ஆசிரியர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்காதது ஏன்? அவரை விடுங்க அண்ணாமலை கூட போகலையே!
சென்னை: ஒரு வார காலமாக பசியும் பட்டினியுமாக, தூங்காமல் ஆசிரியர்கள் தலைநகர் சென்னையில் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்கவில்லை.
ஆசிரியர்கள் கைதுக்கு மட்டும் கண்டனம் தெரிவித்து சிறியளவில் ஒரு பதிவை வெளியிட்டு எதிர்க்கட்சித் தலைவருக்குரிய கடமையை நிறைவு செய்து கொண்டார். அவரை விடுங்க அண்ணாமலை கூட ஆசிரியர்களை போராட்டக் களத்தில் நேரில் சந்திக்காதது தான் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

ஊதிய முரண்பாடுகளை களையச் சொல்லி இடைநிலை ஆசிரியர்கள் இப்போது தான் புதிதாக போராட்டம் நடத்துகிறார்கள் என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல முறை சம வேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கத்தை முன் வைத்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.
குறிப்பாக இதே கோரிக்கையை முன்னிறுத்தி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது பல்வேறு கட்ட போராட்டங்களை இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் நடத்தினர். அதேபோல் பகுதி நேர ஆசிரியர்களும் பணி நியமனம் கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக ஆட்சிக்காலங்களில் போராட்டம் பேரணி என பல்வேறு வழிகளிலும் அரசுக்கு தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.
அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பே இல்லை என்றும் ஊதிய உயர்வுக்கும் வழியில்லை என கூறி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். அதேபோல் இடைநிலை ஆசிரியர்கள் தொண்டை தண்ணீர் வற்ற கத்தியும் போராடியும் அதிமுக ஆட்சியில் அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. முதலமைச்சராக பதவி வகித்த போது, நினைத்திருந்தால் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்றலாம் என்ற அதிகாரம் கையில் இருந்தபோது எடப்பாடி பழனிசாமி பெரிதாக எதுவும் செய்யவில்லை.
இதனால் தான் இப்போது ஆசிரியர்கள் சங்கத்தினரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிப்பதை தவிர்த்து சமூக வலைதளங்களில் சிறிய ஆதரவு பதிவோடு நின்றுக்கொண்டார். சரி அண்ணாமலையாவது ஆசிரியர் சங்கத்தினரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து குரல் கொடுப்பார் என்று பார்த்தால் அவரும் அறிக்கையோடு நின்றுகொண்டார். மத்திய அரசு திட்டத்தின் கீழ், அது வகுத்துக்கொடுத்த வழிகாட்டுதலின் கீழ் பகுதி நேர ஆசிரியர்கள் நியமன ஒப்பந்தம் இருப்பதே அண்ணாமலை இதில் ஆர்வம் காட்டாமல் இருந்ததற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications