வடகிழக்கு பருவமழை வலுகுறைந்து தொடங்குவது ஏன் ? மெரினாவில் சுழல் ஏற்பட்டது எப்படி? வானிலை மையம்
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் வலுவற்று காணப்படும் என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியிருப்பதாவது: அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. மேலும் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக் கடலையொட்டி வரும் 21 ஆம் தேதி உருவாகக் கூடும்.

இந்த இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையில் தென்னிந்திய பகுதிகளில் வலு குறைந்து காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொருத்தமட்டில் வரும் 23 ஆம் தேதி வரை தெற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வங்கக் கடலை பொருத்தமட்டில் தெற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு 21 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை செல்ல வேண்டாம். அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொருத்தவரையில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தமட்டில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இன்றுடன் நிறைவடைகிறது. தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து தென்னிந்திய பகுதிகளில் காற்று வீசக் கூடிய நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்து வரும் 3 தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் தொடங்கும்.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20 தேதிகளில் தொடங்கும். இது 7 நாட்கள் முன்போ, பின்போ வந்தாலும் இயல்பானதுதான். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் பெய்த மழையின் அளவு 354 மி.மீ. இயல்பு அளவு 328 மி.மீ. இது இயல்பை விட 8 சதவீதம் அதிகம். சென்னை மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு 779 மி.மீ. காலகட்டத்தின் அளவு 448 மி.மீ. இது 74 சதவீதம் இயல்பை விட அதிகம்.
வடகிழக்கு பருவமழையால் பலன் பெறக் கூடிய தமிழகம், கேரளா, தெற்கு கர்நாடகா, தெற்கு ஆந்திரா, ராயலசீமா ஆகிய 5 பகுதிகளிலும் இயல்பான மழையே இருக்கும். இந்த 5 பகுதிகளுக்கும் மழையின் இயல்பு அளவு 33 செ.மீ. எதிர்பார்ப்பது 29 செ.மீ. முதல் 37 செ.மீ. வரை எதிர்பார்க்கிறோம்.
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் சூறாவளி காற்று தொடர்பான வீடியோவை பார்த்தோம். ஆனால் அதன் அளவு குறித்து கண்டுபிடிக்க முடியவில்லை. எதிர் எதிர் காற்றுகள் வேகமாக வீசிய போது குறுகிய பகுதியில் சூறாவளி காற்று வீசியுள்ளது. பரந்த மணல் வெளியில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே அந்த சுழல் காற்று ஏற்பட்டது. எனவே அதுகுறித்த டேட்டா இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications