அமைச்சர் செஞ்சி மஸ்தானின் தம்பி பதவி பறிப்பு.. தலைமை ‘ஆக்ஷன்’.. இதுதான் காரணமா? கசிந்த ஷாக் தகவல்!
சென்னை : அமைச்சர் செஞ்சி மஸ்தானின் தம்பி வகித்து வந்த கட்சி பதவியைப் பறித்துள்ளது திமுக தலைமை. மஸ்தானின் குடும்பத்தினர் தவறான நபர்களுடன் தொடர்பில் இருப்பதாக திமுக தலைமைக்கு பல்வேறு புகார்கள் சென்றதை அடுத்து காஜா நஜீரின் பதவி பறிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் 5 முறை செஞ்சி பேரூராட்சியின் தலைவராக இருந்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளராகவும் அவர் பொறுப்பு வகித்து வருகிறார். அமைச்சர் மஸ்தானின் மருமகன் ரிஸ்வான் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார்.
1994ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை, 20 ஆண்டுகள் செஞ்சி திமுக பேரூர் செயலாளராக இருந்தார் அமைச்சர் மஸ்தான். 2014ஆம் ஆண்டு மாவட்டச் செயலாளர் பதவி மஸ்தானுக்கு கொடுக்கப்பட்டதும், அவரது தம்பி வழக்கறிஞர் காஜா நஜீர் பேரூர் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், காஜா நஜீரை பேரூர் கழக செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்து, 3வது வார்டு கிளை செயலாளராக உள்ள கார்த்திக் நகர செயலாளராக நியமனம் செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 3வது வார்டு கவுன்சிலராக உள்ள கார்த்திக், 2 முறை கவுன்சிலராக இருந்தவர், அமைச்சர் மஸ்தானின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் விஷச்சாராய வழக்கில் திமுக கவுன்சிலரின் கணவர் மரூர் ராஜா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அப்போது அமைச்சர் மஸ்தான் மரூர் ராஜாவுக்கு கேக் ஊட்டும் போட்டோ தீயாகப் பரவியது. இந்தப் புகைப்படத்தை சுட்டிக்காட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மஸ்தானின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் அமைச்சர் மஸ்தானின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பல ஆண்டுகள் இருப்பதாகவும் தவறான நபர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் திமுக தலைமைக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதனையடுத்தே, செஞ்சி பேரூர் கழக செயலாளராக பதவி வகித்து வந்த காஜா நஜீரின் பதவி பறிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விழுப்புரம் வடக்கு மாவட்டட் செஞ்சி கிழக்கு ஒன்றியம் செஞ்சி பேரூர் கழக செயலாளர் காஜா நஜீர் பேரூர் கழக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்து கழகப் பணிகள் செவ்வனே நடைபெற அவருக்கு பதிலாக எம்.கார்த்திக் அவர்கள் செஞ்சி பேரூர் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications