கைது செய்தவர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் பாயவில்லை? ஆம்ஸ்ட்ராங் வழக்கறிஞர் சந்தேகம்?
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏன் இதுவரை குண்டர் சட்டம் போடப்படவில்லை? என்று காவல்துறை மீது அவரது வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி சில சந்தேகங்களை முன்வைத்துள்ளார்.
பிஎஸ்பியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 11 பேரை போலீசார் கைது செய்து அவர்களைச் சிறையில் அடைத்தனர். பின்னர் இவர்களைச் சிறைக்காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வந்தநிலையில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலை தொடர்பாக வழக்கறிஞர்கள் மலர்க்கொடி சேகர், ஹரிஹரன், சதீஷ் ஆகியோர் கைதானநிலையில் தலைமறைவாக இருந்துவந்த ஆற்காடு சுரேஷின் மனைவியும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலை சில நாட்கள் முன்னதாக போலீசார் ஓட்டேரியில் வைத்து கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவுடி சம்போ செந்தில் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. ஆகவே சம்போ செந்தில் என்ற செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கறிஞரும் அவரது நெருங்கிய நண்பருமான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஒரு யூடியூப் சேனலுக்கு கொலை தொடர்பாகவும் வழக்குத் தொடர்பாகவும் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “முதலில் இந்த வழக்கைப் பற்றிய ஒரு விசயத்தை தெளிவுபடுத்திவிட வேண்டும் என்று நினைக்கிறேன். முதலில் 8 பேர் கைது செய்யப்பட்டனர் என்று சொன்னார்கள். அது கைது இல்லை. சரண்டர். அதன்பின்னர் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதான் உண்மையான நிலவரம்.
மாயாவதி உட்படப் பலரும் சிபிஐ விசாரணை கேட்டார்கள். அரசு அதை ஏற்கவில்லை. உடனடியாக உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அதன்பின்னர் அருண் ஐபிஎஸ் அந்தப் பதவிக்கு புதியதாகப் பொறுப்பேற்றார். அவர் துடிப்பு மிக்க இளம் அதிகாரிதான். ஆனால், அவர் வந்த பிறகும்கூட இந்தக் கொலை சம்பவத்தில் சில முக்கியமான முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை என்பதுதான் நிஜம்.
உடனடியாக திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்தார்கள். அதற்கு என்ன காரணம் என்றே இதுவரை புரியவில்லை. எங்களைப் பொறுத்தவரை அது ஒரு போலியான என்கவுண்டர்தான். நான் பல போலி என்கவுண்டர் வழக்குகளை நடத்தி இருக்கிறேன். அதில் சில காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை வரை வாங்கிக் கொடுத்துள்ளேன். ஆகவே, எது உண்மையான என்கவுண்டர் என்பது எனக்குத் தெரியும்.
சட்டப்படி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட போது காவல்துறை கைப்பற்றிய சிசிடி காட்சிகள் இந்த வழக்கில் மிக முக்கியமான ஆதாரங்கள். அதை எப்படி காவல்துறை அதிகாரிகள் பொதுவெளியில் வெளியிட்டார்கள் என்றே தெரியவில்லை? இந்த வழக்கில் மலர்க்கொடி, அருள், ஹரிகரன் என சில வழக்கறிஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இவர்கள் யாரும் படித்து பட்டம் வாங்கிய உண்மையான வழக்கறிஞர்கள் இல்லை. எனவே இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்.
ஆனால், இந்தக் கொலைக்குப் பின்னணியில் பல கட்சி பிரமுகர்கள் தொடர்பு இருந்துள்ளது எனச் சொல்கிறார்கள். பாமக, பாஜக, அதிமுக, திமுக எனப் பல கட்சியினர் தோண்டத் தோண்ட வருகிறார்கள். இவர்களை எல்லாம் விட ஒரு மிக முக்கியமான அரசியல்வாதிக்குத் தொடர்பு இருக்கிறது என்று நான் பகிரங்கமாகச் சொல்கிறேன். அவரின் குடும்பப் பிரச்சினை சார்ந்து ஒரு விசயத்தில் ஆம்ஸ்ட்ராங் நியாயம் கேட்டார். பாதிக்கப்பட்டவர் பக்கம் இருந்தார். ஆகவே அவரது தொடர்பும் இருக்குமோ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்.
திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்துவிட்டு, அந்தக் காட்சிகளை வேண்டும் என்றே மற்ற ரவுடிகளிடம் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக அந்தக் காட்சிகளை வெளியிடுகிறார்கள். காட்சிகளை வெளியிட்ட காவல்துறை ஏன் திருவேங்கடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை வெளியிடவில்லை? அதையும் வெளியிடலாமே? ஆகவேதான் சிபிஐ விசாரணை கேட்கிறோம். அதற்காக ஒரு பொதுநல வழக்குப் போடலாம் என நினைத்துள்ளேன். ஆனால், பலர் அதற்கு முன்வர மறுக்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் 16 ஆம் நாள் நிகழ்வுக்கு காவல்துறை முன்கூட்டியே உஷார் படுத்தப்பட்டது.
அப்படி என்றால், அவரைக் கொலை செய்ய திட்டம் வகுத்த போது ஏன் எச்சரிக்கவில்லை. உளவுத்துறை எங்கே போனது? சென்னை சிட்டி உளவுத்துறை என்ன செய்தது? 6 ரவுகள் இருப்பதாக காவல்துறை ஒரு கணக்கைச் சொல்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்தவர்கள் மீது இதுவரை குண்டர் சட்டம் போடப்பட்டதா? ஒன்றுமே இல்லாத வழக்குகளில் குண்டர் சட்டம் போடுகிறார்கள். இவ்வளவு பெரிய படுகொலை நடந்துள்ளது? ஏன் கைது செய்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாயவில்லை?
தமிழ்நாட்டில் பிரபல வழக்கறிஞர், பகுஜன் கட்சியின் மாநிலத் தலைவர், பல போராட்டங்களை மக்களுக்காக முன் எடுத்தவர் ஆம்ஸ்ட்ராங். எனக்குத் தெரிந்து 380 பேரை வழக்கறிஞர்களாகப் படிக்க வைத்துள்ளார். அவர் நினைத்தால், ஒரு எம்.எல்.ஏ அல்லது எம்பி ஆகியிருக்க முடியும். அவர் தேர்தல் அரசியலுக்கு வரவில்லை. சமூகப் பணிதான் முக்கியம் என்று வாழ்ந்தவர். அவரைப் போன்ற ஒரு தலைவரைக் கொண்டவர்கள் மீது குண்டர் சட்டம் போடாமல் தட்டிக் கழிக்கிறார்கள் என்றால், காவல்துறை மீது சந்தேகம் எங்களுக்கு வருமா? வராதா? ” என்கிறார்












Click it and Unblock the Notifications