அவ்வளவுதான்.. இனி குறையாது.. தங்கம் விலை ரூ.7000ஐ தாண்டும்! ஆனந்த் சீனிவாசன் பரபர! எப்போது தெரியுமா
சென்னை: கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இதற்கான காரணத்தை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், அடுத்து வரும் காலத்தில் தங்கம் எவ்வளவு உயரும் என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.
தங்கம் என்பது எப்போதும் ஆபத்தான காலத்தில் உதவும் என்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகவே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகளவில் தங்கத்தில் சேமிப்பார்கள்.

மற்ற முதலீடுகள் குறித்துத் தெரியாத நபர்களும் கூட தங்கத்தைத் தான் வாங்குவார்கள். அது முதலீடு எனத் தெரியாது என்றாலும் தங்கம் வாங்க வேண்டும் எனப் பெரியவர்கள் தொடர்ந்து சொல்வதால் அதைப் பின்பற்றுவார்கள்.
தங்கம்: நமக்கு எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் தங்கம் இருந்தால் போதும் நிலைமையைச் சமாளித்துவிடலாம். வீடு, பங்குகள் எனச் சொத்து இருந்தாலும், அவற்றை உடனடியாக ரொக்கமாக மாற்ற முடியாது. அதேநேரம் தங்கமாக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் அதை எளிதாக ரொக்கமாக மாற்ற முடியும். இதன் காரணமாகவே தங்கம் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறுகிறது.
கடந்த சில மாதங்களாக உயராமல் இருந்த தங்கம் விலை, இப்போது திடீரென உயரத் தொடங்கியுள்ளது. இன்று (டிச.16) சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.5790க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6316க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை ஏன் உயர்கிறது. வரும் காலத்தில் அது எந்தளவுக்கு உயரும் என்பது குறித்து விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் கூறுகையில், "தங்கம் விலை இப்படியே தான் இருக்கும். கொஞ்சம் ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், எப்போது வேண்டுமானாலும் அதில் ஒரு திடீர் ஏற்றம் வர வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய சூழலை வைத்துப் பார்த்தால் ரூ.5,500க்கு கீழே போகாது என்றே நினைக்கிறேன். தங்கத்தை வாங்குவது குறித்து முடிவெடுக்க இது சரியான நேரம். இதை விட்டால் கஷ்டம்தான்" என்றார்.
அதேபோல அவர் தனது மற்றொரு வீடியோவில், "கடந்த சில நாட்களாகப் பங்குச்சந்தை வேகமாக உயர்ந்து வருகிறது. அதேபோல தங்கமும் கூட தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இப்போதே நீங்கள் தங்கம் வாங்கச் சென்றால் ஜிஎஸ்டி, செய் கூலி எல்லாம் சேர்த்து 6000 ரூபாய்க்கு மேல் தர வேண்டி இருக்கும்.
வட்டி விகிதம்: இதற்குக் காரணம் ஜெரோம் பவல் சமீபத்தில் அங்கு நடந்த மீட்டிங்கில் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருந்தார். நாங்கள் எடுத்த நடவடிக்கைகளால் அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்று ஜெரோம் பவல் கூறியிருந்தார். இப்போது வட்டி விகிதம் 5.5%ஆக உள்ள நிலையில், அடுத்த கிறிஸ்துமஸ் சமயத்தில் வட்டி விகிதம் 4.6%ஆக இருக்கிறது.
அடுத்தாண்டு டிசம்பரில் வரும் சந்தோஷத்தைத் தான் பங்குச்சந்தை இப்போதே கொண்டாடி வருகிறது. இதனால் டாலர் மதிப்பு குறைந்த நிலையில்,தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறியது. பங்குச்சந்தையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அடுத்தாண்டு வரப்போகும் வட்டி விகித குறைப்பு செய்திக்கு மார்கெட் இப்போதே கொண்டாடித் தீர்த்துள்ளது. அதுதான் பங்குச்சந்தை.
ரூ.7000க்கு செல்லும்: அடுத்த 12 மாதங்களில் ஜெரோம் பவல் சொன்னது போல அவர் வட்டி விகிதத்தை 0.75% வரை குறைத்தால் தங்கம் விலை வேகமாக அதிகரிக்கும். அப்போது தங்கம் விலை எளிதாக ரூ.7000 முதல் 7300 வரை செல்லும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications