சிசிடிவி! மிட் நைட்டில் கஷ்டப்பட்டாரே.. ஜெயக்குமாருக்கு எம்பி சான்ஸ் கிடைக்காதது ஏன்? இதான் சூட்சமம்
சென்னை: அதிமுக சார்பாக ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கடைசி வரை எதிர்பார்க்கப்பட்ட ஜெயக்குமார் பெயர் இடம்பெறவில்லை. ஜெயக்குமார் ஆதரவாளர்களை இந்த முடிவு கலங்கடித்து உள்ளதாம்.. ஜெயக்குமாருக்கு இந்த வாய்ப்பு பறிபோனது எப்படி என்று பார்க்கலாம்!
பொதுவாக ராஜ்ய சபா எம்பி தேர்தல் என்று இல்லை.. எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுகதான் முதலில் வேட்பாளரை அறிவிக்கும். அது ஜெயலலிதா காலத்து அதிமுக. பின்னர் ஓபிஎஸ் - இபிஎஸ் வந்த பின் அதிமுகவில் அந்த வேகம் இல்லை.
வேகம் மட்டுமின்றி.. வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.
ஜெ. பாணி... சி.வி.சண்முகத்துக்கு டிக்கெட்! மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த அதிமுக
பல கட்ட பூசல்
பல கட்ட உட்கட்சி பூசல்களுக்கு அடுத்துதான் அதிமுகவின் ராஜ்ய சபா எம்பி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஜூலையில் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 6 ராஜ்யசபா இடங்களுக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது. சட்டமன்றத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக 4 இடங்களையும் அதிமுக 2 இடங்களையும் எளிதாக கைப்பற்றும்.
அதிமுக எம்பி
திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஷ்குமார், ரா கிரிராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னொரு எம்பி பதவி காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் அதிமுக எம்பி வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் திணறி வந்தது. பல கட்ட மோதல்களுக்கு பின்பாக அதிமுக வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
சிவி சண்முகம்
இதில் சிவி சண்முகம் பெயர் ஏற்கனவே உத்தேச லிஸ்டில் இருந்த ஒன்றுதான். கண்டிப்பாக அதிமுக சார்பாக ஒரு வன்னிய சமூகத்தில் இருந்து ஒருவர் எம்பி ஆவார் என்று கூறப்பட்டது. அதோடு வழக்கறிஞர் ஒருவரும் எம்பி ஆவார் என்று கூறப்பட்டது. இரண்டு பாக்ஸையும் டிக் அடித்த காரணத்தால், முன்னாள் அமைச்சர் என்பதாலும் சிவி சண்முகத்திற்கு ராஜ்ய சபா எம்பி பதவி கிடைத்துள்ளது. இவர் தீவிர சசிகலா எதிர்ப்பாளர்.
உத்தேச லிஸ்ட்
எடப்பாடி டீம்.. எடப்பாடியின் தீவிர ஆதரவாளர். இதனால் எடப்பாடி சிவி சண்முகத்தை முன்னிறுத்தி அவரை எம்பி வேட்பாளராக்க வைத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இன்னொரு வேட்பாளராக ஜெயக்குமார் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர்..அதேபோல் எடப்பாடி ஆதரவாளர்கள், சசிகலா எதிர்ப்பாளர். இதனால் ஜெயக்குமாரை எம்பியாக்க கூடாது அல்லது சிவி சண்முகத்தை எம்பியாக்க கூடாது என்று ஓபிஎஸ் கண்டிஷன் போட்டதாக தெரிகிறது.
எடப்பாடி டீம்
இரண்டு பேருமே உங்கள் ஆதரவாளர்களாக இருந்தால் என்ன நியாயம். ஒருவரை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.. ஒருவரை நான் தேர்வு செய்கிறேன் என்று ஓபிஎஸ் கண்டிஷன் போட்டதாக தெரிகிறது. இதையடுத்தே ஓபிஎஸ் தரப்பு மூலம் தர்மர் முன்னிறுத்தப்பட்டு அவருக்கு எம்பி தேர்தலில் போட்டியிடும் சான்ஸ் வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இதில் ஜெயக்குமாரை கழற்றி விட வேறு காரணமும் இருக்கிறதாம்.
ஜெயவர்தன்
அவரின் மகன் ஜெயவர்தன் ஏற்கனவே எம்பி தேர்தலில் போட்டியிட்டவர். கண்டிப்பாக வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் போது அப்பாவிற்கும் எம்பி பதவி கொடுப்பது சரியாக இருக்காது என்று கருதி ஜெயக்குமாரை ஓரம் கட்டியதாக கூறப்படுகிறது. கனத்த இதயத்தோடுதான் ஜெயக்குமாரை எடப்பாடி ஓரம் கட்டியதாக கூறப்படுகிறது.
ஆதரவாளர்கள் இல்லை
ஆனால் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் இதனால் கடுமையான கடுப்பில், விரக்தியில் இருக்கிறார்களாம். அவர் கட்சிக்காக ஜெயிலுக்கு எல்லாம் சென்றார். மிட் நைட்டில் லுங்கியோடு கைது செய்தார்களே. சிசிடிவி வீடியோ எல்லாம் வந்ததே.. அப்படி கஷ்டப்பட்டவருக்கு சான்ஸ் கொடுக்காமல்.. யாரோ தர்மருக்கு சான்ஸ் கொடுத்துள்ளார்கள்.. ஒற்றை தலைமை இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்காதே என்று விமர்சனம் வைத்து வருகிறார்கள். ஜெயக்குமார் தரப்பு இதனால் ஓபிஎஸ் டீம் மீது கொஞ்சம் அதிருப்தியில் இருக்கிறதாம்!