‛செருப்பே அறுந்துபோச்சு’.. வடக்கு-தெற்கு பிரச்சனையை மீண்டும் திமுக எடுத்தது ஏன்? எச்சரித்த அண்ணாமலை
சென்னை: திமுக மீண்டும் வடக்கு-தெற்கு பிரச்சனையை கையில் எடுத்துள்ளது ஏன்? என்பது பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கி உள்ளார். அதோடு இந்த பிரச்சனையில் ஏற்படும் விளைவை திமுக தான் எதிர்கொள்ள வேண்டும் என காட்டமாக எச்சரித்துள்ளார்.
திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களை இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்தவர் தசிக கண்ணன். இவர் மறைந்த தமிழறிஞர் கிஆபெ விசுவநாதனின் மருமகன் ஆவார். இந்நிலையில் தான் தசிக கண்ணன் உருவப்படத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி என்பது சென்னை ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி அரங்கில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் உள்பட பலர் பங்கேற்றனர். உருவப்படத்தை அண்ணாமலை திறந்து வைத்து பேசினார்.
அப்போது மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வை தென்மாநிலங்களுக்கு குறைவாகவும், வடக்கு மாநிலங்களுக்கு அதிகமாகவும் வழங்குவதாக திமுக குற்றம்சாட்டி வரும் நிலையில் அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக அண்ணாமலை பேசியதாவது:
பிரதமராக மோடி பதவியேற்றபோது மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு வழங்கும் நிதிப் பகிர்வு 32 சதவீதமாக இருந்தது. இது தற்போது 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு 30.5 ஆக இருந்தது. அப்போது அதை அதிகரிக்க வேண்டும் என மோடி வலியுறுத்தினார்.
1960ல் பல நிதிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு தீர்மானிக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு மாநிலங்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கான மொத்த நிதியில் 60 சதவீதத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டது. எஞ்சிய 40 சதவீத நிதியை பிற வகையில் கணக்கிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசால் நிதிப் பகிர்வாக வழங்கப்பட்டது.
ஆனால் இப்போது ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை, அந்த மாநிலத்திற்கான நிதிப் பகிர்வில் 15 சதவீதம் என்ற அளவில் மட்டுமே கணக்கிடப்படுகிறது. ஜிஎஸ்டி வசூலில் 50 ரூபாய் மாநிலத்திற்கு நேரடியாகவும், 21 ரூபாய் மறைமுகமாக மானியங்களாகவும் மொத்தம் 71 ரூபாய் அந்தந்த மாநிலங்களுக்கே கொடுக்கப்படுகிறது.
இந்தியா டுடே பத்திரிகை கடந்த ஆண்டு ஸ்டாலினை இந்தியாவில் அதிக புகழ்பெற்ற முதல்வர் என்று கூறியபோது திமுகவினர் அதை பெருமையாக பேசினர். ஆனால் இப்போது வந்துள்ள சர்வே முடிவு பற்றி அவர்கள் எதுவுமே பேசுவதில்லை. இதனால் திமுகவினர் வடக்கு - தெற்கு பிரச்னையை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். இந்த வடக்கு - தெற்கு பிரச்னை என்பது அறுந்துபோன செருப்பு போன்றது. அதை மீண்டும் கொண்டு வந்தால் அதன் விளைவை திமுகவினர்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.
எல் முருகன் குறித்து டிஆர் பாலு பேசியதை நாங்கள் சாதி ரீதியாக கொண்டு செல்லவில்லை. டிஆர் பாலு, எல் முருகன் அமைச்சராக இருக்கவே தகுதியற்றவர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அவரது உடல் மொழி, பேசிய பேச்சை மக்களும் பார்த்துள்ளனர். எனவே அதை வேறு எந்த கோணத்தில் எடுத்துக் கொள்ள முடியும்? இதில் சமூக நீதி இல்லையே. ஏற்கெனவே ஒருமுறை நாங்கள் என்ன தீண்டத்தகாதவர்களா என்ற வார்த்தையை டிஆர் பாலு பயன்படுத்தினார்.
நான்கரை ஆண்டு காலம் பாஜக தயவில்தான் அதிமுக ஆட்சி இருந்தது என்று ஓ பன்னீர்செல்வம் கருத்து குறித்து நான் கருத்து கூற முடியாது. உட்கட்சி பிரச்சனையில் நாங்கள் குளிர்காய மாட்டோம். 2017 - 21 காலகட்டத்தில் அதிமுக எப்படி இருந்தது என்பது பாஜகவிற்குத் தெரியாது. ஆனால் அந்த கட்சிக்குள்ளே இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அது தெரிந்திருக்கலாம். பிரதமர் மீது தொடர்ந்து மரியாதை வைத்திருக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னைக்குள் நடைபயணத்திற்கு அனுமதி வழங்காததால் காவல்துறை மீது எந்த கோபமும் இல்லை. சென்னைக்குள் போக்குவரத்து முக்கியத்துவம் உள்ள சாலைகளில் இல்லாமல் மற்ற சாலைகளில் யாத்திரைக்கு அனுமதி தந்தால் போதும் என்றுதான் கேட்டோம். எங்கள் யாத்திரையில் இதுவரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications