எடுபடாத ராமர் பிரச்சாரம்? எம்.ஜி.ஆர் பிரச்சாரத்தில் இறங்கிய மோடி? அண்ணாமலை அப்செட்!
சென்னை: எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பிரதமர் மோடி புகழ்ந்து பேசியது மிகப்பெரிய புயலை அரசியல் வட்டாரத்தில் கிளப்பி உள்ளது.
பல்லடத்தில் நடைபெற்ற 'என் மண் என் மக்கள்' நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசி பிரதமர் நரேந்திர மோடி, 'எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை நடத்தியதாகப் பாராட்டிப் பேசியிருந்தார்.

பிரதமர் மோடியின் பேச்சு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அனலைக் கிளப்பி உள்ளது. காரணம், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று பேசியிருந்தார். அண்ணாவை விமர்சித்திருந்தார்.
அதனால் பொங்கி எழுந்த அதிமுகவினர், பொதுக்குழு கூட்டி பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக அறிவித்தனர். மாநிலத் தலைவர் மித தரக்குறைவாக விமர்சிக்கிறார்.
அதே கட்சியினை சேர்ந்த பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த ஆட்சி தந்ததாகச் சொல்கிறார். ஒரே கட்சியில் இருந்து இரு வேறு கருத்துகள் வெளிவருகின்றனர். மோடி நல்லவர் என்றால், அண்ணாமலை ஊழல்வாதி என்கிறார்.
அது மட்டுமல்ல, பாஜகவின் மாநிலத் தலைவர் சில மாதங்கள் முன்னதாக இதே ஜெயலலிதாவை, 'என்னுடைய தாய் ஜெயலலிதாவைவிட பவர்ஃபுல்லான பெண். என் மனைவி ஜெயலலிதாவைவிட ஆயிரம் மடங்கு வலிமையானவர்' என்று பேசி விமர்சித்திருந்தார் அண்ணாமலை.

இவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அண்ணாமலை பேட்டி அளித்தபோது, ஜெயலலிதாவின் ஆட்சியில் நடைபெற்ற ஊழலை விமர்சித்திருந்தார். அதற்குக் கடுமையான எதிர்ப்பை அதிமுக முன்வைத்தது. எடப்பாடி பழனிசாமி அதற்காகத் தனியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அதிமுக நிறைவேற்றிய கண்டன தீர்மானத்தை வாசித்தார்.
அண்ணாமலையின் பேச்சைக் கண்டித்து சி.வி. சண்முகம், "எங்கள் அம்மா வைப் பற்றிப் பேசுவதற்கு இந்த அண்ணாமலைக்கு எந்தத் தராதரமும் யோக்கியதையும் இல்லை. ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு அண்ணாமலைக்குத் தகுதியே இல்லை" என்று பேசியிருந்தார்.
இதே மோடியை விமர்சித்து 2014இல் ஜெயலலிதா, 'தமிழ்நாட்டைச் சேர்ந்த வாக்காளர்களே இப்போது சொல்லுங்கள். சிறந்த நிர்வாகி யார்? குஜராத்தைச் சேர்ந்த மோடியா அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த லேடியா?

அனைத்து துறைகளிலும் சிறந்த நிர்வாகத்தைச் செய்து வருவது குஜராத்தைச் சேர்ந்த மோடி அல்ல; தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த லேடிதான்' என்று பிரச்சாரத்தில் கர்ஜித்தார்.
இப்போது அவரையே புகழ்ந்து பேசி மோடி ஓட்டு கேட்கவேண்டிய சூழல் தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது. அதற்குக் காரணம், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் கணிசமாக வாக்குகளை அதிமுகவிடம் இருந்து பாஜக பிரிக்கும் எனக் கூறியிருந்ததுதான். அதை மனதில் வைத்தே ஜெயலலிதாவைப் புகழத் தொடங்கி உள்ளார் மோடி என்கிறார்கள்.
இதற்கு மாறான ஒரு பார்வையை முன்வைக்கிறார் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி கே.சி.பழனிசாமி, "ராமரை முன்வைத்து பிரச்சாரம் செய்தார்கள். அது எடுபடவில்லை. ஆகவே எம்.ஜி.ராமச்சந்திரனை வைத்து பிரச்சாரம் செய்துள்ளார் மோடி" என்கிறார்.
பிரதமர் மோடியின் பேச்சைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் 'தராசு' ஷ்யாம் சில வரலாற்று உண்மைகளைச் சொல்லி இருக்கிறார்.

இது குறித்து ஷ்யாம், "யார் இதை எல்லாம் பிரதமருக்கு எழுதிக் கொடுக்கிறார்கள் என்பதே உண்மையில் புரியவில்லை. இவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசியதை வரவேற்க வேண்டியதுதான். ஆனால், 2014இல் இதே ஜெயலலிதாதான் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் 'இந்த லேடியா அல்லது மோடியா?' என்று அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்.
அவரைச் சொல்லி தமிழ்நாட்டில் பிரதமர் மோடி ஓட்டு வேட்டை நடத்துவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. அவர் இதற்காக வெட்கப்பட வேண்டும்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் மண்டைக்காடு கலவரம் நடைபெற்றது. அப்போது எம்.ஜி.ஆர், 'இந்த மாதிரியான மதக் கலவரங்களைத் தூண்டிவிடுகின்ற இந்து முன்னணியைக் கண்டிக்கிறேன்' என்று சட்டமன்றத்திலேயே சொன்னார். அது இன்றும் சட்ட மன்ற குறிப்பேட்டில் உள்ளது.

பிரதமர் மோடி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பெயர்களைச் சொன்னால் ஓட்டு விழும் என்று நினைக்கிறார். கட்டாயம் ஓட்டு விழும். ஆனால், அது அதிமுகவுக்குத்தான் விழும். பாஜகவுக்கு எப்படி விழும்? " என்கிறார்
இவரது கருத்துக்கு முற்றிலும் மாற்றானா பார்வையை முன்வைக்கிறார் திமுகவைச் சேர்ந்த சரவணன், "இது ஓட்டுக்களைக் கவர்வதற்காகப் பேச்சு இல்லை. அதிமுக என்ற கட்சியையே கவர்வதற்காக முயற்சி.

அதிமுக அமைச்சர்கள் சிலர் மீது 100 கோடிக்கு மேலான ஊழல் வழக்குகள் உள்ளன. அதை அமலாக்கத்துறை கண்டுகொள்ளவே இல்லை. எப்படியாவது மிரட்டிப் பணியவைத்து கூட்டணி அமைத்துவிடலாம் என பாஜக கனவு காண்கிறது. அதற்காகத்தான் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படாமல் உள்ளன" என்கிறார்














Click it and Unblock the Notifications