருப்பத்தை இவர் தெரிவித்து இருக்கிறார். அதற்கு முதல்வர் ஸ்டாலினோ அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரனிடம், சுரேஷ் ராஜனை பார்க்க முடியாது. அவரை போய் பொது செயலாளரை பார்க்க சொல்லுங்கள்.. அவர் செய்தது தவறு என்று கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சுரேஷ் ராஜன் முதல்வரை சந்திக்கவில்லை. நான் செய்தது தவறுதான்.. பொதுச்செயலாளரிடம் பேசுகிறேன்.. என்று சுரேஷ் ராஜன் தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications