இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்?
சென்னை: "கொங்கு மண்டலம்.. முக்கியமாக கோவை.. அதிமுகவின் கோட்டை!" - பல ஆண்டுகளாக அரசியல் மேடைகளில் முழங்கப்படும் இந்த ஒற்றை வரிக்கு 'செக்' வைக்க, இந்த முறை திமுக கையில் எடுத்திருக்கும் அஸ்திரம்: செந்தில் பாலாஜி.
நேற்று மதியம் அறிவாலயத்தில் இருந்து வெளியான வேட்பாளர் பட்டியலில், பல சுவாரசியங்கள் இருந்தன. சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் நேரடியாக 164 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியில் உதயசூரியன் சின்னத்தில் 11 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர்கள் பட்டியலில் சுமார் 80% படித்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் 18 பேர் பெண்கள்.

மொத்தமாக 125 பட்டதாரிகள்.. அதில் 7 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள், சட்டம் படித்தவர்கள் 29 பேர், மருத்துவர்கள் 15 பேர். அதேபோல் 4 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி கோவை தெற்கு
கோவை தெற்கு தொகுதிக்கு அருகே செந்தில் பாலாஜியின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை கிளம்பின. பொதுவாகவே 'ரிஸ்க்' எடுப்பதில் கில்லாடியான செந்தில் பாலாஜி, தனது சொந்த ஊரான கரூரை விட்டுவிட்டு, இதுவரை திமுக ஜெயிக்காத ஒரு தொகுதியைத் தேடிப் பிடித்திருப்பதன் பின்னணியில் ஒரு மாபெரும் அரசியல் ஸ்கெட்ச் இருப்பதாகச் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.
சவாலைத் தேடி ஒரு பயணம்
கடந்த முறை பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற தொகுதி இது. அதற்கு முன்னால் இரண்டு முறை அதிமுகவின் வசம் இருந்த தொகுதி. அதாவது, 'தாமரை' மலர்ந்த, 'இலை' தழைத்த இந்த மண்ணில் 'உதயசூரியனை' உதிக்க வைக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு இருக்கிறது.
"ஏன் கோவை தெற்கு?" என்று கேட்டால், செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து வரும் பதில் அதிரடியாக இருக்கிறது. "கோவையை அதிமுகவின் கோட்டை என்று சொல்வதை அடியோடு மாற்ற வேண்டும். அதைச் செய்ய வேண்டுமானால், அந்தக் கோட்டையின் மையப்பகுதியிலேயே நேரடியாக மோத வேண்டும்" என்பதுதான் அவர் தலைமைக்குச் சொன்ன ஒற்றை வரி அசைன்மென்ட்.
களம் காணும் வேட்பாளர்கள்
அதிமுக தரப்பில் அம்மன் அர்ஜுனன் களம் இறக்கப்பட்டுள்ளார். கோவையின் நாடித் துடிப்பு தெரிந்தவர், ஏற்கனவே வெற்றி முகம் கண்டவர் என அதிமுக தெம்பாக இருக்கிறது. ஆனால், செந்தில் பாலாஜியின் 'எலெக்ஷன் மேனேஜ்மென்ட்' என்பது ஒரு தனி கலை.
செந்தில் பாலாஜி (திமுக): கொங்கு அரசியலின் சதுரங்க வேட்டைக்காரர். வியூகம் அமைப்பதில் வல்லவர்.
அம்மன் அர்ஜுனன் (அதிமுக): தொகுதி செல்வாக்கு மற்றும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் பலம் கொண்டவர்.
கிங் மேக்கரா? கிங்கா?
"கோவை தெற்கில் ஜெயித்தால், அது வெறும் வெற்றி அல்ல; கொங்கு மண்டலம் முழுமைக்கும் ஒரு மெசேஜ்" என்பதே அறிவாலயத்தின் கணக்கு. கரூரைத் தாண்டி கோவை அரசியலில் செந்தில் பாலாஜி காலூன்றுவது, அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இங்கே லோக்சபா தேர்தல் பணிகளை வெற்றிகரமாக செய்தவர்.
வானதி சீனிவாசன் வென்ற தொகுதியில், பாஜகவின் செல்வாக்கையும் தாண்டி, அதிமுகவின் பலத்தையும் மீறி, செந்தில் பாலாஜி 'மேஜிக்' செய்வாரா?
கோவை மாநகரின் மையத்தில் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. இது வெறும் தேர்தல் அல்ல; கொங்கு அரசியலில் யார் 'கிங்' என்பதைத் தீர்மானிக்கும் கௌரவப் போர்!












Click it and Unblock the Notifications