சென்னையில் அண்ணாமலை வீட்டருகே பாஜக கொடி கம்பத்தை அகற்றியது ஏன்? போலீஸார் பரபரப்பு விளக்கம்
சென்னை: சென்னை பனையூரில் பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டருகே ஆபத்தான முறையில் கொடி கம்பம் இருந்ததால்தான் அகற்றினோம் என போலீஸார் விளக்கமளித்தனர்.
இந்த நிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்டதற்கு போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில் ஆபத்தான முறையில் உயர் அழுத்த மின்சார லைன் அருகே அமைக்கப்பட்டதால்தான் பாஜக கொடிக் கம்பத்தை அகற்றினோம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டருகே அனுமதியில்லாமல் 45 அடி உயர கொடிக் கம்பம் இருந்தது.

அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக் கம்பத்தை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. கொடி கம்பத்தை அகற்றும் போது தர்ணா செய்தவர்களை எச்சரித்தும் தொடர்ந்து அரசு அதிகாரிகளுடன் தகராறு செய்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அது போல் இந்த விவகாரத்தில் பாஜகவினர் 110 பேர் கைது செய்து கானாத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னணி என்ன: சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லம் உள்ளது. அவரது இல்லத்திற்கு அருகில் உள்ள சுமார் 50 அடி உயர பாஜக கொடி கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். இதன் பேரில் நெடுஞ்சாலைத் துறையினர் அந்த கொடிக் கம்பத்தை அகற்றுவதற்கு ஜேசிபி உடன் வந்திருந்தனர். இதை அறிந்த 500 க்கும் மேற்பட்ட பாஜகவினர் கொடி கம்பத்தை அகற்றவிடாமல் ஜேசிபியின் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 150க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர், பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித சுமுகமான உடன்பாடும் எட்டப்படாத நிலையில் பாஜகவினரை குண்டுகட்டாக கைது செய்து நீலாங்கரை, பனையூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் அடைத்தனர்.
இதையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை இல்லம் அருகே இருந்த கொடி கம்பத்தை போலீஸார் அகற்றினர். அப்போது போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.
திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய
@BJP4Tamilnadu
சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்.
பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் @vivinbhaskaran அவர்களின் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications