"தங்கம் ஏன் முக்கியம்.. ஒவ்வொரு நபரும் ஏன் அதை வாங்கணும்?" எளிமையாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: வரலாற்றில் இல்லாத அளவுக்குத் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், தங்கத்தை நாம் எதற்காக வாங்க வேண்டும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக அதிகரித்தே வருகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்குத் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இப்போது ஒரு கிராம் தங்கம் ₹6,390க்கு விற்பனையாகிறது.

அதேபோல ஒரு சவரன் 51,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரும் காலங்களிலும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குத் தங்கம் தான் முதல் மற்றும் ஒரே சேமிப்பாக இருக்கிறது. தங்கம் தான் சரியான சேமிப்பு என்பதால் இவர்கள் தொடர்ந்து தங்கம் வாங்கி வருகிறார்கள். அதேநேரம் மறுபுறம் தங்கம் வாங்க வேண்டாம் என்று திடீரென ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். நீண்ட கால நோக்கில் தங்கத்தில் பெரியளவில் லாபம் கிடைக்காது என்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இதை விட நல்ல லாபம் கிடைக்கும் என்பதே அவர்கள் வாதமாக இருக்கிறது.
இந்தச் சூழலில் தங்கம் ஏன் முக்கியமானது. தங்கத்தில் நாம் ஏன் சேமிக்க வேண்டும் என்பது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கி உள்ளார். இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், வரும் காலத்திலும் இதுவே நடக்கும் என்பதால் அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளத் தங்கம் உதவும் என்று ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது வீடியோவில் மேலும் கூறுகையில், "அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே முக்கியமான ஒரு வேறுபாடு இருக்கிறது. அதுதான் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவது. நீங்கள் அமெரிக்காவில் வசிக்கும் நபராக இருந்தால் தங்கம் குறித்து அவ்வளவாகப் பேச மாட்டேன். ஏனென்றால் அமெரிக்காவாக இருந்தால் உங்களால் மிக எளிதாகக் கடன் வாங்க முடியும். அவசரம் என்றால் ரொம்ப சீக்கிரம் கடன் கிடைக்கும்.
மேலும், சர்வதேச அளவில் எப்போதும் டாலர் தான் கிங் கரன்சி.. உங்களுக்குச் சம்பளமும் டாலரில் தான் வரும். எனவே பிரச்சினை இருக்காது. அதேநேரம் இந்தியாவைப் பொறுத்தவரை இங்கே ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் தங்கத்தின் மீது எப்போதும் அழுத்தம் இருக்கும். இதன் காரணமாகவே தங்கத்தை வாங்கக்கூடாது என்று தொடர்ச்சியாக ஒரு தரப்பு சொல்லி வருவார்கள்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதற்கு முன்பு பதிவான அதிகபட்ச விலையில் இருந்து பெரியளவில் அதிகரிக்கவில்லை. ஆனால், நமது நாட்டில் 2011ஆம் ஆண்டில் தங்கம் விலை ஒரு கிராம் 2600 ரூபாய் என்ற ரேஞ்சில் இருந்தது. இப்போது தங்கம் விலை இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துவிட்டது. எனவே, தங்கத்தை வாங்காமல் இருப்பது தவறான நிலைப்பாடு.
நாம் ஒன்றும் அமெரிக்காவில் வாழவில்லை. நம் இந்தியாவில் வாழ்கிறோம். இங்கே ரூபாய் மதிப்பு மேலும் மேலும் சரியும். அப்போது தங்கம் விலை மேலும் மேலும் உயரும். எனவே தங்கத்தை வாங்குவதே சரியான முடிவாக இருக்கும்" என்று அவர் கூறினார். தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே ஆனந்த் சீனிவாசன் கூறி வருகிறார். இன்னும் 15 முதல் 18 மாதங்களில் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.8000ஐ கடக்கும் என்று அவர் சொல்லி உள்ளார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications