3 முக்கிய துறைகளின் சொதப்பல்... சென்னை மூழ்க இதுவே காரணம்?
சென்னை: 'மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்று ஒருமுறை முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி கூறி இருந்தார். அதைப்போன்றுதான் சென்னையில் மழை நின்றும் இன்னும் வெள்ளநீர் வடியவில்லை என சில பகுதிகள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மிக்ஜம் புயல் சென்னையைப் புரட்டிப் போடும்வரை மக்கள் இந்த ஆண்டு மழை வெள்ளம் பீதிக்குள் சிக்காமல் மிகத் தைரியமாக இருந்தனர்.

ஆனால், மிக்ஜம் அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கிவிட்டது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் மட்டும் 2000 மிமீ மழை பெய்துள்ளதாக வெதர்மேன் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 4 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டு, கழிவுநீர் கால்வாய்கள் மிக நல்ல முறையில் சீரமைக்கப்பட்டுள்ளன. எனவே ஒரு சொட்டு நீர்த் தேங்காது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய ஒரு பழைய காணொளியை நெட்டீசன்கள் பலரும் இந்த மழை வெள்ளக்காலத்தில் மறுபடியும் சுற்றலுக்கு எடுத்து விட்டனர்.
அதன்பிறகு மழைநீர் வடிகால் பணிகளுக்காகச் செலவு செய்யப்பட்ட தொகை 4 ஆயிரம் கோடியல்ல; ரூ 5,166 கோடி. அதில் ரூ 2,191 கோடி மதிப்பிலான பணிகள் மட்டுமே செய்து முடிக்கப்பட்டுள்ளன என்று விளக்கம் அளித்தார்.

எத்தனை கோடி செலவானது என்பது பிரச்சினை இல்லை. இந்த மழைக்காலத்தில் ஒரு மாநகரத்தை மூன்று துறைகள் சேர்ந்து சுற்றலில் விட்டதே காரணம் என்று இப்போது தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.
அந்த 3 துறைகள் எவை? ஒன்று சிஎம்டிஏ. அதாவது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம். இரண்டாவது தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை. மூன்றாவது, பெருநகர சென்னை மாநகராட்சி. இந்த மூன்று துறைகளும் சேர்ந்துதான் சென்னை மக்களைச் சுற்றலில் விட்டுவிட்டதாக ஆங்கிலப் பத்திரிகை நடத்திய புலனாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் என்ன சிக்கல்?
பெருநகர வளர்ச்சிக் குழுமம்தான் சென்னை விரிவாக்கம் அல்லது சென்னை மறுவரையறை செய்யும் திட்டங்களைத் தீட்டிவருகிறது. அப்படி மறுவரையறை செய்யும் போது நீர்நிலைகள் அல்லது விளைநிலங்களை வணிக பயன்பாட்டிற் காக, குடியிருப்பு பகுதிகளாக மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கிவிடுகிறது.

அதாவது, அப்படி மறுவரையறை செய்யும் ஒரு கறாரான விதிமுறையை இந்தத் துறை கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆட்சியில் மட்டும் இப்படி நடக்கிறது என்று கூறமுடியாது. பல ஆண்டுகளாக இந்த நிலைமையை நீடித்துவருகிறது என்ற புகார் இப்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
பல ஆண்டுகளாக இப்படிக் கண்டிப்பான விதிமுறைகள் கடைப்பிடிக்கப் படாததால் பல அடுக்குமாடி கட்டங்கள் நீர்நிலைகளுக்கு ஆழமாகக் காலூன்றிவிட்டன என்கிறார் நீர்வளத்துறையில் ஊழியராக இருந்த அனுபவம் பெற்ற ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி ஒருவர்.
இந்த விதிமுறைகள் சரியாக மறுவரையறை செய்யப்பட வேண்டும். சர்வே எண்களின் அடிப்படையில் நீர்நிலைப் பகுதிகள் கண்டறியப்பட்டு அவற்றைப் பாரபட்சம் பார்க்காமல் அகற்றியாக வேண்டும் என்கிறார் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கும் பேட்டி அளித்துள்ள சிஎம்டிஏவின் திட்டக்குழுவில் தலைமை பொறுப்பிலிருந்த ஓய்வுபெற்ற அதிகாரியான என் வி ரகுநாத்.

மேலும் இவர் சென்னை மாநகரம் மறுவரையறை செய்யப்படுவதாகச் சொல்வதே ஒரு ஏமாற்று வேலை. அப்படி மறுவரையறை செய்யப்படவுள்ளதாக எப்போதாவது ஒரு விளம்பரம் பத்திரிகைகளில் வெளியிடப்படும்.
அப்படி அரசு முன்மொழியும்போது அதற்கு எத்தனைப் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்? எத்தனைப் பேர் ஆதரவு தெரிவித்தனர் என்ற புள்ளிவிவரங்கள் தெளிவாகச் சொல்லப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டுகிறார்.
நீர்நிலைகள் சுருங்கிப்போனதே 2015 வெள்ளத்திற்குப் பெரிய அளவில் காரணம். அதற்கு சிஎம்டிஏ தான் பொறுப்பு என்றும் சொல்லும் இவர், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வெள்ள மேலாண்மையின் செயல்திறன் தணிக்கை குறித்த 2017 சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஒரு தகவலை நினைவுபடுத்துகிறார்.

அதாவது 1979 ஆம் ஆண்டில் 90.88 சதுர கிலோமீட்டராக இருந்த சிஎம்ஏ பகுதி 2016 இல் 541.14 சதுர கிலோமீட்டராக உயர்ந்துள்ளது எனச் சொல்லி இருக்கிறது அந்த அறிக்கை. ஆனால் அதே சமயம் நீர்நிலைகள் 100.98 சதுர கிமீ முதல் 91 கிமீ 3 ஆகக் குறைந்துள்ளது அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும் என்கிறார்
இதைப்போலவே சென்னையின் பசுமைப் பரப்பளவானது 548.53 சதுர கிலோமீட்டரிலிருந்து 442.43 சதுர கிலோமீட்டராகச் சுருங்கிவிட்டது என்று கூறப்படுகிறது.
நீர்வளத்துறை (WRD) செய்ததோ அதிக செலவு, பலனோ குறைவு
சென்னையில் உள்ள மிக முக்கியமான ஆறு கூவம். அடுத்து அடையாறு. இந்த நீர் வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதற்காகப் பல நூறு கோடிகளை நீர்வளத்துறைச் செலவு செய்துள்ளது.

கிட்டத்தட்ட 788 கோடி எனக்கூறப்படுகிறது. அடையாறு பாயும் நீர்வழிப் பாதைகளில் மட்டும் 9,539 ஆக்கிரமிப்புகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. அதில் இதுவரை 4,828 ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட வில்லை என்பது மிக முக்கியமான தகவல். இது தொடர்பாக 249 வழக்குள் நீதிமன்றத்தில் உள்ளன. இந்த ஆற்றின் நீளம் ஏறக்குறைய 42 கிலோமீட்டர்.
இந்த ஆற்றுவழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் வந்த விளைவாகவே இந்த வெள்ளத்தின்போது திடீர் நகர் வெள்ளத்தில் மூழ்கியது. அப்படியே தி.நகர், சைதாப்பேட்டை, அசோக் நகர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் வெளியேறுவது தடை ஏற்பட்டது.
அடையாறு பாதைகளில் உள்ள குடியேற்றம் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து இனிமேலாவது ஒரு தீர்வை காண வேண்டும். அப்படி மீட்டெடுத்துக் குறைந்தது 15 ஆண்டுகளுக்கு எந்த பிரச்சினையும் வராத அளவுக்கு ஒரு மறுவாழ்வுத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் சிலர் நம்மிடம் சொல்கிறார்கள்.

இதற்கு அடுத்தது கூவம் ஆறு. இந்தக் கூவம் ஆற்றுப் பகுதிகளில் மட்டும் 14,257 ஆக்கிரமிப்புகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொடர்பான வழக்குகள் மட்டும் கிட்டத்தட்ட 470 உள்ளன.
கூவம் ஆற்றின் மொத்த நீளம் 65 கிமீட்டர். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 33 கால்வாய்கள் உள்ளன. நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 16 கால்வாய்கள் உள்ளன என்று ஒரு புள்ளிவிவரம் நமக்குக் கிடைத்துள்ளது.
மேலும் புழல் ஏரி பகுதியில் 250 ஆக்கிரமிப்புகளும் ரெட்டேரியில் 150 ஆக்கிரமிப்புகளும் உள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் (CRRT) சார்பில் கூவம் ஆற்றின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டத்தின் செயல்படுத்தப்பட்டது. அதன் மூலம் கூவம் ஆற்றின் கரையோரங்களில் கொட்டப்பட்டிருந்த 100,485 டன் குப்பைகளை ரூ.6.25 கோடி செலவில் அகற்றப்பட்டன.
முன்பே குறிப்பிடத்தைப்போன்று கூவம் ஆற்றின் கரையோரத்தில் மொத்தம் 14,257 குடும்பங்கள் 'ஆக்கிரமிப்பு' செய்துள்ளதாக அடையாளம் காணப்பட்டது. இதுவரை, கூவம் கரையோரம் ஆக்கிரமிப்பு செய்த 13,481 குடும்பங்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு (TNUHDB) சொந்த மான குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அரசுத் தரப்பில் ஒரு அதிகாரி நமக்குத் தகவல் தருகிறார்.
நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகள் சார்ந்து தமிழ்நாடு அரசு சில விளக்கங்களை முன்வைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் நிலவரத்தின்படி சில தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

கூவம் ஆற்றின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (சிஆர்ஆர்டி) திட்டத்தின் கீழ், ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவும், குப்பை மற்றும் திடக்கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கவும் 23.92 கி.மீ நீளத்திற்கு கூவம் ஆற்றின் கரையோரம் சுற்றுச்சுவர், தடுப்பு வேலி அமைக்கும் வேலைகள் நடைபெற்றன. இதுவரை 20.54 கி.மீ நீளத்திற்குச் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மந்தநிலை:
சென்னை மாநகராட்சிக்கு 2015 ஆம் ஆண்டிலேயே சரியான கற்றிருந்தது. அந்த அனுபவத்தைக் கொண்டு அதிக உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக மின் இணைப்புகள் அனைத்தையும் ஒரு நாள் முழுக்க துண்டித்து வைத்தது.
இது மிகச் சிறப்பான பணி. அதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கூடவில்லை. முற்றிலுமாக இல்லை என்றாலும், குறைந்த அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
ஆனால், மழைநீர் வடிகால் பணிகளை மிக வேகமாகத் தொடங்கிய சென்னை மாநகராட்சி ஒரு கட்டத்திற்குப் பின்பு அதில் சுணக்கம் காட்ட ஆரம்பித்தது. அது ஏன் என்று தெளிவான விளக்கம் கூறப்படவில்லை.
மழை தொடங்கிய பிறகு ஒரே வாரத்தில் பணிகளை முழுமையாக முடிக்கவில்லை என்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது.

அதனால் பல ஒப்பந்ததாரர்கள் அவகாசம் கிடைக்கவில்லை. அவர்கள் ஏனோ தானோ என்று வேலைகளை அவசரகதியில் முடிக்க முயற்சி செய்தனர் என்று புகார் சொல்கிறார் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெயராமன்.
மொத்தம் 33 கால்வாய்கள் இருக்கிறது என்றால், அதன் நீர் வழிப்பாதைகள் சரியாக இருக்கிறதா என்றும் அதன் நீளம், அகலம் எல்லாம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முறையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதா என்று மாநகராட்சி ஆய்வு சார்பில் ஆய்வு முழுமையாக நடத்தப்படவில்லை.
திரும்பவும் சொல்கிறோம். முழுமையாக நடத்தப்படவில்லை. அந்த மெத்தனமும் ஒரு முக்கிய காரணம் என்கிறார் இந்தத் துறையில் அனுபவம் பெற்ற பொறியாளர் ஒருவர்.












Click it and Unblock the Notifications