அடங்காத கோபம்? சென்னையில் ரோடுஷோ முடித்து பேசாமல் சென்ற அமித்ஷா.. என்ன காரணம்? பின்னணி
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மயிலாப்பூரில் ரோடுஷோ நடத்தி சென்னையில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இந்த வேளையில் அவர் திடீரென்று ரோடுஷோவை பாதியில் முடித்து கொண்டு சென்ற நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் பாஜக மேலிட தலைவர்கள் திடீரென்று பிரசாரத்தை தீவிரப்படுத்தினர். பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என பல்வேறு தலைவர்கள் தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
அமித்ஷா பிரசாரம்
அந்த வகையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் சென்னை மயிலாப்பூரில் பாஜக - அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அந்த வகையில் மொடக்குறிச்சி பிரசாரத்தை முடித்துவிட்டு அமித்ஷா சென்னை சென்றார். சென்னை மயிலாப்பூரில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இதனால் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.
மயிலாப்பூரில் ரோடுஷோ
அதன்பிறகு மயிலாப்பூர் தொகுதியில் அமித்ஷா ரோடுஷோ நடத்தினார். அமித்ஷா திறந்த வாகனத்தில் நிற்க அவருடன் மயிலாப்பூர் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரரான், வேளச்சேரி அதிமுக வேட்பாளர் எம்கே அசோக், ஆயிரம் விளக்கு அதிமுக வேட்பாளர் பி வளர்மதி, தமிழக பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
ரோடுஷோவை முடித்துவிட்டு...
இந்த ரோடுஷோ முடிவில் தெற்கு மாடவீதியில் மக்கள் மத்தியில் அமித்ஷா பேசிவிட்டு அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அமித்ஷா பேசுவதையும், பத்திரிகையாளர் சந்திப்பையும் செய்யவில்லை. ரோடுஷோவை முடித்துவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கி புறப்பட்டு சென்றார். இது கட்சியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
பாஜகவினர் சொல்வது என்ன?
இதுபற்றி பாஜகவினரிடம் கேட்டபோது முரண்பட்ட தகவல்களை கூறி வருகின்றனர். அதன்படி சிலர், ''அமித்ஷாவுக்கு நேரமில்லை. இதனால் அவர் பேசவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தவில்லை'' என்று கூறியுள்ளார். அதேபோல் இன்னொரு தரப்போ, ''குறுகிய தெருக்களால் கூட்ட நெரிசல் அதிகமானதால் அமித்ஷா முன்கூட்டியே பிரசாரத்தை முடித்து சென்றார்'' என்றனர். அதேவேளையில் மற்றொரு தரப்பினரோ, ''எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வரவில்லை. இதனால் தான் உரையை அமித்ஷா ரத்து செய்தார்'' என கூறியுள்ளனர்.
அமித்ஷாவை எடுத்து கொண்டால் இந்த முறை தமிழகத்தில் பிரசாரத்தை குறைத்து கொண்டார். இறுதிக்கட்டத்தில் தான் தீவிரமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து அமித்ஷா ரோடுஷோ சென்றார். அதன்பிறகு மக்கள் மத்தியில் பேசினார். ஆனால் அவர் சென்னையில் பேசுவதை தவிர்த்துவிட்டார்.
அதிருப்தியின் பின்னணி என்ன?
இதற்கிடையே தான் தற்போது இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. சென்னையில் மயிலாப்பூர் உள்பட இன்னும் சில தொகுதிகளை பாஜக மேலிடம் அதிமுகவிடம் எதிர்பார்த்தது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கவில்லை. இதனால் அமித்ஷா அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் தான் அவர் தமிழகத்தில் இந்த முறை பிரசாரத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றும் தகவல்கள் வெளியான நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பாஜகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.















Click it and Unblock the Notifications