தவெக, தேமுதிக! அது ஏன் இன்னிக்குன்னு பார்த்து விருப்பமனு விநியோகிக்குறாங்க! பிப்.6-க்கு என்ன விசேஷம்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தேமுதிக, தவெக ஆகிய இரு கட்சிகள் குறிப்பாக இன்றைய தினம் விருப்பமனுவை விநியோகிக்க காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, விருப்பமனு விநியோகம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அதிமுக, அன்புமணி பாமக, ராமதாஸ் பாமக ஆகிய கட்சிகள் தங்கள் நிர்வாகிகளிடம் இருந்து விருப்பமனுக்களை பெற்றுள்ளன. இவை மூன்று கட்சிகளும் வெவ்வேறு நாட்களில் இந்த விருப்பமனுக்களை விநியோகம் செய்தன.
இந்த நிலையில் இன்றைய தினம் தேமுதிக, தவெக ஆகிய இரு கட்சிகளும் ஒரே நாளில் விருப்ப மனுக்களை விநியோகிக்கிறார்கள். தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அது போல் பனையூர் தவெக அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெறலாம் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதனால் இன்று கோயம்பேடு, பனையூர் அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இது எல்லாம் இருக்கட்டும் ஏன் இரு கட்சிகளும் ஒரே நாளில் விருப்பமனுக்கள் விநியோகம் செய்கின்றன என்பதை ஜோதிட ரீதியில் பார்க்கலாம்.
அதாவது இன்றைய தினம் பிப்ரவரி 6ஆம் தேதி தேய்பிறை பஞ்சமி திதி. நல்ல முகூர்த்த நாள். அதிலும் வெள்ளிக்கிழமை! இன்றைய தினம் திருமணம், சுபகாரியம் என அனைத்தும் தொடங்கி வெற்றி தரும் சுபயோக சுபதினம் ஆகும்.
பஞ்சமி திதி என்பது வாராஹி வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். இன்றைய தினம் வாராஹியை வழிபட்டால் தீய சக்திகள், எதிரிகள், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
வளர்பிறை பஞ்சமி நல்ல காரியங்களை செய்வதற்கும் தேய்பிறை பஞ்சமி தீயவற்றை நீக்குவதற்கும் சிறந்தது. அது போல் நல்ல திதிகளில் பஞ்சமியும் ஒன்று! எனவே இன்று பஞ்சமி திதி, நல்ல முகூர்த்த தினம் என்பதால்தான் தேமுதிக, தவெக விருப்பமனுக்களை பெறுகிறது என பிரபல ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications