குட்டி குட்டி நாடுகள் கூட திமிறி எழுந்ததே! இந்தியாவிற்கு என்னாச்சு? டிரம்பிற்கு எப்போ பதிலடி? செக்
சென்னை: இந்தியாவிற்கு எதிராக அபராதம் + வரி ஆகியவற்றை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். 50 சதவிகிதம் வரை அபாரதத்துடன் கூடிய வரியை டிரம்ப் அறிமுகம் செய்துள்ளார். இதற்கு இந்தியா எந்த மாதிரியான பதிலடியை கொடுக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

சின்ன நாடுகள் எல்லாம் கேள்வி கேட்டதே
டிரம்பிற்கு எதிராக சின்ன நாடுகள் கூட கேள்வி கேட்டு வருகின்றன. கனடா டிரம்பிற்கு பதிலடி தந்தது. அதோடு 24 மணி நேரத்தில் டிரம்ப் வரிக்கு பதிலடியாக கூடுதல் வரி விதித்தது. அண்டை நாடு சீனா கூட பதிலடி வரிகளை விதித்தது. இன்னொரு பக்கம் உக்ரைன் டிரம்ப் உடன் நேருக்கு நேர் மோதி வருகிறது. ரஷ்யாவை சரியாக கண்டிக்கவில்லை என்று உக்ரைன் டிரம்ப் உடன் சண்டைக்கு போனது. இத்தனைக்கு உக்ரைன் டிரம்ப் தயவை நம்பியே இருக்கிறது.
சமீபத்தில் வெள்ளை மாளிகையில் வைத்தே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டிரம்ப்பை விமர்சனம் செய்தார். ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியா இதுவரை பதிலடி தரவில்லை. மோடி எதுவும் டிரம்பிற்கு எதிராக வெளிப்படையாக பேசவில்லை. இந்தியா எந்த விதமான துணிச்சலான கருத்துக்களையும் பேசாமல் இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிற்கு அபராதம் + வரி
இந்த உத்தரவுக்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயரும். ஆரம்ப வரிகள் ஆகஸ்ட் 7 அன்று அமலுக்கு வரும் நிலையில், நேற்று முதல்நாள் அமலுக்கு வந்தது. இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் தவிர அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் பொருந்தும். ஆனால் டிரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி தரவில்லை.
இந்தியா பதிலடி தரவில்லை
இதுவரை இந்தியா எந்த விதமான எதிர் கருத்தும் சொல்லவில்லை. வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "அமெரிக்கா சமீப நாட்களில் ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியைக் குறிவைத்துள்ளது. எங்கள் நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம், எங்கள் இறக்குமதிகள் சந்தை காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் 1.4 பில்லியன் இந்திய மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"பல நாடுகள் தங்கள் தேசிய நலனுக்காகச் செய்யும் நடவடிக்கைகளுக்காக இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிக்க முடிவு செய்தது மிகவும் தவறானது, துரதிர்ஷ்டவசமானது. இந்த நடவடிக்கைகள் அநியாயமானவை, நியாயமற்றவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றும் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியது.
இந்தியா அறிக்கை - பதிலடி இல்லை
இப்படி ஒரே ஒரு அறிக்கை வெளியிட்டதோடு சரி .. இந்திய அதிரடி பதில் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. ஏற்கனவே அமெரிக்காவை சமாதானம் செய்ய சில அமெரிக்கா பொருட்களுக்கு இந்த வரியை குறைத்தது. போர்பன் விஸ்கி மீதான வரியை இந்தியா 150%ல் இருந்து 100% ஆக குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு Suntory's Jim Beam போன்ற பிரபல அமெரிக்க பிராண்டுகளின் இறக்குமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பொருட்களுக்கு, குறிப்பாக மதுபானத் துறையில் இந்தியாவின் நியாயமற்ற வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த சில நாளுக்குப் பிறகு இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டது.
போர்பன் விஸ்கியின் அடிப்படை சுங்க வரி இப்போது 50% ஆகவும், கூடுதலாக 50% வரியுடன் மொத்தம் 100% ஆகவும் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு முன்பு, இந்த இறக்குமதிகளுக்கு 150% வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வரி குறைப்பு போர்பனுக்கு மட்டுமே பொருந்தும், மற்ற மதுபான பொருட்களுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. அவற்றிற்கு தொடர்ந்து 150% வரி விதிக்கப்படும். ஆனால் டிரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி தரவில்லை.












Click it and Unblock the Notifications