தேவர் குருபூஜை தங்க கவசம்.. தனி டீம் இறக்கிய எடப்பாடி! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! கவனிக்கும் ஓபிஎஸ்
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் தொடரும் நிலையில், தேவர் குரு பூஜை விவகாரத்திலும் தங்கக் கவசத்தைப் பெற இரு தரப்பும் முயன்று வருகிறது.
அதிமுகவில் இப்போது உட்கட்சி குழப்பம் ஏற்பட்டு உள்ளது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என்று இரு பிரிவுகளாக அதிமுக இப்போது இயங்கி வருகிறது.
இரு தரப்புமே தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் தங்கள் பின்னால் தான் அதிமுக தொண்டர்கள் உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

தேவர் குரு பூஜை
இரு தரப்பும் எல்லா விஷயங்களிலும் மோதல் போக்கையே கடைப் பிடித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அதேபோல வரும் திங்கள்கிழமை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாற்றம் மற்றும் ஓபிஎஸ் இருக்கை தொடர்பாக எடப்பாடி அணியினர் பிரச்சினையை எழுப்பி உள்ளனர். இதற்கிடையே குருபூஜை தங்கக் கவசம் விவகாரத்திலும் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

தங்கக் கவசம்
கடந்த 2014ஆம் ஆண்டில் ராமநாதபுரம் பசும்பொன்னில் இருக்கும் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு ரூபாய் 4.5 கோடி மதிப்பிலான தங்கக் கவசம் ஒன்று அதிமுக சார்பில் அணிவிக்கப்பட்டது. இந்தத் தங்கக் கவசத்தின் எடை 13.5 கிலோ ஆகும். இந்த தங்கக்கவசம் மதுரை அண்ணா நகரில் இருக்கும் வங்கியில் வைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா அக். 28 முதல் 30 வரை கொண்டாடப்படும் நிலையில், அப்போது மட்டும் தங்கக் கவசம் எடுத்து வரப்படும். அதிமுக பொருளாளரும் தேவர் நினைவிட பொறுப்பாளரும் வங்கியில் கையெழுத்திட்டுத் தங்கக் கவசத்தைப் பெற்று வருவார்கள்.

அதிமுக
அதன் பின்னர் தேவர் குருபூஜை காலத்தில் தேவர் சிலைக்கு இந்த தங்கக் கவசம் அணிவிக்கப்படும். இப்போது அதிமுக இரு பிரிவுகளாகப் பிளவுபட்டு உள்ள நிலையில், இந்த தங்கக் கவசத்தை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என இரு தரப்புமே தங்களுக்குத் தான் தங்கக் கவசத்தைக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். முன்னதாக கடந்த 2017இல் எடப்பாடி, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் என்று மூன்று பிரிவுகளாக இருந்த போதும் இந்தக் குழப்பம் ஏற்பட்டு இருந்தது.

எடப்பாடி
அப்போது மூன்று தரப்புமே தங்க கவசத்திற்கு உரிமை கோரி வங்கிக்கு தனித்தனியாகக் கடிதம் கொடுத்து இருந்தனர். ஒரு தரப்பிற்குக் கொடுத்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால் அப்போது தேவர் நினைவிட பொறுப்பாளர் முன்னிலையில் அப்போதைய மதுரை கலெக்டரிடம் தங்கக் கவசத்தைக் கொடுத்தது வங்கி நிர்வாகம். இப்போது மீண்டும் கிட்டத்தட்ட அதே நிலைமை தான் ஏற்பட்டு உள்ளது. எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் என இருவருமே தங்கக் கவசத்திற்கு உரிமை கோருகின்றனர். ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் கட்சியின் பொருளாளர் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

தனி டீம்
மறுபுறம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பொருளாளராகவும் ஓபிஎஸ் தொடர்வதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். முன்னதாக அதிமுக வங்கி கணக்கு தொடர்பாக எவ்வித பரிவர்த்தனைகளும் நடக்கக் கூடாது என்று ஓபிஎஸ் வங்கிகளுக்கும் கடிதம் எழுதி இருந்தார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், சிக்கல் தொடர்கிறது. இதன் காரணமாக இந்தாண்டு தங்கக் கவசத்தை யார் பெறுவது என்ற கேள்வி எழுந்தது. இந்தச் சூழலில் எடப்பாடி தனது டீமை நேற்று களமிறக்கினார்.

பேச்சுவார்த்தை
எடப்பாடி ஆதரவாளர்களான திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன், காமராஜ், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் நேற்று ராமநாதபுரம் சென்றனர். அங்குப் பசும்பொன்னில் . தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர், தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாளிடம் வங்கியில் அளிக்கும் மனுவைக் கொடுத்தனர். இதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தர வேண்டும் என்று அவர்கள் கேட்டதாகத் தெரிகிறது.

கிடைக்கவில்லை
இந்த விஷயம் தொடர்பாக ஆர்பி. உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எடப்பாடி, ஒபிஎஸ் என யாருக்கும் ஆதரவு தர முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது. மேலும், வங்கி மற்றும் அரசு எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு அளிக்கப்போவதாகவும் அதிமுக நிர்வாகிகளிடம் கூறி உள்ளனர்.

பொதுமக்கள்
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் கையெழுத்து பெற முடியாததால் எடப்பாடி ஆதரவு அதிமுக நிர்வாகிகள் கிளம்பிச் சென்றனர். ஓபிஎஸ் இந்த விவகாரத்திதை கவனித்து பொறுமையாக முடிவெடுக்க உள்ளார். தேவர் குரு பூஜைக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், இந்த விஷயத்தில் அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் எந்த பிரச்சினையும் இல்லாமல் தங்கக் கவசத்தைப் பசும்பொன் எடுத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications