GBU படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு 2 காரணங்கள்.. இளையராஜா தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கம்
சென்னை: அஜித் குமார் நடிப்பில் அண்மையில் வெளியாகி உள்ள குட் பேட் அகலி திரைப்படத்தில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் எப்படி என்றால் வழக்கம் போல் அப்படியே பயன்படுத்தாமல் ரீமேக் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இளையராஜாவிடம் அனுமதி பெறவில்லை என்று கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ்க்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன் என இளையராஜா தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் குட் பேட் அகலி திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இந்த படம் என்பது அஜித் நடித்த பழைய படங்களின் தொகுப்பு என்று சொல்லும் அளவிற்கு பல படங்களில் காட்சிகளை ஆதிக் கையாண்டுள்ளார்.வில்லனாக வரும் அர்ஜுன் தாஸ் கேரக்டரும் அற்புதமாக உள்ளது. அஜித் நடிப்பு ஒருபுறம் எனில் அர்ஜுன் தாஸ் நடிப்பும் சிறப்பாக இருந்தது.

தியேட்டர்களில் வசூல் மழை
பல நாட்களுக்கு பிறகு அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. இதனால் ஏராளமான ரசிகர்கள் படத்தை தியேட்டரில் சென்று பார்க்கிறார்கள். குடும்பம் குடும்பமாக பலர் குட் பேட் அகலி திரைப்படத்தை பார்க்கிறார்கள், கடந்த ஐந்து நாட்களாக குட் பேட் அகலி திரைப்படம் வசூலில் வாரி குவிக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டர்களில் கூட்டம் களைகட்டுகிறது. இதனால் தியேட்டர் உரிமையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இளையராஜா நோட்டீஸ்
குட் பேட் அக்லி திரைப்படத்தை பொறுத்தவரை ஒத்த ரூபாய் தாரேன், இளமை இதோ இதோ , உள்பட இளையராஜாவின் மூன்று பாடல்கள் ரீமேக் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் தியேட்டரில் வரும் போது விசில் பறக்கிறது.படம் மக்களிடையே வரவேற்பை பெற , இந்த பாடல்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் தனது அனுமதி இல்லாமல் பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பு வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
வழக்கறிஞர் விளக்கம்
இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பியது ஏன் என தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். சரவணன் கூறுகையில், குட் பேட் அக்லி திரைப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.. அவர்கள் இந்த பாடல்களை பயன்படுத்தும் முன்பு, இசைஞானி இளையராஜா அவர்களிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.. அவருடைய பாடல்கள்.. அவர் இயக்கி இசையமைத்துள்ள பாடல்களை அனுமதி பெறாமல் பயன்படுத்தி உள்ளார்கள்.. எனவே நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.
காப்புரிமை சட்டம்
நம்முடைய காப்புரிமை சட்டப்படி, படைப்பாளிகளின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். யாரும் அதனை மீறக்கூடாது.. அதை ஜஸ்ட் லைக் என்ற பாணியில் சற்று உருமாற்றம் செய்து லாபம் அடைய கூடாது என தெளிவாக சட்டத்தில் கூறியிருக்கிறார்கள்.. அந்த சட்டங்களின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாடல்களை அவர்கள் அப்படியே பயன்படுத்தி இருந்தால் கூட பரவாயில்லை.. ஆனால் அதனை உருமாற்றம் செய்திருக்கிறார்கள்..
ரீமேக் செய்யக்கூடாது
அப்படி உருமாற்றம் அதாவது ரீமேக் செய்யும் போது, அதனை படைத்த படைப்பாளிக்கு கேள்வி எழுப்ப உரிமை உள்ளது. ரீமேக் என்ற பெயரில் கேலி, கிண்டல் செய்வது என்பது படைப்பாளியின் மனதை புண்படுத்தும் விஷயம். அதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தெளிவாக சட்டம் என்ன சொல்கிறது என்றால், படைப்பாளி தயாரித்ததை அவரின் அனுமதியின்றி உருமாற்றம் செய்வது தவறு என்று சொல்கிறார்கள்.. அந்த அடிப்படையில் இரண்டு விஷயங்களுக்காக நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். ஒன்று முன் அனுமதியின்றி அவரது பாடல்களை பயன்படுத்தி உள்ளார்கள்.. இரண்டாவதாக ரீமேக் செய்திருக்கிறார்கள். இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications