Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொன்னா சொன்னதுதான்.. தேர்தல் வாக்குறுதிகளை தட்டாமல் நிறைவேற்றும் திராவிட கட்சிகள்.. நாடே கவனிக்குதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலுக்கும் வாரி வழங்கிய, வாரி வழங்குகிற தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் இப்போதுதான் இந்தியாவின் பிற அரசியல் கட்சிகளுக்கும் மாநிலங்களுக்கும் 'தேர்தல்' ஆயுதமாக உருமாறத் தொடங்கி உள்ளன.

நாடு விடுதலை அடைந்த பின்னர் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தல் தொடங்கி தற்போது வரை ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்படும்; தேர்தல் அறிக்கைகளில் ஏராளமான வாக்குறுதிகள் இடம் பெறும். தேர்தல் அறிக்கைகளை மையமாக வைத்து அல்லது கவனத்தில் வைத்து வாக்காளர்கள் வாக்களிக்காமல் கடந்து போன கடந்த காலங்களும் உண்டு.

Why National Parties BJP Congrss follow Dravidian Parties Election Manifesto

திராவிட அரசியல் வேர்பிடித்த அண்ணா காலம் தொடங்கி தற்போதைய முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி காலம் வரை ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் அறிக்கை என்பது பேசுபொருளாகவும் கவனத்தில் கொள்ளக் கூடியதாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக மறைந்த பெருந்தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சட்டசபை தேர்தல்களுக்கான தேர்தல் அறிக்கைகள் மிகுந்த கவனத்துடன் மிகுந்த ஈர்ப்புடன் தயாரிக்கப்படும்; ஆட்சியில் அமர்ந்த உடன் அந்த திட்டங்களை செயல்படுத்தி மக்கள் ஆதரவைத் தக்க வைப்பதிலும் இரு கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவையும் இல்லை.

தமிழகத்தில் கல்வித்துறையில் இலவச காலணிகள், பற்பொடி தொடங்கி இன்றைய விலையில்லா மடிக் கணினி-- லேப்டாப்கள் வரை அத்தனையும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற பிரதான அம்சங்கள்தான். குடிசைக்கு ஒரு விளக்கு தொடங்கி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என பயணித்து 100 யூனிட்டுகளுக்கு இலவச மின்சாரம் வரை தேர்தல் அறிக்கையில் தரப்பட்ட வாக்குறுதிகள்தான். இலவச மிக்சி கிரைண்டர், இலவச கலர் டிவி, இலவச ஆடு மாடுகள் ஆகியவையும் திராவிட கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையில் அறிவித்தவைதான்.

திராவிட அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் சமூகத்தின் ஒவ்வொரு படிநிலை மக்களையும் இலக்கு வைத்து வாக்குறுதிகளை அள்ளி வழங்கின. இந்தியாவிலேயே பெண்களுக்கான அரசு திட்டங்கள் மிக அதிகமான அளவில் செயல்படுத்தப்படுவது தமிழ்நாட்டில்தான். சுருக்கமாக ஒற்றை வரியில் கருவறை முதல் கல்லறை வரையில் பெண் சிசு தொடங்கி முதியோர் பென்ஷன் வரை வாக்குறுதிகளை வாரி வழங்கி நிறைவேற்றியும் அரவணைத்துக் கொண்டிருப்பது திராவிட கட்சிகள்தான்.

சமூக நலத் திட்டங்களில் ஆகப் பெரும் கவனம் செலுத்தி அதை நிறைவேற்ற மெனக்கெடவும் செய்கின்ற திராவிடக் கட்சிகள், எப்போது சமூக நீதி- மாநில உரிமை- மொழிப் பாதுகாப்பு, ஈழத் தமிழர் நலன் ஆகிய கவசங்களை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்வதும் வழக்கம். சமூக நலத் திட்டங்களை நிறைவேற்ற முடிந்த திராவிட அரசுகளால், மாநில உரிமைகளை மீட்டு, மாநில சுயாட்சியை வென்றெடுக்க முடியாமல்தான் இருக்கின்றன.

தமிழ்நாட்டின் திராவிட அரசியல் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் மாறி தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கி அதை நிறைவேற்றியதால்தான் 2006-ம் ஆணடு சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை, கதாநாயகன் என போற்றப்பட்டது. எப்படி இலவச கலர் டிவி திட்டம், இலவச மிக்ஸி கிரண்டர், பெண்களுக்கான தாலிக்கு தங்கம், கர்ப்பிணி பெண்களுக்கான நிதி உதவி திட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதேபோல பெண்களுக்காக ரூ1,000 உதவித் திட்டம் இந்தியா முழுவதும் மிகவும் கவனம் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் 2021 சட்டசபை தேர்தலில் திமுகதான் இந்த வாக்குறுதியை வழங்கியது. கடுமையான நிதிச் சுமையால் சற்றே தாமதமானாலும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது பெண்களுக்கான மாத நிதி உதவித் தொகை திட்டம், இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடகாவில், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க காரணமாக இருந்தது மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அறிவிப்புகளுடனான தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள். சொன்னதைச் செய்வோம் என்பது திமுகவின் முழக்கம். அதாவது தேர்தல் அறிக்கையின் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்பதுதான் அது. இதனை கட்டாயம் செய்தாக வேண்டிய நிலைக்கு பிற மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்த் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசியல் கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன என்பதுதான் யதார்த்தம்.

பொதுவாக தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளும் வாக்குறுதிகளும்தான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்; லோக்சபா தேர்தல் கால தேர்தல் அறிக்கைகளும் வாக்குறுதிகளும் கடந்து போகக் கூடிய ஒன்றாக, சாத்தியங்களுக்கு அப்பாலானவையாகவே இருக்கும். ஏனெனில் திராவிட கட்சிகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் ஒரு பங்குதாரராக மட்டுமே இடம் பெறுவதும்; 'தீர்மானி'க்கிற சக்திகளாக வேறு ஒரு படிநிலையை எட்டாததும்தான் இந்த போக்குக்குக் காரணமாகும். லோக்சபா தேர்தலில் தங்களது கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸோ பாஜகவோ ஆட்சியில் அமர்ந்து அதற்கு நெருக்கடி கொடுத்து உரிய திட்டங்களை, உரிமைகளை திராவிட கட்சிகள் பெற்றும் மீட்டும் கொடுத்துவிட்டால் அப்போதுதான் லோக்சபா தேர்தல் கால தேர்தல் அறிக்கைகளும் நாடே உற்றுப் பார்க்கும் 'களமாக' இருக்கும் என்பதுதான் அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+