3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்.. திமுக பதறுவது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
சென்னை: 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்; இதற்கு திமுக பதறுவது ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிமுகவின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி, அறந்தாங்கி ரத்னசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம கலைச்செல்வன் ஆகிய மூன்று அதிமுக எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக, ஏற்கனவே சொன்னது போல், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும் தீர்மானத்தை சட்டசபை செயலாளரிடம் அளித்துள்ளது. திமுகவின் ஆர்எஸ்பாரதி தலைமையிலான குழுவினர் இன்று மனுவினை அளித்தனர்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், " அதிமுக ஜனநாயக படுகொலை செய்வதாக ஆர்எஸ் பாரதி கூறுகிறார். ஆனால் ஜனநாயக படுகொலைக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர் தான். 1989ம் ஆண்டு பெண் என்றும் பாராமல் ஜெயலலிதாவை முடியை பிடித்து இழுத்து அடித்து கேவலப்படுத்தினார்கள். அதன்பிறகு திருப்பரங்குன்றம் எம்எல்ஏவை அறை எல்லாம் காலி செய்து அவரை துன்புறத்தினார்கள்.
இந்நிலையில் இப்போதைய சூழலில் கட்சியும் ஆட்சியும் நிலைக்க வேண்டும் என்பதற்காக கட்சியின் கொறடா கட்சி தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரியுள்ளார். ஆதாரத்தின் அடிப்படையில் விளக்கம் கேட்டு 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதற்கு திமுக பதறுவது ஏன்? எதுவாகிலும் அதிமுக சட்டத்திற்கு உட்பட்டுத்தான் செயல்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications