சென்னை தடுமாறுவது ஏன்? 47 வகையான முயற்சிகளை செய்ததால் தான் இந்த வாக்குப்பதிவே : ஜெ.ராதாகிருஷ்ணன்
சென்னை: தலைநகர் சென்னையில் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டுவது ஏன் என்பது பற்றி சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் வாக்குப்பதிவு சுமார் 3% சரிந்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னையில் தான் தமிழ்நாட்டிலேயே மிகவும் குறைவான வாக்குப்பதிவு நடந்துள்ளது. குறிப்பாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. சென்னையில் வழக்கமாகவே குறைவான வாக்குகளே பதிவாகும் என்றாலும், இந்த முறை அதிலும் 4% வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
வட சென்னை தொகுதியில் 2019இல் 64.26% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 60.13% வாக்குகள் பதிவாகியுள்ளது அதேபோல தென் சென்னையில் 2019இல் 57.07% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 54.27% வாக்குகள் பதிவானது. மத்திய சென்னையில் கடந்த முறை 58.98% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது.
இந்நிலையில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது பற்றி விளக்கம் அளித்துள்ளார். சென்னையின் 3 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமாக 56.10% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை விட இந்த ஆண்டு சென்னையில் 4% வாக்குப் பதிவு குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர். மற்றவர்கள் வாக்களிக்கிறார்களே, நாம் மட்டும் வாக்களிக்காவிட்டால் என்ன வித்தியாசம் வந்துவிடப்போகிறது என பலர் நினைப்பதால் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் 10-ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர். ஒட்டுமொத்தமாகவே, சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளிலுமே சீராக சுமார் 4 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது.
வாக்குப்பதிவை அதிகரிப்பதற்காக 47 வகையான முயற்சிகளை செய்தோம். அந்த அளவுக்கு முயற்சிகளை செய்திருக்காவிட்டால் இன்னும் வாக்குப்பதிவு குறைந்திருக்கும். வெயில் இருந்ததால் அதன் காரணமாகவும் சுணக்கம் இருந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் முயற்சி எடுக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications