திமுகனா வைலண்ட்.. பாஜகனா சைலண்ட்! டோனை மாற்றும் விஜய்.. ரூட்டை மாற்ற டெல்லி காரணமா? பரபர பாலிடிக்ஸ்!
சென்னை: கரூரில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நடத்திய முதல் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்பட்டது. காரணம், தமிழகத்தில் திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியை நேரடியாக தாக்குவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகமாக இருந்தது.
ஆனால், புதுச்சேரி மேடையில் விஜயின் பேச்சு எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக இருந்தது. திமுகவை விமர்சிப்பதில் எந்த தயக்கமும் காட்டாத விஜய், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை நேரடியாக தாக்கவில்லை.
பாஜக குறித்து குறிப்பிடத்தக்க விமர்சனங்கள் எதையும் முன்வைக்காமல், பொதுவான கருத்துகளுடன் தனது உரையை முடித்தார். இதுவே அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

விஜய் புதுச்சேரி கூட்டம்
புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியின் மீது அனல் பறக்கும் விமர்சனம் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த விமர்சனம் முழுமையாக இல்லாதது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதனால், விஜய் திட்டமிட்டு பாஜக விமர்சனத்தை தவிர்த்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த திடீர் மவுனத்திற்குப் பின்னால் டெல்லியிலிருந்து வந்த எச்சரிக்கையே காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பாஜக விமர்சனம் தவிர்ப்பு
புதுச்சேரி கூட்டத்திற்கு முன்பாகவே, மத்திய அரசியல் வட்டாரங்கள் மற்றும் உளவுத்துறை தரப்பிலிருந்து விஜய்க்கு ஒரு 'அலர்ட்' சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால்தான், பாஜக ஆட்சியை நேரடியாக விமர்சிப்பதை அவர் தவிர்த்ததாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் விஜய் தொடர்ந்து திமுகவை மட்டுமே கடுமையாக தாக்கி வருவது, ஆனால் பாஜக குறித்து மென்மையான அணுகுமுறையை பின்பற்றுவது அரசியல் பார்வையாளர்களிடையே கேள்விகளை உருவாக்கியுள்ளது. "பாஜகவை விமர்சிக்காதது?" என்ற கேள்வி சமூக வலைதளங்களிலும், அரசியல் விவாதங்களிலும் அடிக்கடி எழுந்து வருகிறது.
திமுக மற்றும் பாஜக
இந்த விவகாரம் குறித்து விஜயின் வியூக குழு அவரிடம் எடுத்துச் சென்றபோது, அவர் அளித்த விளக்கம் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை. ஆனால், அரசியல் பார்வையாளர்கள் கூறுவது என்னவென்றால், இது வெறும் மேடைத் தந்திரமல்ல; எதிர்கால அரசியல் கணக்குகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதே. அரசியலுக்கு வந்த ஆரம்ப காலங்களில், விஜய் திமுக மற்றும் பாஜக இரு கட்சிகளையும் சமமாக விமர்சித்தார்.
விஜய் அரசியல் வியூகம்
மத்திய அரசின் கொள்கைகள் குறித்தும், பாஜகவின் அணுகுமுறைகள் குறித்தும் அவர் வெளிப்படையாக பேசினார். ஆனால் சமீப காலமாக, பாஜக விமர்சனத்தில் இருந்து அவர் விலகி நிற்பது தெளிவாக தெரிகிறது. இந்த மாற்றம் அரசியல் மாற்றமா அல்லது டெல்லியின் அழுத்தமா என்ற விவாதம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மேடை இதை தெளிவாக வெளிப்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அமித்ஷா
மத்திய அரசின் எச்சரிக்கை மாநில அரசியலிலும் தாக்கம் செலுத்துகிறதா என்ற கேள்வி இதன் மூலம் மீண்டும் எழுந்துள்ளது. அமித்ஷாவின் எச்சரிக்கை காரணமாக விஜயின் அரசியல் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகிறதா அல்லது வரவிருக்கும் அரசியல் கூட்டணிகளுக்கு இது முன்னோட்டமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், புதுச்சேரி கூட்டத்தில் விஜய் காட்டிய மவுனம், அரசியல் அரங்கில் பெரிய சத்தமாகவே எதிரொலிக்கிறது.












Click it and Unblock the Notifications