‛‛அண்ணன்’’.. எடப்பாடியை வாய்நிறைய கூப்பிட்ட நடிகை கவுதமி.. அதிமுகவில் இணைந்தது ஏன்? முக்கிய விளக்கம்
சென்னை: பாஜகவில் இருந்து கடந்த ஆண்டு விலகிய நடிகை கவுதமி இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் என அழைத்த நடிகை கவுதமி, பாஜகவில் விலகிய பிறகு அதிமுகவில் இணைந்தது ஏன்? என்பது பற்றி விரிவாக தெரிவித்துள்ளார்.
நடிகையாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் நடிகை கவுதமி. இவர் பாஜகவில் சுமார் 30 ஆண்டுகள் வரை செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு அவர் திடீரென்று பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகியது ஏன்? என்பது பற்றி அப்போது விளக்கி இருந்தார். இதுதொடர்பாக அவர் அறிக்கையும் வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் பாஜகவை அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
அதாவது ‛‛2021 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டசபை தேர்தலில் வாய்ப்பு தருவதாக கூறினார்கள். ஆனால் கடைசியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும் என் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை அழகப்பன் என்பவர் மோசடி செய்தார். அவருக்கு கட்சியினர் உதவிக்கரம் நீட்டுகின்றனர். இதனால் பாஜகவில் இருந்து விலகுகிறேன்'' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் இன்று அவரை நடிகை கவுதமி திடீரென்று சந்தித்தார். அதன்பிறகு அவர் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். கவுதமியை எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றார். அதன்பிறகு நடிகை கவுதமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சில நாட்களுக்கு முன்பு நான் வேறு சில காரணங்களால் அந்த கட்சியில் (பாஜக) இருந்து விலகி வந்தேன். இப்போது நல்ல காரணங்களுக்காகவும், சரியான நேரத்தில் அதிமுகவில் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சேர்ந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு விஷயத்தை நான் பெருமைக்காக கூறவில்லை. என்னை நீங்கள் 30 முதல் 40 ஆண்டுகளாக பார்க்கிறீர்கள். பொறுப்பு இல்லாவிட்டாலும் கூட என்னை பொறுத்தமட்டில் ஒரு வேலை என்று தந்துவிட்டால் அதில் இறங்கி என்னால் வேலை செய்ய முடியும். அரசியலில் எனது ஈடுபாடு அப்படித்தான் இருந்துள்ளது.
இனி வரும் காலத்தில் அரசியலில் இன்னும் தீவிரமாக எனது செயல்பாடு இருக்கும். அதற்கான சரியான இடம் கிடைத்துள்ளதாக நான் முழுமையாக நம்புகிறேன். நான் அந்த கட்சியில் (பாஜக) இருந்து விலகி வந்ததற்கான காரணத்தை விளக்கமாகவே அறிக்கையாக தெரிவித்து இருந்தேன்'' என்றார்.
இதையடுத்து பத்திரிகையாளர் ஒருவர் ‛‛அதிமுகவில் இணைய உங்களுக்கு அழைப்பு வந்ததா? இல்லாவிட்டால் நீங்களே அதிமுகவில் இணைந்தீர்களா?'' என கேள்வி கேட்டார். அதற்கு கவுதமி, ‛‛உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அம்மா (ஜெயலலிதா) என் மனதில் எத்தனை வருடமாக இருக்கிறார் என்பது உலகத்துக்கே தெரியும். இது அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட விஷயம். அதிமுக என்பது ஜெயலலிதாவின் பார்வை, நடவடிக்கையால் மக்களை ஈர்த்த கட்சி. இப்போது ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக அப்படியே செயல்பட்டு வருகிறது. நான் மக்கள் சேவை செய்ய தான் கட்சியில் இருக்கிறேன். அதற்கான சிறந்த இடமாக அதிமுக இருக்கும்'' என்றார்.

இதையடுத்து பாஜகவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்ட நிலையில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கவுதமி, ‛‛ஏதாவது மூடி மறைந்துள்ளதா? உங்களுக்கே அனைத்தும் தெரியும். என் வாழ்க்கையில் எந்த முடிவாக இருந்தாலும் மனசாட்சிக்கு மாறுபட்ட முடிவாக இருக்காது. நான் அப்படித்தான் செயல்பட்டு வருகிறேன்'' என்றார்.
அதன்பிறகு ‛‛மக்கள் பணிக்காக அதிமுகவில் இணைந்துள்ளீர்கள் என சொல்கிறீர்கள். இதில் மக்கள் பணி என எதை மையப்படுத்தி சொல்கிறீர்கள். ஒரு அதிகார மையத்தை நோக்கி செல்ல விரும்புகிறீர்களா?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கவுதமி, ‛‛நான் முதல் படியில் இன்னும் ஏறவில்லை. நான் இந்த கட்சியில் பயணிக்க போகிறேன். நீங்களும், நாங்களும் சேர்ந்து பயணிப்போம். கட்சியில் இணைந்த என்னை எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றார்'' என்றார்.












Click it and Unblock the Notifications