பிளேட் என்றாலே.. பக்கிரிதானா? நீங்க இப்படி எழுதலாமா கமல் சார்? சர்ச்சையாகும் பத்தல பத்தல பாடல்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் எழுதி விக்ரம் படத்தில் வெளியாகி இருக்கும் "பத்தல பத்தல" பாடல் வரிகள் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன.
Recommended Video
பக்கத்துல இருக்குற குப்பத்து பசங்க எங்கள டீஸ் பண்றாங்க சார்.. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வந்த முதல்வன் படத்தில் வரும் வசனம் இது. இந்த படம் என்று இல்லை.. கடந்த சில வருடங்கள் முன்பு வரை கூட தமிழ் படங்களில் சேரி மக்கள், குப்பத்து பசங்க என்றாலே ரவுடிகள், திருடர்கள், கெட்டவர்கள் என்றுதான் காட்டப்பட்டு வந்தனர்.
சுருட்டை முடி.. கருப்பு நிறம்.. கலர் சட்டை போட்டு இருந்தாலே அவன் கெட்டவன், திருடன் என்ற கண்ணோட்டம்தான் தமிழ் சினிமா முழுக்க பரவி இருந்தது.

வடசென்னை அரசியல்
அதிலும் வடசென்னை ஸ்லாங்கில் தமிழ் பேசினாலே.. அவர் கண்டிப்பாக கெட்டவன்தான் என்ற பிம்பம் பல படங்களில் வலிந்து திணிக்கப்பட்டது. சென்னையின் பூர்வகுடி இசையான கானாவில் பல அழகிய அம்சங்கள், வாழ்வியல் இருந்தாலும் கூட கானா பாடுறவன் பொறுக்கி என்று போன்ற பிம்பம் பல படங்களில் காட்டப்பட்டுள்ளது. இப்படி வடசென்னை மக்களை குற்றவாளிகளாக படத்தில் காட்டுவது நிஜ வாழ்க்கையிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

நிஜத்திலும் மோசம்
ஆம்.. நிஜத்திலும் நீளமான முடி வைத்து இருந்தால் அவர் பிராடு, திருடன், வடசென்னை மொழியில் பேசினால்.. அவன் கெட்டவன், அறிவு இருக்காது என்ற பிம்பம் ஏற்பட்டது. இரவில் தனியாக பைக்கில் செல்லும் பல வடசென்னை இளைஞர்கள் சந்தேக கேசில் கைது செய்யப்படுவதற்கு பின்பும் கூட இதே பொதுப்புத்திதான் இருக்கிறது. புல்லிங்கோ என்பதையே எதோ பொறுக்கிகளை சித்தரிக்கும் வார்த்தையும் மாற்றி உள்ளனர். எல்லா பிரிவிலும்.. நல்லவர்கள் கெட்டவர்கள், இருப்பது போலத்தான் வடசென்னையில் இருக்கிறார்கள். ஆனாலும் வடசென்னை மக்களை கெட்டவர்களாக சித்தரிக்கும் பொதுப்புத்தி இன்னும் போகவில்லை.

பா. ரஞ்சித்
ஆனால் இது இயக்குனர் பா. ரஞ்சித் வந்தே பின் வெகுவாக மாறி இருக்கிறது. அட்டகத்தி படம் தொடங்கி சர்பேட்டா பரம்பரை வரை அவர்களின் வாழ்க்கையை மிக அழகாக காட்டி.. அதுவரை இருந்த பொதுப்புத்தியில் நீல பெயிண்டை அடித்தார் பா. ரஞ்சித். காளி, கபாலி என்றாலே வில்லன் என்பதை மாற்றி அந்த பெயர்களை ஹீரோக்களுக்கும் வைத்தவர் பா. ரஞ்சித். பல வருட பாரம்பரியங்களை உடைத்து நொறுக்கியவர் பா. ரஞ்சித்.

பாக்சிங் வரலாறு
அதன்பின்பே வடசென்னையின் பாக்சிங் வரலாறு, அவர்களின் கானா , ஹிப்ஹாப் கலாச்சாரம், நடன திறமை, கால்பந்து திறமை என்று பல விஷயங்கள் மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. மக்களின் பொதுப்பார்வையை பா. ரஞ்சித் வெகுவாக மாற்றினார். ஆனால் இப்போது நடிகர் கமல்ஹாசன் எழுதி வெளியாகி இருக்கும் விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடல் மீண்டும் வடசென்னை வாசிகளை திருடர்களாக சித்தரிக்க முயன்றுள்ளது.

குத்து சாங்
கந்தசாமி, ராமசாமி பாடல் வைப்.. நல்ல தரமான குத்து.. கமலுக்கு நீண்ட காலத்திற்கு பின் ஒரு சூப்பர் ஓப்பனிங் சாங் என்று இந்த பாடலுக்கு இணையத்தில் பலர் வைப் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதே சமயம் "சோக்கா திருடி.. பிளேடு பக்கிரி" என்று இந்த பாடலில் வரும் வரிகளும் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. வடசென்னை வாசிகளை திருடர்கள் என்று அதே பழைய பொது புத்தியுடன் சித்தரிக்கும் விதமாக வரிகள் அமைந்து இருக்கின்றன.

பிளேடு பக்கிரி
அது என்ன சார்.. பிளேடு என்றால் உங்களுக்கு பக்கிரிதான் நினைவு வருமா? நீங்கள் இப்படி எழுதலாமா சார் என்று கமல்ஹாசனை நோக்கி பலர் இணையத்தில் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். திருடன், பிளேடு என்றாலே வடசென்னை மொழியில்தான் பட வேண்டுமா? இன்னும் எத்தனை காலத்திற்கு வடசென்னை வாசிகளை இப்படி மோசமாக சித்தரிப்பீர்கள் என்ற கேள்வி கமல்ஹாசனை நோக்கி எழுப்பப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் வேண்டாம்
இதை வேறு யாரோ ஒரு அரசியல் தெரியாத.. political correctness இல்லாத ஆள் எழுதி இருந்தால்.. அப்படியே கடந்து சென்று இருக்கலாம். ஆனால் தன்னை முற்போக்கு வாதி என்று அடையாளப்படுத்தும் கமலஹாசன் என்ற அரசியல்வாதியும், நடிகருமான ஒரு முன்னோடி எழுதுவதுதான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடசென்னை கானா பாடல்கள் பல இப்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

போதும் சார்
அடிச்சி புடிச்சி மேலே வந்தா காட்ட மாட்டோம் நாங்க பந்தோம்.. நாங்களும் மேலே வருவோம் கண்டிப்பா நீ யோசிப்ப என்று (ஸ்டவ்வு மேலே கடாயு) கானா பாடல்களில் பல சிறப்பான வரிகள் வர தொடங்கிவிட்டன. ஆனாலும் இப்பவும் பிளேட் என்றாலே பக்கிரிதான் என்று கமல் போன்ற சினிமா உலக ஜாம்பவான் லிரிக்ஸ் எழுதுவதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... மக்களுக்காக பல இடங்களில் குரல் கொடுத்த கமல்.. இப்படி ஒரு வரியை எழுதும் முன் கொஞ்சம் யோசித்து எழுதி இருக்கலாம்!












Click it and Unblock the Notifications