"காட்டில் 25% ஆக்கிரமிப்பு" ஆளுநருக்கு ஏன் தர்பார் மஹால், கிளப்? எகிறும் திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா!
சென்னை: மக்கள் வரிப்பணத்தில் ஆளுநருக்கு காப்புக்காட்டுக்குள் அளவுக்கு அதிகமாக பெரிய இருப்பிடம் தேவையற்றது என்று திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் திமுக அரசுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே வருகிறது. குறிப்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி பொது நிகழ்ச்சிகளில் பேசும் கருத்துக்களுக்கு, அடுத்த முரசொலியில் திமுக கண்டனம் தெரிவித்து கட்டுரை எழுதுவது வாடிக்கையாக வருகிறது.
திராவிடம், புதிய கல்விக் கொள்கை, திருக்குறள், ஆன்மிகம், சனாதனம் என பல்வேறு விவகாரங்கள் பற்றி பல கருத்துக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். இதனால் ஆளுநருக்கு எதிராக திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஆளுநர் பற்றி ஸ்டாலினிடம் கேள்வி
அண்மையில் நீங்கள் திராவிட மாடல் ஆட்சி என்கிறீர்கள். ஒன்றிய பா.ஜ.க அரசு கவர்னரை வைத்து இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதை எதிர்கொண்டுதானே ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

மு.க.ஸ்டாலின் கூறிய பதில்
நியமனப் பதவியான ஆளுநருக்கு உரிய பொறுப்புகள், அதிகார வரம்புகள் என்ன என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு உரிய கடமைகள், அதிகார வரம்புகள் என்ன என்பதையும், நமது அரசியல் சட்டம் மிகத் தெளிவாகவே வரையறுத்துக் கூறியுள்ளது. அதைப் புரிந்து நடந்து கொண்டால் யாருக்கும் பிரச்சினை இல்லை. தேவையற்ற சர்ச்சைகளுக்கும் இடமிருக்காது என்று பதில் அளித்தார்.

இரட்டை ஆட்சி
இதுமட்டுமல்லாமல் அண்மையில் கேரளாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசு ஆளுநர் மூலம் மாநிலத்தில் இரட்டை ஆட்சி நடத்த முயற்சிக்கிறது என்று வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார். ஆளுநருக்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு, அண்ணா மூலம் முதலே அறிந்ததுதான்.

டிஆர்பி ராஜா ட்வீட்
இந்த நிலையில் திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஆளுநர் இருப்பிடம் குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் அக்கட்சி ஆதரவாளர்களிடையே வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பதிவில், ஆளுநர் என்ற பதவி தேவையில்லாத ஒன்று என்று பலரும் ஒப்புக்கொள்வர். அதே போல ஆளுநருக்கு ஒரு காப்புக்காட்டுக்குள் மக்கள் வரிப்பணத்தில் அளவுக்கு அதிகமாக பெரிய இருப்பிடமும் தேவையற்றது. காட்டில் 25% இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். எதற்காக தமிழக மக்கள் வரிப்பணத்தில் தர்பார் மஹால், கிளப் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications