"ஆக்ஷன்".. பேப்பரை பார்த்தாலே பயமா இருக்கு.. "அதிபருக்கு" இவர் ஏன் துணை போகிறார்?: செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, ஆன்லைன் ரம்மி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: உயிர்குடிக்கும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏதேனும் உயிர் போயிருக்குமோ என்று ஒவ்வொரு நாளும் செய்திதாள் பார்ப்பதற்கே அச்சமாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதன் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பாஜகவின் நோக்கத்தை முற்றிலுமாக நிறைவேற்றுகிறார் ஆளுநர் என்றும் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை, தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பி இருக்கிறார் ஆளுநர் ரவி... கடந்த 4 மாதங்களாக கிடப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி திருப்பி அனுப்பியுள்ளது.
கூடுதலாக விளக்கம் அளிக்கும்படி, அரசுக்கு ஆளுநர் வலியுறுத்தியிருக்கிறார்... இந்த விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தினகரன் கொதிப்பு
அவசரச் சட்டம் காலாவதி ஆவதற்கு முன்பாக சட்ட முன்வரைவை நிறைவேற்றி அனுப்பியும் ஆளுநர் ரவி 142 நாட்கள் கழித்து தற்போது திருப்பி அனுப்பி வைத்து இருப்பது கண்டனத்திற்குரியது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்... ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தெரிவித்துள்ளார்.

ஊறித் திளைப்பு
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதுதான்: மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செயல்பாடுகளையும், தமிழகத்தின் வளர்ச்சியினையும் பொறுத்துக் கொள்ளமுடியாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதனுடைய சித்தாந்தங்களில் ஊறித் திளைத்துள்ள பா.ஜ.க.வும் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் ஜனநாயக விரோதமாக என்னென்ன செயல்கள் செய்யமுடியுமோ அதையே நோக்கமாக கொண்டுள்ளது.

வடமாநில தொழிலாளர்
சில தினங்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்கள் தாக்குப்படுவதைப் போன்ற போலியான, அவதூறான காணொலியை இந்திய அளவில் பா.ஜ.க.வின் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் பதிவிட்டு தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்திடவும், ஆட்சிக்கு களங்கம் கற்பித்திடவும் முனைந்தார்கள். அது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இங்குள்ள பா.ஜ.க.வினரும் தொடர்ச்சியாக அதைப் பற்றியே பேசி பிரச்சனையை தூண்டும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் சட்டமன்றப் பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி, 4 மாதம் 11 நாட்கள் கடந்த பின்பு புதியதாக விளக்கம் கேட்டு ஆளுநர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பியிருக்கிறார்.

பயமா இருக்கு
ஆளுநரின் இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. இதன்மூலம் ஆளுநர் இம்மசோதா நிறைவேற்றுவதில் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார். தமிழ்நாட்டு மக்களின் முக்கிய வாழ்வாதாரா பிரச்சினையாக உள்ள ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் பா.ஜ.க.வின் நோக்கத்தை முற்றிலுமாக நிறைவேற்றுகிறார் ஆளுநர். உயிர்குடிக்கும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏதேனும் உயிர் போயிருக்குமோ என்று ஒவ்வொரு நாளும் செய்திதாள் பார்ப்பதற்கே அச்சமாக இருக்கிறது.

வாய்கிழிய பேச்சு
தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது மனிதத் தன்மையற்ற செயல். மிகுந்த கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு மேடையிலும் இந்தியாவை பற்றியும், சனாதானத்தைப் பற்றியும் வாய் கிழிய பேசும் ஆளுநர் அவர்களுக்கு உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கு தடையாக இருப்பது எது? ஆன்லைன் ரம்மி விளையாட்டு அதிபருக்கு ஆளுநர் துணைபோவது ஏன்? ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்தெழும் காலம் வெகுதூரத்தில் இல்லை" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications